பால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான்

பால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான்

நீ இன்னும் பால்ய காலங்களையே தேடித் கொண்டே இருக்கிறாயா ? எனக் கேட்டேன்.அவனுக்குள் இருந்த சிறுவனுக்கு நான் என்ன கேட்கிறேன் என்பது விளங்கவில்லை.பால்ய காலங்களை மீண்டும் தேடித் செல்வது நரக ஒத்திகையில் நன்றாக  ஈடுபடுவது.அந்த காலம் எங்குமே கிடைக்காது.நினைவில் வாழுகிற மிருகம் அது.பழைய காதலியை தேடித் செல்வதை ஒத்தது இந்த பயணம் .அப்படியே கண்டு பிடித்து விட்டால் இவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்று தோன்றும்.எல்லாமே மாறிவிட்டது என்று சொன்னான்  ஜவகர்.ஒன்றுமே மாறவில்லை நாம்தான் மாறியிருக்கிறோம் என்று சொன்னேன் நான்.காலமும் வாழ்வும் சதா நம்மைப் புரட்டிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. பால்யம் நினைவில் நின்றெரிதலே சுகம்.

ஏராளமான வடுக்கள்,முகம் களைத்துப் போயிருக்கிறது.வாழ்க்கை எத்தனை முறை அவனைப் புரட்டியடித்திருக்கும் ? ஆனாலும் அவனுள் வசிக்கும் சிறுவன் அப்படியே உளம் வாடாமல் இருக்கிறான்.அந்த சிறுவன் வா... நாம் சென்று பழைய விளையாட்டுகளை விளையாடுவோம் என்று அழைக்கவில்லை  .அழைக்கும் தைரியம் இப்போது அவனிடம் இல்லை.அந்த கொதிகலன் அவனுள் உடைந்து விட்டது.

ஜவகர் என்னுடைய ஆரம்ப காலக் கதைகள் சிலவற்றில் இடம் பெற்றிருக்கிறான்.அப்படியே அல்ல.என்னுடைய கதா   பாத்திரங்கள் யாருமே அப்படியே வந்து கதைகளில் உட்கார்வது கிடையாது.உடுப்புகளை மாற்றிவிடுவேன்.உறுப்புகளையும் மாற்றிவிடுவேன்.கதைகளில் வருகிறவர்கள் பிறிதொன்றாக மாறி விடக் கூடியவர்கள். அவர்களை நானே கூட அப்படியே தேடுவதில்லை.அவர்களின் ஒரு சொட்டுக்குப் பெயர் சூட்டியிருப்பேன் அவ்வளவுதான்.

கடல் நண்டுகள் பிடிப்பதில் பலே கில்லாடி ஜவகர்.கடலுக்குள் இறங்கி பாறைகளில் கையிட்டுப் பிடித்து கரைக்கு எடுத்து வருவான்.ஒருவகையில் பார்த்தால் அவன் பிடித்துக் கொண்டுவருகிற நண்டுகள்தான்   எங்கள் பால்யம்.அது அத்தனை சுவையானது ?.கடற்கரைகள் முழுக்க எங்கள் பகுதிகளில் பெரிய பெரிய தேரிக் காடுகள் .உயரம் உயரமான மணல் தேரிகள்.பெரியவர்கள் எங்களை வேறு திக்குகளில் தேடித் திரிவார்கள்.நண்டுகள் பிடிக்கக் கூடாது என்பார்கள் .எங்களுக்குள் பால்யம் தந்த ஊற்று இந்த நண்டுகள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.நாங்களோ மீண்டும் மீண்டும் நண்டுகள் பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஒருமுறை கிறிஸ்மஸ் அன்று  ஜவகர் காணாமல் போய்விட்டான் .காணாமல் போனவனைக்  காட்டிலும் பிற குழந்தைகள்தான் பெரியவர்களிடம் மாட்டிக் கொண்டோம்.ஏன் நண்டு பிடிக்கப் போகக் கூடாது என்பதற்கு அவர்களுக்குத் தெளிவான காரணம்  அன்று கிடைத்திருந்தது.விடியற்காலை வரையில் கடற்கரையெல்லாம் தேடித் கொண்டே இருந்தோம்.அவனை அலைகள் இழுத்து சென்று வேறு ஒரு துருவத்தில் கொண்டு   செல்ல மீனவர்கள் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் .அது போன்ற ஒரு நாளாக இருந்தது அவனோடு இன்றிருந்த நாள்.

அவன் விடைபெற்றுச் சென்ற பிறகு என்னுடைய சிறுவன் என்னுடைய மடியில் ஏறி அமர்ந்திருப்பதை உணர்ந்தேன்.அவன் கொண்டு வந்து சேர்த்த பால்யத்திற்கு நன்றி.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"