பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே வற்புறுத்தக் கூடாது

பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே  வற்புறுத்தக் கூடாது

சமத்துவம்,சம உரிமை போன்ற பொது நியதிகளும் மனிதனின் நீண்ட தீவிரமான பயணங்களின் மூலம் கண்டடைந்தவைதாம்.பொது நியதிகளைக் கடைப்பிடிப்பதில் உள்ள நெருக்கடிகளை பிரச்சனைகளை  திறந்த மனதோடும்,நேர்மையுடனும்  விவாதிக்கவேண்டும் .விவாதிப்பது கண்டடைந்த பொது நியதிகளை நோக்கி சில அடிகளை எடுத்து வைக்க உதவ வேண்டுமே அல்லாது பொது நியதிகளை பின்னோக்கி இழுக்கும் நோக்கத்தை அடைப்படையாகக் கொண்டிருத்தல் கூடாது .ஏற்பில் முன்னகர வேண்டும் .அய்யன் அய்யப்பனின் சன்னிதானம் பெண்களும் கலந்து கொள்ளும் வண்ணம் மாற்றம் கொள்ள வேண்டியது காலத்தின் முன் அவசியம்.தவிர்க்கவே இயலாதது.

அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில் உள்ள நடைமுறை சிரமங்கள் சிலவற்றை தொடர்ந்து அய்யனின் சன்னிதானத்திற்கு சென்று வருகிறவன் என்கிற வகையில் நெருக்கமாக அறிவேன்.பல்லாண்டுகளாக ஆண்கள் மட்டுமே சென்று கொண்டிப்பதன் காரணமாக ,ஆண்கள் செல்ல மட்டுமே உகந்ததாக அதன் வசதிகள் பழக்கமாகியிருக்கின்றன.சன்னிதானத்தைச் சுற்றியுள்ள வரிசைகள் தற்போது ஆண்கள் செல்வதற்கு மட்டுமே உகந்தவையாக உள்ளன.இதுபோலவே பெண்கள் மட்டுமே செல்லத் தகுந்த கோவில்களும் கேரளாவில் உள்ளன.எப்போது பொது நியதியை முன்னிட்டு நான் ஏன்  செல்லக் கூடாது ? என்று ஒரு கேள்வி உருவாகி  எழும்பி விடுகிறதோ அப்போதே பழைய நியதிகள் நொறுங்கிவிடுகின்றன.புதிய நியதி என்பது புதிய தர்மம்.அதனைக் காப்பாற்றுவதன் பொருட்டு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டே ஆகவேண்டும்.பழைய முறையைப் பின்பற்றி வருகிறோம் ,பழைய நியதிகளைப் பின்பற்றி வருகிறோம் ,பெண்ணை ஏற்றுக் கொள்ள இயலாது என்று பதில் சொல்லவே இயலாது.அப்படி பதில் சொல்லுவது அதர்மம்.

சாதி இங்குள்ள எல்லாசாதிகளுக்குமே ,தலித்துகள் உட்பட மிகப்பெரிய வசதியாக இருந்து வருகிறது.அதற்குப் பல்வேறு நுண்ணிய காரணங்கள் உள்ளன.இங்குள்ள யாருக்குமே சாதி அகலுவதில் விருப்பமும் இல்லை.ஏன் என்பதை நாம் ஒருபோதும் வெளிப்படையாக விவாதிக்கவும் இல்லை.அதன் ஒருபகுதியை வசதிக்கு  ஏற்ப எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோமே அன்றி ஏன் சாதி இங்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது என்று விவாதித்துப் பார்க்கவே இல்லை.வெளிப்படையாக விவாதித்துப் பார்த்தால் மட்டுமே அதனைக் கடக்கும் வழிகளும் தோன்றும்.சாதி என்பது அதனாலேயே தொடர்ந்து இருப்பு பூண்டிருக்கிறது.அதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதனை முன்வைத்து சாதியை நியாயம் செய்ய முடியாது.ஏராளமான மக்கள் அதன் பொருட்டு நீக்கம் செய்யப்பட்டதை அல்லது வசதியானவகையில்  ஏற்பு செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது .அதனைப் போலத்தான் வழிபாடுகளில் ஆன்மீகத்தில்,பக்தியில் ,யோகத்தில் பெண்கள் ஈடுபடுவதை   தடைசெய்ய முடியாது.கூடாது.யோகத்தில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்கள்.சமூக  நீக்கம் செய்யப்பட்டிருந்த பெருவாரியான மக்கள் ஈடுபடுகிறார்கள்.யோகத்தில் ஈடுபடலாம் பக்தியில் ஈடுபட மறுப்போம் என்பது நீதியில்லை.தர்மமும் இல்லை.

ஈடுபடுபவர்கள் கேட்கவில்லை என்றோர் பராது சொல்லித் திரிகிறார்கள்.பொது நியதிகளை ஈடுபடுபவர்கள் மட்டும்தான் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பது சுத்த மடத்தனம்.பொது நியதிகளை , பொது தர்மங்களை தர்மத்திற்கு எதிரானவர்கள் கூட கேட்கலாம் என்பதுதான் பொது நியதிகளின் சாராம்சம்.இது விளங்கவில்லையெனில் நீ யாராக இருந்தாலும் பேசுவது பழமைவாதம் தான்.

எங்கள் பகுதிகளில் உள்ள சிலர் அய்யப்பன் சந்நிதானத்திற்கு பெண்கள் வரக் கூடாது என்றோர் கையெழுத்தியக்கம் நடத்தினார்கள் .அதில் தி.மு.க காரர்கள் வரையில் இருந்தார்கள்.நமது அகமுரண் இது.என்னிடம் கையெழுத்து கேட்டவர் ஒரு தி.மு.க காரர்.இந்த அக முரண்கள் எனக்கு புதிதொன்றும் கிடையாது.ஏன் போகக் கூடாது ? என்று கேட்டேன்.வந்தவை வழக்கமான பதில்கள் .உங்கள் அன்னையும் ,உங்கள் மகளும் தீட்டென்று கருதியிருக்கிறீர்களா ? என்று கேட்டேன்.அப்படி ஒருவேளை கருதுவாயாயின் நீ வாழ்வதற்கே லாயக்கற்றவன்.நீ தான்  அந்த சந்நிதானத்திற்குப் போகத் தகுதியற்றவன்  .அங்கே அய்யப்பனுக்குத் துணையாக மஞ்சமாதா இருக்கிறாள் .பெண்குழந்தைகளை அவள் ஏற்றுக் கொள்ளாமலா போய்விடுவாள் ? எல்லா பெண்களும் யாரோ ஒருவனுக்கு மகள்.யாரோ ஒருவனுக்கு அன்னை.பகவதி.பகவதியை தீட்டென்று கருதும் தகுதி பெற்ற மகான் இங்கே யாரேனும் இருக்கிறார்களா ?

ஒரு குரல் எதிர்த்துக் கேட்பது வரையில்தான் பழக்கத்தின் வலிமை பேசலாம்.பழக்கத்தின் முன்பாக உரிமையின் குரல் எழுத்துவிடுமாயின் பழக்கத்தைப் புறந்தள்ளி விட வேண்டும்.அதுவே தர்மத்திற்குத் துணையிருத்தல்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"