தவம் பயிலுங்கள்

                                                             தவம் பயிலுங்கள்

தவம் என்பதற்கு ஏராளமான அர்த்தங்கள் உள்ளன.நான் அவற்றையெல்லாம் சுட்டவில்லை.எளிமையாக அமர்ந்து ஒரு அரை மணிநேரமேனும்  மனதை ஒருமையில் நிறுத்துவதைச் சொல்கிறேன்.அதற்கு பாடமும் பயிற்சியும் நிச்சயம் அவசியம் .அது முறையான  பாடமாக இருத்தல் வேண்டும்.தனிநபர்களிடம் கற்றுக் கொள்ளுதல் சிறப்பாகாது.இயற்கையின் இயங்கு நிறுவனத்தை நம்மில் கற்றுக் கொள்ளும் முறையியல் அது.தகுந்த பள்ளியில் அதனை கற்பதே நல்லது

நானெல்லாம் நிறைய காலவிரயத்தை ஏற்படுத்திய பின்னர்தான் கற்க தொடங்கினேன் .அதனாலேயே இதிலும் நானொரு பின்தங்கிய மாணவன்.தொடர்ந்து பத்தாண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்தும், விட்டு விட்டும் பயில்கிறேன்.யோகமும் தவமும் எனக்கு உடல் பற்றிய தெளிவை ஏற்படுத்தியவை.வள்ளலார் உடலில் தெளிவு ஏற்படுதலே முதல் இன்பம் என்கிறார்.உடல் நம்முடையதல்ல அது இயற்கையின் ஸ்தாபனம் .புலன்கள் கொண்டு நடக்கும் ஆசைகள் மட்டுமே நம்முடையவை.உடல் என்பது  உலகைக் காணச் செய்யும்,உணர வைக்கும்  அகக்கருவி.புறத்தில் தூண்டப்ப பட்டு நிற்கும் அகக்கருவி அது.மேலை நாடுகளில் ஜப்பான் ,சீனா போன்ற நாடுகளில் தவம் சிறுவயதிலேயே தொடங்கப்படும் பழக்கம்.ஜப்பான் மொழி திரைப்படங்கள் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.அவர்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்து உணவு உண்பார்கள்.வஜ்ராசனம் என்பது வேறொன்றும் இல்லை.குழந்தைகள் ஓடி வந்து அமரும் ஒரு நிலை.இஸ்லாமியர்களின் தொழுகை நிலை ஏகதேசம் வஜ்ராசனம்தான்.அவர்கள் அமர்ந்து தலை தாழ்த்தி முன் நெற்றி தரையில் படும் வண்ணம் செய்யும் தொழுகை யோகத்தில் மிக முக்கியமானதொரு உடல் பயிற்சி.

யோகத்திலும் ,தவத்திலும் சான்றிதழ் பெறுவதுதான் நோக்கமெனில் பிரம்மஞானத்திற்கு தகுதி உடையவன் நான்.ஆனால் எனக்குத்தானே தெரியும் ? ஒரு ஞானத்திற்கும் தகுதியற்றவன் நான் என்பது.அதனால்தான் திரும்பத்திரும்ப முதலில் இருந்தே தொடங்கி படித்துக் கொண்டிருப்பேன்.வகுப்பில் ஆசிரியர்கள் நம்மை கண்டுபிடிக்காதவர்களாக இருப்பின் மகிழ்ச்சியாக இருக்கும்.சிலர் நான்கு நிலைகள் கடந்த பின்னரும் ஏன் முதலில் இருந்தே தொடங்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.ஒரு நிலையையும் கடக்க முடியாதவன் என்பதை உள்ளமே நன்கறியும்.பயிற்சிக்காகத் தான் ஆரம்பம் முதலே நான் சென்று கொண்டேயிருப்பது.சிறு வயது முதலே தவமும் யோகமும் கற்றுத் தேறும் குழந்தைகள் பாக்கியம் செய்தவை.

தெய்வ நம்பிக்கையும்,தவமும் ,பயிற்சியும் சான்றோனின் சாதாரணமான இயல்பான காரியங்கள் என்று ஸ்ரீமத் பகவத்கீதை சொல்கிறது.தமிழ் மரபுகளில் தவம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.  தெய்வ நம்பிக்கை பேணிப் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.எப்படி எதற்காக இடையில் இவற்றையெல்லாம் கைவிட்டோம் என்பது விளங்கவில்லை.

