மாபெரும் நகரத்தின் ராணி தேனி-ஆறு கவிதைகள்

மாபெரும் நகரத்தின் ராணி தேனி
-ஆறு கவிதைகள்


1
என் பிணத்தை அழைத்துக் கொண்டு
எனது கவிதைகளை காட்டித்தர
சென்று கொண்டேயிருக்கிறேன்
போகுமிடமெங்கும்
நீங்களும் இணைந்து கவிதைகளை
அடையும் போது
பிணம் எழும்பி
"ஆஹா"
என்கிறது
ஆச்சரியத்துடன்
அடுத்த கவிதையில்
தடுக்கி விழுகிறது
எனது உயிர்

2

நானின்று மலை பார்த்தேன்
சாரலில் நனையும் யோனிகள் கணக்கில்லை
யோனித்தடமெங்கும்
வழிநின்று கொண்டாடும்
தாவரங்கள்
ஊறும் சுனைகள்
சூரியனும் வந்து இணையும் போது
பெருங்காம நிர்வாணம்
கண்களில் கூச்சம்
எதற்கும் அஞ்சாமல்
நிமிர்ந்து
நிற்கிறது
மாமலை
கரையோரம் தேசிய நெடுஞ்சாலை
பதற்றத்தின்
ஹாரன் ஒலிகள்
பிரம்மச்சரிய மயில்களின்
அகம் பிளந்து கிழிக்கும்
ஹாரன் ஒலிகள்
காப்பாற்றுங்கள்
ஈஸ்வரா ...
மாமலையை
தெய்வ யோனிச்சுரப்பை
எங்களை ...
ஒதுங்கிச் செல்கிறோம்
இந்த பிரம்மச்சரிய மயில்களை
கொஞ்சம்
வழிவிடச்
சொல்லுங்கள்
அடைத்துக் கொண்டு
நிற்கிறார்கள்

3
கோவிலைக் கைவிட்டோம் அவர்கள்
எடுத்துக் கொண்டார்கள்
சூதனமாக
குளத்தைக் கைவிட்டோம் அவர்கள் 
எடுத்துக் கொண்டார்கள்
வளைத்து
தவத்தைக் கைவிட்டோம்
அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்
பிடுங்கி
எடுத்துக் கொண்டவனின் மடியில்
எறியமர்ந்திருக்கிறது கைவிட்ட
குழந்தை
எப்படியெடுத்துக் கொண்டான்
என்பது விளங்காமல்
கைவிட கற்று கொடுத்தவன்
ஒதுங்கியிருந்து
காட்சிகளை
பார்த்துக் கொண்டிருக்கிறான்
காய் பலா சக்கையில்
அடியமர்ந்து
வழிகிறது
தீநீர்
எடுத்ததெல்லாம் கொண்டு
அவர்கள் செய்த ராணுவ வண்டி
விரைந்து கொண்டிருக்கிறது
நமது விலாசங்கள்
தேடி

4

பெருநகரத்தின் பழைய மேம்பாலம் ஏறி இறங்குகையில்
திருநெல்வேலி சந்திப்பு
பேருந்து நிலையம்
தோன்றுகிறது
சிலயிடங்களில் வந்து மறைகிற
நாகர்கோவில் சிற்றூர்கள்
கோவில் வெளிப்பிரகாரங்களில்
நிலா வெளிச்சத்தில் நீண்டு படுத்திருப்பது
நிச்சயமாக வேறெந்த ஊரும் இல்லை
தன்மடியில் தன்தலை சாய்த்து
கிழவியின் சாயலில்
அது இந்த பெருநகரத்தின் ஒரு
தோற்றம்
விடியலில் நகரத்தைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள்
நேற்றைய கொடு நினைவுகளோடு
போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அதன் கடுஞ்சாபத்தை உதாசீனம்
செய்கிறாள்
சுட்ட இட்லிகளை நடைமேடையில் பரத்தும் செல்லியம்மன்
இந்த நகரம் விரைவாக வயோதிகம் பெற்று வருகிறதா என்பதை
பாடிகாட் முனீஸ்வரரிடம் கேட்டுத்
திரும்பிக கொண்டிருக்கிறேன்
இந்த மாபெரும் நகரத்தின் ராணி தேனி
எந்த கருவறையில்
இருக்கிறாள்
சிறுமியாக
என்கிற
கேள்வியோடும்
கூடுதலாக

5

ரயில்பெட்டிக்குள் வேகமாய் நுழைந்த பாடல்
துள்ளி வெளியேறிக் குதித்தது
படிக்கட்டில் சாய்ந்து
அதனை மீண்டும் இழுத்து பெட்டிக்குள்
போட்டேன்
பயணம்
தொடங்கியது
கொய்யாய் பெண்
அவள் ஊர்க்கதைகளைச் சுமந்து
நிலத்தின் சுவையை
பகிர்ந்துச் செல்கிறாள்
பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டிய சிறுவன்
கொண்டு நீட்டிய மல்லிகைப் பூக்களில்
தாயாரின் முகம்
இந்தரயில் இப்போது பகலைக் கிழித்து
ஜந்து நிலம் கடந்து
ஆறாவது நிலத்திற்குள்
பாய்ந்து
கொண்டிருக்கிறது
மணி நண்பகல் பனிரெண்டு
தூரதேசம் வருவதற்குள்
இன்னும் சிலர் பெட்டிக்குள்
நுழையக் கூடும்
அவர்களும் சில ரசானயங்களை
இப்பயணத்தில் ஏற்றுவார்கள்
கோணங்கியின் வெள்ளரிப்பெண்
இறங்குகிற நிலையத்தில்
நானொரு பாம்பாட்டியை
எதிர்பார்த்துப்
படுத்திருக்கிறேன்
பாடலை அவனிடம்
ஒப்படைக்க

6

விளக்கின் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது
பின்புற கண்ணாடியில் எரியும் சுடர் உயரத்தில்
சற்றே அசைகிறது
நிழல்கிறது
அதே சுடர்தான் ஆழத்தில்
நீர் பரப்பில்
தலைகீழாக
நிச்சலனம்
காற்று பூசாத நிச்சலனம்
பற்ற வைத்த காற்றின்
 சுடரில்
ஓங்கியெரிகின்றன
மொத்தம் மூன்று தீபங்கள்
எதிர்வரிசை கண்ணாடியில்
அம்மன் சிறுமியாக தோன்றுகிறாள்
பாவாடையுயர்த்தி
அவள் நேருக்கு நேராக எழும்பி நின்று
 தன் முகம்
பார்க்கிறாள் என்று நினைக்கிறேன்
தாளிருந்து
தொட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்
பின்னர் வாராது இப்பொழுது தோன்றிய
இம்மெய்ப் பிம்பம்
முச்சுடரில்
எரியுமிந்த
இம்மெய்ப் பிம்பம்
மூன்றும் உண்மைதானே
அம்மையே
நானுன்னை இரண்டாகப் பார்த்தேன்
சின்னவளா
பெரியவளா
யார் நீ ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்