அபத்தம் என்பது ...

அபத்தம் என்பது ...

அகம் எவ்வாறு கம்போஸ் பண்ணப்பட்டு மெருகு பெறுகிறதோ ,அது உருகுலையும் போது ஏற்படுவது அபத்தம்.அது ஒரு நிலை. ஒன்றில் ஒன்று முற்றுப்பெறுகிற, முடிவடைந்த ஒரு நிலை. .

படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் இத்தகைய நிலை பல முறை தங்களில் ஏற்படுவதை உணர்ந்திருப்பார்கள்.உடல் கட்டுமானம் உருவாவதைப் போன்றுதான் இதுவும் அகக்கட்டுமானம்.உடல் கட்டுமானம் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது .ஆனால் இந்த அகக் கட்டுமானம் அவ்வாறானதல்ல.ஒன்று உருக்குலைந்து சரிந்து வீழ ,அபத்தம் தொற்றி மற்றொன்று எழுகிறது.அகக்  கட்டுமானத்தில் சரிவே நிகழாதவனை அல்லது சரிவு ஏற்படும் வாய்ப்பே இல்லாதவனை அல்லது அதற்கான வாய்ப்பே ஏற்படாதவனை சராசரி மனிதன் எனலாம்.அவனிடத்தில் படைப்பு செயல்பாடுகள் ஏதுமில்லை.இவன் தனக்கு வெளியில் எதுவுமே கிடையாது என்னும் நம்பிக்கை தரப்பைச் சார்ந்தவன்.தனது நம்பிக்கையை இரும்பு உலக்கையாக பற்றிக் கொள்ள நினைப்பவன் .

இருப்பதிலேயே சுலபமான அகக் கட்டுமானம் என்பது அரசியல் கருத்துக்களால் அதனைக் கட்டி நிரப்புவதுதான்.விடலைகள் ,பெரும்பாலான அவசர பெண்கள் ,இரும்பு ஆண்கள் அதிகம் செலாவணி ஆவது இதன் பால்தான்.காரணம் அரசியல் பொருட்களால் அகக் கட்டுமானம் பெறும் போது ஒரு கூட்டு பலம் கிடைக்கிறது.கூட்டு அதிகாரம் கிடைக்கிறது.இது  போலவே தகவல்களால் உண்டாகிற அகம் ,அறிவுப் பொருட்களால் நிரப்பப்பட்ட அகம் என பலதும் உண்டு.இவற்றை அகச் செயல்பாட்டின்  ஆரம்ப நிலை என எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றிலும் தொடர்ந்து பின் வருகிற அபத்தத்தை கண்டுணர்ந்து அடுத்த அடுத்த நிலைகளுக்குள் நகர்ப்பவனே சுய ஓர்மை அடைகிறான்.

எவ்வண்ணம் கட்டப்பட்டுள்ள அகமாக இருப்பினும் சரி அது அபத்தத்தை  எட்டும் போது படைப்பு ரீதியில் எதிர்கொள்ளும் போது கலையாகிறது.அழகு பெறுகிறது.அகம் கட்டப்பட்டுள்ள விதம் இரும்பு நம்பிக்கையாக மாறிவிடும் எனில் அது அபத்தத்தை எதிர்கொள்ள நேர்கையில் கடுமையான மனச் சோர்வையும் எடுத்துக் கொண்டு உடன் வரும்.ஆன்மிகம் நல்ல வாய்ப்புதான்.ஆனால் படைப்பின் அளவிற்கு சிறப்பான வாய்ப்பு அது என்று சொல்வதற்கில்லை.ஏனெனில் ஆன்மீக ரீதியில் கட்டப்படுகிற அகம் உடனடியாக இரும்பு நம்பிக்கைகளுக்குள் புகுந்து விடுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டது.அரசியலைப் போன்றே இங்கும் கூட்டம் அதிகம்.அதிகார பலம் அதிகம்.எங்கு கூட்டத்தின் அதிகார பலம் எதுவுமின்றி தனித்து வாழும் விதத்தில் உனக்கொரு அகம் வாய்கிறதோ ,அதுவரையில் உனக்கு பயணப்படுத்தலுக்கான தூரம் அதிகமாக இருப்பதாகவே பொருள்.

சரி.படைப்பு ரீதியில் எதிர்கொண்டால் அபத்தம் நீங்குமா ? என்றால் உறுதியில்லை.சகலத்தையும் பரிசீலிக்கும்  போது இதில்  கொஞ்சம் கூடுதல் சிறப்பிருக்கிறது  அவ்வளவுதான்.

வரலாற்றால் ,வன்முறைகளால் ,அரசியல் அறிவால்,மதங்களால் நிகழ்ந்தவற்றை ஒப்பிடும் போது படைப்பு மேலானது.அவ்வளவுதான் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"