ஆணை சிறுமைப்படுத்துவதில் கைதேர்ந்தவள் பெண்

ஆணை சிறுமைப்படுத்துவதில் கைதேர்ந்தவள் பெண்

ஏனெனில் அவன் எவ்வளவு பெரிய ஆணாக இருந்தாலும் அவனுடைய சிறுமையை அவள் அறிவாள்.ஊரே கொண்டாடும். அவன் பெரிய மலை போல, மாமலை போல நின்று கொண்டிருப்பான்.ஒரு கணத்திற்குள் அவனைச் சுருக்கியெறிந்து விடுவாள்.அது அவளது கதாபாத்திரம் .இதனை அறிந்து கொண்ட ஆண்கள் பக்குவம் அடைந்து விடுகிறார்கள்.துரதிர்ஷ்டம் என்னவெனில் தள்ளாத முதுமையில் மட்டுமே ஆணை இந்த பக்குவம் வந்து சேருகிறது .அதனால் அதன் பின்னர் ஒரு பலனும் கிடையாது என்றான பிறகு. அவள் இதனை அறிந்து செய்கிறாள் என்று சொல்லமுடியாது.பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடந்து அவளை வந்தடைந்திருக்கும் தொழில் நுட்பம் இது.
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான முரண்பாடு சிறுமைப்படுத்துவதிலும்,சிறுமைப்படுவதிலும் இருந்தே தொடங்குகிறது.சிறுமையே தன் நிஜ உருவம் என்பதை ஆண் அறிவதில் முடிவடைகிறது.
கோயில் சமபந்தி ஒன்றில் நாங்கள் அமர்ந்திருந்தோம் .வயதான சாமியார் மனைவியுடன் எங்களுடன் அமர்ந்திருக்கிறார்.அவரைப் பார்த்தாலே தேஜஸ்.அருகிலிருந்த சிலரிடம் அவர் சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்.உண்மையாகவே மிகவும் பக்குவதுடன்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார்.கேட்பவருக்கு பயன் மிக்க விஷயங்கள்தான் அவர் பேசியவை.அவரைச் சுற்றி இருந்த பலரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அந்த அம்மா அவரிடம் சன்னமான குரலில் " தெரியும் உம்மை ; பேசாமலிரும் "என பதற்றம் ஏதுமற்ற தொனியில் மெதுவாகக் கூறியதுதான் தாமதம் கொதித்துப் போனார் சாமியார்.உள்ளுக்குள் பொறியில் அடி வாங்கியவரை போன்று "உன்னுடன் இவ்வளவு காலம் வாழ்ந்ததற்கு என்னைச் செருப்பால் அடிக்க வேண்டும்" என்று கொந்தளித்தார்.இதனைச் சொன்ன பிறகு அம்மை கொஞ்சம் கூட அசையவேயில்லை.கற்சிலை போலிருந்தார். ஆரம்பத்தில் சாமியாரிடமிருந்த தெய்வம் சட்டென அகன்று வேறொரு விகாரமான தோற்றம் எழத் தொடங்கியது.அவரை வியந்து பார்த்தவர்கள் விலகி தங்கள் காரியங்களை பார்க்கத் தொடங்கினார்கள்.அம்மையார் நிம்மதியானார்.
அந்த தம்பதிகளுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும்.இத்தனை வயதிற்கு பின்னரும் அவர்கள் முரண்படுவதை கண்ட எனக்கு நமது முரண்பாடுகள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது.சாமியாரின் கொந்தளிப்பும் அம்மையாரின் அமைதியும் அசாதாரணமாக இருந்தன.நிச்சயமாக வாழ்வு முழுதிலும் அந்த அம்மையார் எப்படி அவரை வெற்றி கொண்டிருப்பார் என்பது துல்லியமாக எனக்கு விளங்கியது.இதனை வைத்து இது மட்டுமே அவள் குணம் என்றெல்லாம் மதிப்பிடவும் இயலாது.அவரை பிறர் யாரேனும் சிறுமைப்படுத்தினால் அவளுடைய அவதாரம் நேரெதிராகக் கூட அமையலாம்.
அப்பாவுக்கு காட்டும் முகத்தை அவள் கணவனுக்கு காட்டுவதில்லை.மகனிடம் காட்டும் முகம் மற்றவர்களால் அறிய இயலாதது.ஏன் கணவனோ ,தந்தையோ கூட அதனை அறிந்து விட இயலாது .அவள் மகனை சிறுமைப்படுத்த முடிவெடுத்து விட்டாலோ தகப்பனால் கூட அதனை தாங்கிக் கொள்ள இயலாது.
அவளுடைய முழு விகாரத்தைக் கண்டவர்கள் "இவள் இப்படித்தான் இருப்பாள்" என்று நம்பினால் இன்னொரு புறத்தில் அருளும் அன்பும் கசிய நின்று கொண்டிருப்பாள் பெண் .

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"