தவமும் யோகமும் பயில்வதற்கு எதிராக சில தடைகள் உண்டு.ஏற்கனவே நமது மனதில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தடைகள் முதலாவது வகையைச் சார்ந்தவை.பத்தாண்டுகளுக்கும் முன்னர் முதலாவதாக நான் வகுப்பில் இணையும் போது பேசிக் கொண்டே இருந்தேன்.ஆசிரியர்களை வகுப்பு   நடத்தவே அனுமதிக்க வில்லை.அவ்வளவு இடையூறுகளும் தடைகளும் மனதில் இருந்தன.அகந்தையால் வகுப்பை மோதிக் கொண்டே இருந்தேன்.ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.இப்போது யோசித்துப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.அப்போது எவ்வளவு சிறுமைப்பட்டிருந்தேன் என்பதும் விளங்குகிறது.இப்போது மேன்மை பட்டுவிட்டேன் என்பது இதற்கு அர்த்தமில்லை.ஒவ்வொரு காலத்தையும் நாம் கடந்து செல்லும் போதும்  முன்னர் சிறைப்பட்டிருந்த விஷயங்களும், சிறுமைப்பட்டிருந்த காரியங்களும் விளங்கிக் கொண்டே போகும்.இப்போதைய சிறுமைகள் நாளை விளங்கும்.

இரண்டாவது வகையான தடை ,மயக்கம்   காரணமாக தவத்தையும் ,யோகத்தையும் கற்பவர்களுடையது.அவர்களுக்கு சாராம்சம் ஒருபோதும் விளங்காது.தவத்தையும் யோகத்தையும் மேட்டிமை என தவறாக புரிந்து ஈடுபடுபவர்கள் முற்றிலும் ஏமாந்து போவார்கள்.கற்றலில் ஒருபலனும் அவர்கள் எய்த முடிவதில்லை.ஏனெனின் அவர்கள் கொண்டிருக்கும் மயக்கம் கற்றலுக்கு எதிர்திசை வேகம்.நன்னெறி என அவர்கள் கற்பிதம் கொண்டிருப்பார்கள்.நம்மை நாம் எப்படியிருக்கிறோம் என்பதை அறிவதற்கும் , தேர்வு செய்வதற்கும் கிடைக்கும் ஒரு வாய்ப்பை தவம் ஏற்படுத்தும் அன்றி அது எந்த மந்தரவாதத்தின் மூலமாகவும் எதனையும் சரிபடுத்தாது.ஏராளமான எண்ணங்களில் கட்டுண்டு கிடக்கும் நம்மை ; மொத்தமே உன்னுடையவை ஐந்து அல்லது ஆறு எண்ணங்கள் தான் என்பதை துலக்கும்.அதில் ஏறிப் பிடித்துக் கொள் கட்டியாக என்பதை உணர்த்தும்.கொண்டு செலுத்தும்.இந்த எண்ணங்களில் எதுவாக இருந்தாலும் அதுதான் உங்களுடையவை.காமம்,காதல்,ஆசைகள் இப்படி அவை எதுவாக இருப்பினும். தவத்தில் மிஞ்சுகிற இந்த எண்ணங்களில் இது தவறு அது சரி என்றெல்லாம் கிடையாது.மிஞ்சுகிற எண்ணங்கள்தான் உனது சாட்சியம்.நீ

மிக முக்கியமாக யோகமும் தவமும் சிறுவயதிலேயே தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிற குழந்தைகளுக்கே மிகவும் அவசியம் என்னை போன்று .ஆனால் அவர்களிடத்தேயிருந்துதான் இவற்றைத் தட்டிப் பறித்து தள்ளிக் கொண்டு போய் வைத்திருக்கிறோம் .நமது ஞானிகள் எல்லோருமே சிறுவயதிலேயே தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள்தான் என்பது எத்தனை  பேருக்குத் தெரியும் ? அல்லது சொல்லித் தந்தார்கள் ?

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சரியான பள்ளி என வேதாத்ரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவிலையே பரிந்துரை செய்வேன்.பிற பள்ளிகளின் பாடங்களையும் படித்திருக்கிறேன்.முயற்சித்திருக்கிறேன்.எனது அனுபவத்தில் சிறந்தது வாழ்க வளமுடன் அறிவுத் திருக்கோயில் மட்டுமே

பின்பற்றி பாருங்கள் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"