அண்ணன்கள் என்று சொல்லிக் கொள்ள இருவர்

அண்ணன்கள் என்று சொல்லிக் கொள்ள இருவர் உண்டெனக்கு

ஒருவர் தமிழ்ச் செல்வன் ,மற்றொருவர் சி.சொக்கலிங்கம் .இடப்பக்கமும் வலப்பக்கமும் என இருவர். இருவரைப்பற்றியும் எழுதுவதற்கு பல உண்டு .சொக்கலிங்கம் லஹரியில் ஒரு பூர்வ புருஷன் .அன்றாடத்தில் தேர்தல் அதிகாரி.அப்படியிரு அவதாரங்கள் சொக்கலிங்கம்.எனக்கு பொருத்தமெல்லாம் அந்த முதல் அவதாரத்தோடுதான்.பின்னதில் நிறைய சங்கடங்கள் .முதல் அவதாரத்தின் நிறைய மகிமைகள்  தற்போது  எழுதக் கூடாதவை.முற்றும் முதுமை அதற்குத் தேவை. தமிழ்ச்செல்வனுக்கு அப்பா சண்முகத்தின் சாயல்.உள்ளும் புறமும்.உள்ளும் புறமும் இரண்டில்லாதவர் தமிழ்ச்செல்வன் .மாறுபாடுகள் வேறுபாடுகள் என எவ்வளவோ வந்தாலும் இருவரிடமும் காரியங்களில் விலக உள்ளூர ஒன்றும் கிடையாது.செயல்படும் பணியிடங்களும் பேசும் மொழியும் வேறென்பது உண்மையே தவிர ஆற்றும் செயல்களில் வேற்றுமைகள் கிடையாது."நம்மப் புள்ளைங்க " என்பது தமிழ்ச்செல்வன் எங்களை போன்றோரைக் குறிக்கும் சொல்.

தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பவர் தமிழ்ச்செல்வன்  .தொடர்ந்து செயல்படுபவர்கள் எவ்வளவு நம்பிக்கை  இழப்புகளையும் சேர்ந்து சந்தித்திருப்பார்கள் என்பது; அவர்கள் சொல்லாதவரையில் வெளியில் தெரியாது.ஒவ்வொரு சமயமும் இழந்த நம்பிக்கைகளின் துயரச் சாயல் ஏதுமின்றி புதிது புதிதாக போய்க்கொண்டேயிருப்பவர் அவர் .புதிய நம்பிக்கைகள் புதிய நம்பிக்கைகள் என.  சுயசரிதையை அவர் எழுதுவார் எனில் இது புனைவுத் தன்மையும் கொண்ட அரும் பொக்கிஷமாக அமையும்.சுய பகடியும் எள்ளலும் நிரம்பியவர்.அனுபவங்களை விலகி நின்று பார்க்கவும் அவரால் முடியும்.சுயசரிதையை அவர் எழுதினாலும் கூட அவரால் நடந்த வண்ணம்தான் எழுத முடியும் என நினைக்கிறேன்.இருப்பென்பதை பொதுவில் வைத்து விட்டவர் தமிழ்ச் செல்வன் .சுந்தர ராமசாமி மிகவும் எதிர்பார்த்தவர்களில் ஒருவர்.அவருடைய சக்தி பெருமளவிற்கு பொது வாழ்வில் செலவாகிக் கொண்டிருக்கிறது.தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு போய் ","வாளின் தனிமை " இரண்டு சிறுகதை நூல்களும் முக்கியமானவை.புதியவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்புகள் அவை.

