தோழர் ஜீவா

தோழர் ஜீவா
ஆகஸ்ட் - 21 ஜீவானந்தம் பிறந்த தினம்.நமது முந்தைய தலைமுறையின் லட்சிய முகங்களில் ஒன்று ஜீவா.அந்த தலைமுறையின் நற்குணங்களுக்கு அசலான ஒரு சான்று.
லட்சிய புருஷர்களில் இருவகையினர் உண்டு.தங்களின் குறிக்கோளுக்கப்பால் ஏதுமில்லை எனக் கருதுபவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் .பிற மார்க்கங்கள் எதற்கும் சிற்றிடம் கூட தங்களிடம் இல்லாதவர்கள்.இவர்களும் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கங்களுக்கு பல தியாகங்களையும் ,பங்களிப்புகளையும் செய்தவர்களாகவே இருப்பார்கள்.மார்க்கங்கள் இறுகி மக்கள் செல்வாக்கிற்கு மார்க்கங்களை நகர்த்துபவர்கள் இவர்கள்தான் பெரும்பாலும்.எல்லா மார்க்கங்களிலும் இவர்களுடைய செல்வாக்கே நமது நாட்டில் அதிகம். இவர்களின் இருப்பை அசையா சொத்தாகக் கொண்டிராத மதங்களோ,நிறுவனங்களோ,கட்சிகளோ இந்தியாவில் கிடையாது. பக்தி மார்க்கத்தின் தொடர்ச்சியில் வருகிற இவர்கள் தங்களின் தரப்பைப் புனிதத் தரப்பாக்கும் வல்லமை படைத்தவர்கள்.தாங்கள் சார்ந்த தரப்பில் சிறு சந்தேகம் கொள்ளவும் இவர்களிடம் பொறுமை கிடையாது.மதத் தலைமைகள் பெரும்பாலும் இவர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. சகல மதங்களும் அபாயத்தன்மை அடைவதற்கு இவர்களுடைய அடிப்படை குணங்களே காரணமாகின்றன.
ஜீவா இரண்டாவது வகையை சேர்ந்தவர்.இவற்றின் இரண்டாவது வகைப்பட்ட லட்சியமுகம் இளகிய தன்மையும் ,பிற விஷயங்களை உள்வாங்குதலில் வெளிப்படைத்தன்மையும் கொண்டது.வெளி விஷயங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறைந்தது.சிந்தனையில் பல்வேறு தரப்புகளையும் வெறுப்பற்று பரிசீலனை செய்ய தயாராக இருப்பது.காந்தியின் தன்மை இவ்வகைபட்டதே.ஜீவானந்தமும் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.முதல் வகை லட்சியவாதம் சிந்திக்கும் திறனை இழப்பதிலிருந்து திரண்டு உருவாவது எனில் அதற்கு நேர் எதிரான குணம் கொண்டது இது .
நிறுவனங்களிலும் , மதங்களிலும்,பக்தி மார்க்கத்திலும்,கட்சிகளிலும் , பொதுவாக வாழுங்காலத்தில் இது உவப்பான குணமாகப் போற்றப்படுவதில்லை.சந்தேகத்திற்கிடமற்ற இறுகிய லட்சியவாதத்திற்கே பொதுவாக செல்வாக்கு அதிகம்.அது அடைகிற குடும்பத்தன்மையும் ,மதத் தன்மையும் அதற்கான காரணங்கள் .
இரண்டாவது வகை அச்சமூட்டக் கூடிய பண்பாகவும்,குழப்பமான தரப்பாகவுமே கருதப்படக்கூடியது.வெகு அபூர்வமாகவே இந்த பெருத்த இடைவெளியை சீரமைக்கும் தலைவர்கள் பிறக்கிறார்கள்.ஜீவா அத்தகையவர்.அபூர்வமானவர்.மதங்களில் இத்தைய பண்பு நிலைகள் அமையப் பெற்றவர்கள் மட்டும்தான் பின்னாட்களில் அவதார் புருஷராகக் கருதப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் மதத்திலும்,மார்க்கத்திலும் ஜீவாவை ஒத்த ஒருவர் மீண்டு எழுந்து வரவே இல்லை.
