அப்பா

அப்பா

என்னை வேகவேகமாக எதிலேனும் கரையேற்றி விடவேண்டும் என நினைத்தார்.பின்னாட்களில் வருகிற நாட்கள் அவ்வளவு இசைவானவையாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும் .எதிலேனும் ஒன்றில் பற்றிக்கொள்ள மாட்டானா என்பதில் அவருடைய அத்தனை முயற்சிகளும் இருந்தன.அம்மா இறந்ததை உணர்ந்த அன்றிலிருந்தே கடுமையான பாதுகாப்பின்மை என்னை உள்ளத்தில் தொற்றிக் கொண்டது.பாதுகாப்பின்மையை தூண்டும் செயல்களில் இருந்து என்னை விலக்கிக் கொள்ள கடுமையாக முயன்றேன்.அவருடைய அக்கறைகளும் எனது பாதுகாப்பின்மையை தூண்டுவதாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது.அம்மாவை இழப்பது என்பது எந்த ஒரு குழந்தைக்கும் தனது சொந்த இயல்பிலிருந்து துண்டிக்கப்படுதலுக்கு ஒப்பான காரியம்

அம்மா அகன்று சென்ற அந்த தினத்தில் நாங்கள் குழந்தைகள் ; அம்மாவின் ஊரில் விளையாடிக் கொண்டிருந்தோம்.அவள் அகன்று விட்டாள் என்னும் செய்தி என்னை வந்தடைந்தது வினோத ஸ்பரிசம் மூலமாகத் தான்.அன்று என்னைத் தொட்டவர்கள் ,தூக்கி வந்திருந்தவர்கள் ,கொஞ்சியவர்கள் ,ஆறுதல் சொன்னவர்கள் எல்லோருமே மிகவும் மோசமானதொரு செய்தியை ஸ்பரிசம் மூலம் அருவெறுப்படையும் விதத்தில் உணர்த்திக் கொண்டிருந்தார்கள்.அந்த ஸ்பரிசங்களில் ஈர்ப்பு குறைந்திருந்தது ,காந்தம்  அகன்றிருந்தது .செயற்கையாக இருந்தது அனைத்துமே.பற்றை செயற்கையாக ஒருபோதும் உருவாக்க முடியாது என்று இன்றுவரையில் எனக்குள் உறைந்து போயிருக்கும் எண்ணத்திற்கு அன்றைய செயற்கையான அத்தனை தொடுதல்களும் காரணம்.செயற்கையான பற்றை என்னிடம் பிரயோகம் செய்ய முயலும் போது உடனடியாக நான் ஒதுங்கிச் செல்ல எத்தனிப்பதற்கும் ,விலகுவதற்கும் ; அது பின்னால் ஒரு மோசமான செய்தியை அழைத்து வருகிறது என்பது மட்டுமே காரணமல்ல.அம்மாவின் மரணத்தை நினைவுபடுத்துவதாக அது எனக்குள் அமைந்து விடுகிறது என்பதும் காரணம்.எனது பாதுகாப்பின்மை இன்றுவரையில் வந்து நுழைகிற இடம் இதுதான்.பாதுகாப்பின்மை எந்த இடத்தில் எனக்குள் நுழைந்ததோ அந்த இடத்தில் அப்பா என்னை அவசரமூட்டிக் கொண்டிருந்தார்.

தொடுகையாக  அம்மாவின் மரணம் வந்து சேர்ந்ததும் நாங்கள் விளையாடி கொண்டிருந்த மைதானத்தில் மஞ்சள் காட்டமாக விரிந்தது.அதனை மைதானம் என்பது சரியில்லை.கொல்லமாங்காடுகளுக்குள் வீடுகள் . மாமரங்களின் பால் வீச்சம் .மண் மேடுகள் பூசிய சுற்று வேலிகள்.இதற்குள் மரங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் நிறைய விளையாட்டுகள் இருந்தன.கனிகளைத் தரும் மரங்கள்.அவற்றை தின்ன வேண்டியதும் பின்னர் அவற்றில் ஏறி விளையாட வேண்டியதும்தான் விளையாட்டு.அந்த மரங்களுக்கிடையில் மகா சிறுவர் உலகம் இருந்தது.ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு வாசனை உண்டு.பழங்களின் ருசியும் தனித்தனி தான்.ஒன்று போல் மற்றொன்று கிடையாது.கொல்லாம்பழங்கள் மட்டும் இருபது தினுசு இருக்கும்.கொட்டிகள் தொடங்கி பனம்பழம் அளவு வரையில் .அம்மா இருப்பது வரையில் அந்த ஊரில் விஷேசமான வாசனையிருந்தது.மஞ்சள் தரித்து அந்த மைதானம் நின்ற பொழுதிலிருந்து அந்த வாசனை அகன்றது.

அப்பாவும் ஆசிரியர் .அம்மாவும் ஆசிரியர்.இருவருமே தமிழாசிரியர்கள் . சாத்தூரில் நள்ளிரவுகளில் எனக்கு பனி வலிப்பு உண்டாகும்.அம்மா  எனது முகநாடி விழுந்தடிக்கும் வண்ணமாக என்னை தோளில் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருப்பார்.எப்படி அவள் விரைவாக நடந்தாலும் அப்பா முந்திச் சென்று ஏதேனும் தெருவில் மறைந்து விடுவார்.அவள் நின்று சுழன்று தேடுவாள்.பின்னர் வழக்கமான பதற்றத்துடன் மருத்துவர் வீட்டைச் சென்றடைவோம்.அப்பா முந்திச் சென்று விடுவதும் அம்மா பின்தங்கி தேடுவதும் ,இடைப்பட்ட உணர்வாகவே அப்பா எப்போதும் மனதில் பதிவாகியிருக்கிறார்.அம்மா அகன்ற பிற்பாடு அப்பாவிற்கு என்னிடத்தில் இந்த அவசரம் இருந்தது.அப்போதும் அவர்தான் முந்திச் சென்று கொண்டிருந்தார்.என்.சி.சி.; ஸ்கவுட் ,என்.எஸ்.எஸ் என எப்போதுமே பள்ளிக்காலங்களில் விரைவாகவே இருந்தேன்.ஏதேனும் ஒரு வழியிலேனும் தொற்றிக் கொள்ள வேண்டும் என அவருக்கிருந்த வேகமே அவற்றிற்கு காரணம்.

ஒரு அப்பாவாக அவருக்கிருந்த பதற்றங்கள் நியாயமானவை ,என்பதை காலம் இப்போதும் மீண்டு வந்து நிரூபிக்கிறது.எனது குழந்தைகளின் விஷயத்தில் நானும் அவரைப் போன்ற அப்பாவாகவே இருக்கிறேன் .சில சமயங்களின் நண்பனாகவும்.அப்பாவாக அப்பா இருப்பது குழந்தைகளுக்கு சிறு வயதில் தண்டனை . வளர்ந்த பின்னர் அதுவொரு பரிசு , விளங்க ஒண்ணா பற்று 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"