கிடாத்திருக்கையில் வழிவிட்ட அய்யனார் கோயிலில் வைத்து ஒருமுறை தமிழ்ச்செல்வனிடம் இனி நீங்கள் கொஞ்சம் இருந்து எழுதலாமே ? என்று கேட்டேன்.நேரே அவரைக் கேட்க இயலாத உட்குறும்புகள் என்னை ஏற்றி விட்டு நான் அவரைக் கேட்ட கேள்விதான் இது."நடமாடிக் கொண்டிருக்கும் வரையில்தான் இந்த வண்டி  ஓடும் என்று பதில் சொன்னார்.எனக்கு வாழ்க்கை தொடர்பான பல புரிதல்களை ஏற்படுத்திய பதில் இது.நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டிருக்கும் வேலைகளை தொடரும் வரையில் தான் உயிர் இந்த உடலில் தங்கியிருக்கும்.பல காரியங்களை அலுப்புடன் செய்யும் போது அவர் அன்று கூறிய பதிலே ஊக்கமளித்துக் கொண்டிருப்பது.

தமிழ்ச்செல்வன் திருநெல்வேலி அஞ்சல் நிலையத்தில் பணி புரிந்த போது , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் ,சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையும் இணைந்து நடத்திய திட்டம் ஒன்றில் ; எனக்கு குறுகிய காலம் பணியிருந்தது.சாயங்காலங்களில் அவரை போய் பார்ப்பேன்.எந்த புதிய இளைஞனிடமும் பலகாலம் பழகியது போன்று அவர் பழகும் விதம் இடைவெளிகள் இல்லாதது.ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்  " நாவல் வெளிவந்திருந்த சமயம்.நானும் படித்து விட்டேன் ,அவரும் படித்திருந்தார்.நம்ம தோழர்களே நல்லா இருக்குன்னு சொல்லறாங்களேப்பா ? உள்ளதத் தான சொல்லியிருக்கார்னு " என்று அவர் குறிப்பிடும் போது ஆழ்ந்த வருத்தம் தொனிக்கும்.இந்த நாவலுக்குப்  பதில் சொல்ல கடுமையாக இருக்கிறது என்பது அப்போது அவர் மனதில் இருந்தது.

காடுமலை என சுற்றித் திரிந்த காலங்களில் அவரும் நானும் எங்கேனும் வழிபாதைகளில் சந்தித்துக் கொள்வோம்.அந்த ஊருக்குப் போறேன் என ஏதேனும் ஒரு ஊர் பெயரைக் காட்டி விட்டு கையில் பிடிகிடைக்கும் பொருளை எனது சட்டைப் பையில் வைத்து , அவசரமாகக் கடந்து செல்வார்.நான் கேட்பதில்லை ,ஆனால் அவருக்கு நம் தேவைகள் என்னவாக இருக்கும் என யூகிக்கத் தெரியும்.எங்கேனும் யாரேனும் அவருக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்."என்னடா இப்படியிருக்கே "  என்பது வழக்கமாக அவருக்கு என்னைக் காணும் போது சுட்டுக் கிடைக்கிற சொல்.சுட்டும் சொல்.அதில் இப்படியிருக்கீங்களேப்பா என்கிற நிழல் சொல் ஒளிந்து கொண்டு தலை தூக்கிப் பார்க்கும். ஒருபோதும் முன்பு அவர் பார்த்த நிலையில் மறுமுறையில் நான் இருந்ததில்லை.மதுரையில் அவர் ஒருமுறை காணும் போது மொட்டை போட்டிருந்தேன்.அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் அப்போது. சமீபத்தில் ராஜபாளையத்தில் சந்தித்துக் கொண்ட போது "என்னடா இது பத்திரகாளியம்மன் கோவில் பூசாரி போல வந்துருக்க " என்றார்.

இன்று நெடுங்காலத்திற்குப் பிறகு அவரோடு தொலைபேசியில் உரையாடினேன்.எங்கள் கலைக்குடும்பத்தின் மூத்த அண்ணன் அவர்தான்.அண்ணனும் அண்ணியும் நெடுங்காலம் தங்கள் பயணத்தைக் தொடர தம்பிகளின் சார்பில் என் வணக்கம்.வாழ்த்து.

தமிழ்ச்செல்வன் ,சொக்கலிங்கம் போலெல்லாம் வரும் தலைமுறைகளில் வேலை செய்ய ஆளுண்டா தெரியவில்லை.  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்