நான் ஏன் இங்குள்ள தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட்களை மதம் என்று சொல்கிறேன் எனில் சிந்தனை மரபில் தேக்கமுற்று புனிதத்தை பிரதானப்படுத்தி இறுக்கமான நிறுவனம் உருவாகும் போது அது மதமாகிவிடுகிறது.இங்குள்ள தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட்களுக்கு நேர்ந்த அவலம் இதுதான்.பிற சிந்தனைகளுக்கிடமற்ற இறுக்கம் மதமாதலின் அடிப்படை.
சிந்தனைகளில் அவர்கள் அடைந்த தேக்கம்தான் இன்றுவரையில் அவர்களை கலோனியல் தன்மையிலேயே வைத்திருக்கிறது.மரபு பற்றியெல்லாம் எவ்வளவுதான் அவர்கள் வகுப்பெடுத்தாலும் கூட அவர்களால் கலோனியல் தன்மையிலிருந்து வெளிவர இயலாமைக்குக் காரணம் இதுதான்.மக்களுக்காகப் பேசுகிறேன் தரப்பு என்று இவர்கள் தங்களை நம்பினாலும்கூட ;இவர்கள் பேணி வருகிற கலோனியல் அடிமைத்தனம் காரணமாகத்தான் மக்கள் பண்பாட்டு ரீதியில் தாழ்வுற்ற நிலையில் இருக்கிறார்கள்; நாம் அவர்களை சீர்திருத்தி மேன்மைப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கிறோம் என்று இவர்கள் கருதுகிறார்கள்.உலகில் உள்ள சகல மதங்களும் கடைபிடிக்கிற வழி இது.மக்களைக் கடைநிலையாகப் பார்த்து மேன்மைபடுத்தும் இந்த குணம் பண்பாட்டுரீதியில் கலோனியல் அம்சம் கொண்டதும்கூட.
நமது தீமைகள் அத்தனைக்கும் நமது சுய மரபுகளே காரணம் மேன்மைகளுக்கேல்லாம் பிற பண்பாடுகளே காரணம் என நம்பாத ஒரு கம்யூனிஸ்ட் தோழரைக் கூட நாம் சந்திக்க இயலாமல் போனமைக்கும் இதுதான் காரணம்.சுய மரபின் மீது கொள்ளும் எள்ளல் சுயத்தின் மீது அடையும் அருவருப்புணர்ச்சி என்பதை இன்னும் இவர்கள் கண்டுபிடிக்கவே இல்லை.சுயமரபின் மீதான போதாமைகளை இவர்கள் தொடர்ந்து பேயுருவாய் மாற்றிக் கொண்டிருப்பதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை.
ஜீவானந்தம் மேற்கொண்ட லட்சியவாதம் சுயமரபின் தீமைகளை எதிர்ப்பதுதான் ஆனால் சுயமரபின் மீதான எள்ளல் அதற்கில்லை.கம்பராமாயணத்தை அவர் வியந்தார்.அதன் பின்னர் காலனியத்தின் கட்டுப்பாட்டிற்குள் சிந்தனைகளை சிந்தனை மரபைச் சுருக்கிகொண்டதே அவர்களின் தற்கொலை ஆயிற்று.கம்யூனிஸ்ட்களின் தரப்பில் ஜீவானந்தமும்,திராவிட இயக்கத்தில் தரப்பில் அறிஞர் அண்ணாவுமே மரபின் கடைசி கண்ணிகள் .பின்வந்தவை அறுபட்டுப் பறந்தலையும் நூழிலைகள்.தமிழில் பொதுவுடமைச் சித்தாந்தம் ஜீவாவிட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"