அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும்


இல்லையெனில் தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகளை காப்பாற்றவே இயலாது. உங்கள் மதிப்பீடுகள் ,ஆர்வம் ஒரு திக்கிலும் பணி மறு திக்கிலும் இருந்தால்  நீங்கள் பணியை பாரமாகத் தான் பார்ப்பீர்கள்.ஒரே மருத்துவரை நீங்கள் சென்று அரசு மருத்துவமனையிலும் அவருடைய தனியார் கிளினிக்கில் போய் பார்ப்பதற்கும் இடையில் பெருத்த வித்தியாசங்கள் உண்டு.ஒரே மருத்துவர்தான்.ஒரே நபர்தான்.இரண்டு இடங்களிலும் இரண்டுவிதமாக சுபாவத்தில் அவர் மாறுபடுகிறார்.நீங்கள் காலையில் அதே நபரை அரசு மருத்துவமனையில் போய் பார்த்து விட்டு மாலையிலேயே தனியார் மருத்துவமனையில் சென்று பாருங்கள் புரியும். பள்ளியாசிரியர்கள் மட்டும் என்றில்லை .அரசுப் பணிபுரிவோர் அரசு சார்ந்த துறைகளில் பள்ளி ,மருத்துவம்,போக்குவரத்து இப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற நிலை உருவாகவேண்டும் .இல்லையெனில் சீர்கேடுகளை நாள் தோறும் புலம்பலாமே ஒழிய எந்த முடிவையும் எட்ட முடியாது.

காலையில் தனது வாடகைப் பாடசாலையில்  ஐந்து முதல் எட்டு மணி வரையில் பாடம் நடத்துகிற ஒரு ஆசிரியர் பள்ளி வகுப்பை தூங்குவதற்கான இடமாத்தான் பயன்படுத்துவார் சந்தேகமே வேண்டாம்.இரண்டு சக்திகள் கொண்ட மனிதர்கள் என்று இங்கு யாரும் இல்லை.நான் ஒரு நபரிடம் கவிதை பற்றி ஒருமணிநேரம் பேசிவிட்டேன் எனில் அடுத்து வருகிற நபரிடம் அதே உற்சாகத்துடன் பேசுவது கடினம்.அதிக பணம் கிடைக்கும் இடமாக இருந்தால் ஒருவேளை இந்த சக்தி ஏற்படலாம்.ஒருவேளை அடுத்து வருபவர் பெண் காதலியாக இருந்தால் இந்த சக்தி மீண்டும் ஏற்படலாம்.நீ கலைக்டரோ ,மந்திரியோ யாராக வேண்டுமாயினும் இருந்து விட்டுப் போ.அரசு பள்ளியில் , அரசு மருந்தகத்தில்,அரசு பேருந்தில் உன் உபயோகம் இருக்க வேண்டும் என்றோரு ஆணை இருக்குமெனில் இவையெல்லாமே ஒரே நாளில் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பிவிடும் சந்தேகமே வேண்டாம்.அரசு சம்பளம் எனில் அரசு உபயோகம் என்றிருக்க வேண்டும்.

இரண்டு வருடங்களாக ஒரு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்திருக்கிறேன் .துணைத் தலைவராக இருந்த காலங்களையும் சேர்த்து கணக்கிட்டால் ஐந்து வருடங்கள் .பெண் ஆசிரியர் ஒருவர் பொதுக் கூட்டம் ஒன்றிலேயே "நாங்கள் விபச்சாரியின் குழந்தைகளுக்கும்,குடிகாரர்களின் குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி கடினப் படுகிறோம் தெரியுமா ?" என்று கேட்டார்.அவர் அவ்வாறு கேட்டது கூட ஆச்சரியமில்லை.பல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தாங்கள் சம்பளம் வாங்குகிற சமூகத் தொண்டில் இருக்கிறோம் என்கிற எண்ணம்தான் பொதுவாகவே இருக்கிறது  .அந்த கூட்டத்தில் பங்கேற்ற பிற உயர் அதிகாரிகளுக்கும் கூட அந்த அம்மணி பேசியதன் அபத்தத்தை உணர இயலவில்லை.அந்த அம்மணியை   தனியாக அழைத்து இதையே பள்ளி வழக்கத்திற்கும் வெளியே வைத்து நீங்கள் சொல்லியிருப்பீர்களேயாயின் செருப்பால் அடி வாங்கியிருப்பீர்கள் என்று தாங்கொணா வருத்தத்துடன் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

பல ஆசிரியர்கள் முழுமையான மடையர்கள்.பணிக்கு வந்ததிற்கு பிறகு அவர்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதே இல்லை.அதற்கான அவசியம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை.நான் என்னுடைய தகுதியைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வில்லையானால் எனக்கு இழப்பு ஏற்படும் என்று கருதினால் மட்டும்தானே எனக்கு எனது தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் அவசியம்   உண்டாகும் ? அரசுப் பள்ளியாசிரியர்கள் தங்களின் தகுதிக் குறைபாட்டால் தங்களுக்கு சிறிய இடையூறைக்  கூட சந்திப்பதில்லை வாழ்க்கையில்.

ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை இடம் மாற்றம் செய்யக் கோரி ஒருவருட காலம் அலைந்தோம்.முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கொடுக்கும் மனுக்கள் அவர் பார்வைக்கே செல்லாது.காவல் நிலையங்களில் பழைய காவலர்கள் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போலத்தான் ,சங்க பிரதிநிதிகள் கல்வித் துறைகளில் நிரம்பி வழிகிறார்கள்.கடைசி வரையில் அந்த ஆசிரியரை எங்களால் இடமாற்றம் செய்ய இயலவில்லை.அவர் சங்கத்தின் ஆள்.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த அதிகாரி போகும் இடம் எங்கும் சங்கத்தின் ஆள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரி அவர் என்கிற கறை  இருந்து கொண்டே இருக்கும் என்பதுதான் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணம்.ஒவ்வொன்றிலும் வெளியிலிருந்து பார்க்கும் போது அதன் வெண்மையும் உள்ளே சென்று பார்த்தால் சாக்கடையும் புலப்படும்.பதவியிலிருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.

சமீபத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசு பள்ளியை கடந்து செல்லும் போது கண்ணீர்  திரண்டது.அந்த பள்ளியொரு கனவு லோகமாக ஒரு காலத்தில் எனக்கிருந்த பள்ளி.என்.எஸ்.எஸ் முகாம்களில் அந்த பள்ளியில் தங்கி இருந்திருக்கிறேன்.உருத்தெரியாமல் இடிந்து சரிந்து கிடக்கிறது இப்போது.சிறிய வனம் வளாகம் முழுதும் படர்ந்து ,பக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தைப் போன்ற கதி நிலை.சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.இத்தனைக்கும் அந்த பள்ளியிருக்கும் ஊரை எங்கள் பகுதியில் குட்டி ஜப்பான் என்றழைப்பார்கள்.அந்த இடிவு ஒரு வெளியுருவம் இல்லை.இன்று நமது அகம் இன்று இருக்கும் தோற்றம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"