நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம் போலே

நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம் போலே

பல கைகள் கிளர்ந்து எழுகிற அம்மன் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறவளாக இருக்கிறாள் .நிலமும் விண்ணும் கொள்ளும் முயக்கம்
போலே .அது சில நிமிடங்கள் மனதை விடுவதில்லை.கட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.சிதம்பரம் நடராஜர் போலே கிளந்தெழும் இத்தைகைய  அம்மன் வேறு ஒரு வகை .பிரபஞ்ச காஸ்மிக் நிலை உருவகங்கள்.  கவிதையில் அடைகிற கிளர்ச்சி போன்றதொரு கிளர்ச்சியை இத்தகைய அம்மன் உருவங்களும் ஏற்படுத்துகின்றன.

பல்வேறுவிதமான நிலைகளில் உள்ள அம்மன் உருவங்கள் எல்லாமே சிலாகிப்பிற்குரியவைதான்.ஆண்டாள் ஒரு காலை உயர்த்திய வண்ணம் திருவீதி வரும் போது,தாயே எனக்கு மொழியைத் தா ,அருளைத் தா..  என கேட்பது துறந்து,கை  மறந்து  பலசமயங்களில் சரணடையவே மனம் விருப்பு கொள்கிறது.மதுரை மீனாட்சியின் கால்களில் விழாமல் ஏதேனும்
பலனுண்டா ? மாஸான அம்மன் படுத்திருக்கும் வினோதம் என்ன சொல்கிறாள் இவள்  ! என்னும் திகைப்பு கொள்ளச் செய்வது .

கழிந்த முறை மதுரை செல்லும் போது கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.விக்ரமாதித்யன் நம்பி,அதீதன் ,ரோஸ் ஆன்றா,ரிஷி நந்தன் ஆகியோர் உடனிருந்தார்கள்.அந்த கோவிலுக்குப் போகவேண்டும் பாடல் பெற்ற ஸ்தலம் என்பதை நம்பி தான் சொன்னார்.மதுரவல்லி தாயார் அமர்ந்திருக்கும் விதம் கண்டு அப்படியே நின்றுவிட்டேன்.அவ்வளவு கம்பீரமான இருப்பு.பிரமிப்பூட்டுகிற இருப்பு.நிலமாதேவியே அச்சொரூபம்.திரும்பி வர மனமில்லை.சொரூபத்தில் இப்படி இணைகிற அம்மன்கள் நிறைய தமிழகத்தில் உள்ளனர் .கால்கள் அகட்டி அமரும் இத்தகைய சொரூபங்கள் அகத்தை ஆழப் பற்றிக் கொள்ளக் கூடியவை.கலையில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் குழந்தைகளின் தாய்மார்கள் பேரழகிகளாக இருந்திருக்கிறார்கள் என்னும்படியாக விக்ரமாதித்யன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்.அது சரிதான் என்று மரகதவல்லி தாயாரின் இருப்பு நிலை காண்போர் அறிந்து கொள்ள முடியும்.லௌகீகத்திற்கு அப்பாற்பட்ட பேரழகின் இருப்பு பூண்டிருக்கும் பேரழகு அவர் குறிப்பிடுவது.ஏன் இவ்வளவு வினோத அழகில் இருக்கிறார்கள் என்பது போல .ஓவியர் சந்ரு மாஸ்டரின் தாயாரின் புகைப்படத்தை   அண்மையில் பார்த்தேன் .அவருடைய சக்தி எங்கிருந்து அனல் மூண்டு வருகிறது என்பதைக் காண்பது போல அது இருந்தது.

அம்மன்களைப் பற்றி , காணும் ஒவ்வொரு அம்மனாக கவிதை எழுதவேண்டும் அண்ணாச்சி என்று விக்ரமாதித்யனிடம் சொன்னேன்.அவர் எழுதியிருக்கிறார் .உனக்கு முடியுமே என்றார்.முடியுமா தெரியவில்லை.சிலது எழுதி பார்த்து தோல்விதான் அடைந்திருக்கிறேன்.ஒரு விக்ரகம் உணர்த்திவிடுவதை காட்டிலும் கவிதையில் ஏதேனும் மடிப்பு அதிகம் வேண்டும்.இல்லையெனில் கவிதை விக்ரகத்தில் தாழ்வுற்றுப் போகும் ;அம்மன்களை எழுதுவது , அது கடினமான பணியென்று அவரிடம் சொன்னேன்.அப்படியொருவன் அம்மன்களின் நிலையறிந்து அதன் உள்மடிப்பு குலையாமல் எழுதிவிடுவான்   எனில் அவனே தமிழில் இனி வணங்கத்தக்க கவியாக நெடுங்காலம் இருப்பான்.

நமது கவிகளுக்குப் பொதுவாக பொது விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு பார்வைகளோ,கண்ணோட்டங்களோ ,அவதானிப்புகளோ ,சிந்தனைகளோ இல்லை.உரைநடைகளில் பொது விருப்பங்களையே முன்வைக்கிறார்கள்.கவியின் உரைநடை என்பது முற்றிலும் வேறுவிதமானதாக இருந்தே ஆகவேண்டும்.அந்த வகையில் பார்த்தால் நவீன கவிகளில் ஷங்கர்ராமசுப்ரமணியனின் "கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும் "கட்டுரை நூல் மிகவும் நூதனமானதொரு நூல்.முருகன் என்னும் கட்டுரை மிக நல்ல கட்டுரை.ஒரு பெண்ணின் ஹை ஹீல்ஸ் பற்றிய கட்டுரை ஒன்று அதில்  உள்ளது.கவியால் மட்டுமே எழும்ப முடியும் சித்திரம் அது. தனித்த அவதானிப்புகளை கொண்ட உரைநடை அவருடையது.பிறரில் பலர் பொலிட்டிகள் மட்டைகள்.பலசரக்கு கடை தீப்பொறிகள். ஆனால் அந்த நூல் தமிழ்நாட்டில் எதனாலோ தெரியவில்லை , தமிழ் நாட்டு கவிஞர்களால் கூட அடையாளம் காணப்படவில்லை.பலசரக்குப் பொருட்களுக்கு அப்பாற்பட்ட தேவைகள் மிகவும் குறைவுதான் போல இங்கே .அந்த நூலை பிறர் ஸ்லாகித்து எழுதி  ஒரு கட்டுரை கூட இதுவரையில் படிக்கவில்லை.அந்த நூல் வெளிவந்து குறைந்தது நான்கு வருடங்கள் இருக்கும். பழைய இலக்கியங்களை பார்க்கும் போது நிச்சயம் நிலைமை இவ்வளவு மோசமில்லை என்று தான் தோன்றுகிறது. 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"