மடத்தனங்களின் அருமை

மடத்தனங்களின் அருமை

எப்போதும் ஒன்றிற்கும் அதிகமான மடத்தனங்களை கையில் வைத்திருப்பவர்கள் வாழ்வதை லெகுவாக்கி வைத்திருக்கிறார்கள்.காரண காரியங்களைத் தேடாமல் பிரயாணிக்கிற காரியங்களே மடத்தனங்கள்.எல்லாவற்றிலும் காரண காரியங்களை தேடித் கொண்டிருப்போருக்கு சிக்கலாகி விடும்.தடுக்கி விழுகிற போது ஓடிச் சென்று சரணடைய ஏதேனும் மடத்தனம் கையில் இருக்க வேண்டும்.சதா சந்தோஷங்களில் திளைக்கும் பலரிடம் ஏராளமான மடத்தனங்கள் கைகளில் இருப்பதை பார்த்திருக்கிறேன் .எல்லாவற்றிலும்   காரண காரியங்களை அலசிக் கொண்டே இருப்பவனுக்கு வாழ்க்கை மளிகை கடை வியாபாரம் போலாகி விடும்

மடத்தனங்களுக்கு பலமடங்கு அழகுண்டு .அதன் ரகசியமே எல்லோருக்கும் பொதுவான மடத்தனங்கள் என்று ஒன்றுமே கிடையாது என்பதில் அடங்கியிருக்கிறது.ஒவ்வொருவரும் தங்களுடைய மடத்தனங்களை தங்களேதான் கண்டடைய வேண்டும்.சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.ஒன்றுக்குமே உதவாது என பிறர் கருதுகிற ஒரு மரமொன்றை வளர்த்துவது தொடங்கி ,ஒரு களைத் தாவரத்தைக் கொண்டாடுவது தொடங்கி, காரணிகள் ஏதுமற்ற பயணங்கள் என்று ,பொருந்தா காதலில் ஈடுபட்டு என  எதை வேண்டுமாயினும் ஒருவர் தேர்வு செய்யலாம் .எந்த மடத்தனத்தில்  ஒருவருடைய உள்மனம் குதூகலிக்கிறதோ அதுவே அவருக்குப் பொருந்துகிற மடத்தனம்.

உளவியல் மருத்துவர்கள் கொடுக்கிற மாத்திரைகளை உண்டு வாழ்கிறவர்களைப் போல வாழவே கூடாது நேரடியாக.நேரடியாக வாழ்ந்து பெறுபவற்றை அளிக்க மடத்தனங்கள் வேண்டும்.நீங்கள் செய்வது மடத்தனமாக இருக்கிறதே ! என பிறர் கூறும் காரியங்களில் உள் ஆனந்தம் பெறுகிறீர்கள் எனில் அது உங்கள் சொத்து கைவிட்டு விடாதீர்கள்.உங்கள் மடத்தனங்களின் பொருள் பிறருக்கோ உங்களுக்கோ தெளிவாகக் கூடாது .அதில் நீங்கள் ஆனந்தத்தை மட்டுமே பெறவேண்டும்.தெளிவிற்கு அங்கு வேலையில்லை.ஒரு மடத்தனம் உங்களில் அர்த்தம் பெற்றுத் தெளிகிறது என்றால் அந்த மடத்தனம் வெகுவிரைவிலேயே உங்கள் கையை விட்டு அகலப் போகிறது ,விடைபெறப் போகிறது என்று பொருள்.

காரண காரிய அறிவு என்பது செய்கிற காரியத்திலிருந்து அடைகிற உருவம்.மடத்தனம் உருவம் வழங்காது.கொடுந்தனிமை நமக்கு மனமுவந்து வழங்குகிற பரவச வரங்கள் மடத்தனங்கள் .அள்ள அள்ள குறையாத செல்வங்கள்.திகட்டாத செல்வங்கள்.

எனது வாழ்க்கையில் இருபது வருடங்களுக்கும் மேலாக தீவிரமான மனச் சோர்வில் இருந்தேன்.தமிழ் நாட்டைச் சார்ந்த முக்கியமான மனநல மருத்துவர்கள் பலரை எனக்குத் தெரியும்.அவர்களிலும் பலர் மனச் சோர்வில்தான் இருந்தார்கள்.அறிவை நம்புவோர்க்கு மனச் சோர்வு நிச்சயம்.அறிவை நம்புவது மறைமுகமாக நமது அகந்தையை நாமே நம்புவதுதான்.அறிவு இல்லாமலும் முடியாது அதனை கைவிடவும் தெரிந்திருக்க வேண்டும்.பின்னாட்களில் அந்த மருத்துவர்களில் சிலர் என்னுடைய நண்பர்களாகவும் ஆனார்கள்.என்னுடைய சில உபதேசங்களைக் கருத்திற் கொண்டு மடத்தனங்களுக்கு பழகவும் செய்தார்கள்.

ஒருவராலும் என்னை சீர் செய்ய இயலாத போதுதான் நான் மடத்தனங்களுக்கு என்னை ஒப்புவித்தேன்.உயிர் பிழைத்தேன்.இப்போது என்னைக் காத்துக் கொண்டிருப்பவை எல்லாமே என்னுடைய ஆகச் சிறந்த மடத்தனங்கள்தாம் .ஏராளமான மடத்தனங்களால் நிறைந்தது இப்போதைய எனது வாழ்க்கை .ஏன் இதனைச் செய்கிறீர்கள் ? என என்னை நோக்கி கேள்வி கேட்போர் அத்தனை பேரையும் எதிர்த்து எள்ளி நகைக்கிறது இப்போதைய எனது வாழ்க்கை. ஒரு மருத்துவர் இந்த துறையிலேயே மிகவும் மூத்தவர்.பேர் பெற்றவர் .எழுத்தாளர்களுக்கு அவர் அதிகமாக மனச் சோர்விற்கு எதிரான குழிகைகளைத் தரக் கூடாது என்கிற கொள்கை வைத்திருந்தார்.அதுவொரு நல்ல கொள்கைதான்.மனச் சோர்வுதான் அவர்களை எழுதத்   தூண்டுகிறது என்கிற எண்ணம்  அவருக்குண்டு.அப்படியில்லை என்பதை மடத்தனங்களை ஆராதிக்கத் தொடங்கிய பின்னரே அறிந்து கொண்டேன்.

மடத்தனங்கள் அதிகம் உள்ளவர்களோடு எளிதில் இணங்கும் குணம் எனக்குண்டு.ஏன் போகிறோம் ? எங்கு போகிறோம் என்றால் விலகி கொள்வேன் பத்திரமாக .இதைச் செய்தால் என்ன கிடைக்கும் ? என்றோருவன் கேட்டு விட்டால் அப்புறம் அவனைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.அவன் செல்லும் திக்கும்,எனது திசையும் முற்றிலும் வேறு வேறானவை.எனது மடத்தனங்களைக் கண்காணித்து வேவு பார்த்து நோக்கம் கற்பிப்போர் எனது ஆனந்தத்தை எதிர்த்துப் போரிடுபவர்கள் என்பது இப்போது எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"