தீவிரவாதி என்பார்கள் - கவிதைகள்

 தீவிரவாதி என்பார்கள் - கவிதைகள்
-----------------------------------------------------------

அவள் சிரிக்கும் போது
இப்பொழுதிலிருந்துதான் சிரிக்கிறாள்
ஒரு பூ விரிவதைப் போல
ஒரு சூரிய அஸ்தமனத்தை ஒப்ப
ஒரு நதியில் மூழ்கி எழுவது பயின்று

அழும்போதுதான் எந்த நூற்றாண்டிலிருந்து கொண்டு
அழுகிறாள் என்று தெரியவில்லை
பயமாக இருக்கிறது

ஏழுகடல் தாண்டும் சித்தன்
எந்த நூற்றாண்டிற்குச் சென்று
சமாதானம் சொல்வது ?

2

எனது குயில்கள் கூவத் தொடங்கும் போது
மாலை இப்போது ஆறு மணி
இந்த மொத்த நாளிலிருந்து
எனக்கு கிடைத்த பிரபஞ்சத் துண்டு.

நாளின் அசதி நீரில் கழிய

போருக்குச் சென்று திரும்பியது போலும்
காணாதிருந்த கண்களில்
ஒரு பச்சைக் கிளி
கொண்டு நிரப்புகிறது
காட்சிகளின் பெரும் ஊற்றை

3

கைப்பிடியளவு கடல்தான் இந்த உடல்
என்ற ஒருவனை கடலில் கரைத்து விட்டுத் திரும்பினோம்
அப்படியானால்
எத்தனை கைப்பிடியளவு கடலாக இருக்கும்
இந்த கடல் ?

ஒவ்வொரு கைப்பிடியிலும் கடலளவு
நிறைந்திருக்கும் காமம் என்றால்
கைப்பிடியளவும் தீராக்
கடல்தானோ ?

கரைந்து சென்றவன் விட்டுச்
சென்ற அனுபவ எச்சம் மௌனம் பேசா
மணலுறுத்தல்
இன்றைய காட்சியெங்கும்

4

தென்காசி

ஒரு மடியில் மற்றொரு மடி
மற்றொரு மடியில் பிறிதொரு மடியென நீண்டு செல்லுகிற வீடுகள்
எல்லாமடிகளும் கால் நீட்டிப் படுத்திருக்கும் தெரு
கழிவு வாய்க்கால்கள் தெருவிற்குப் பின்புறத்தே
ஒளிந்து தெரியும் மஹா கோபுரம்

ஒரு மடியில் மற்றொரு மடி
மற்றொரு மடியில் பிறிதொரு மடியென படிந்த
ஓட்டுக் கூரை வீடற்ற வீடு

கவிஞனின் மடியில் படுத்துறங்க
இந்த நகரத்தில் வியாபாரிகள் அகன்ற பிறகு
வரும் இரவு
கோபுரத்திற்குப் பின்னே பவுர்ணமியில்
உதித்து வெளியேறுகிறான்
விக்ரமாதித்யன்

இப்போது இந்த நகரம்
அவனுடையதாயிற்றே

[ விக்ரமாதித்யனுக்கு ]

5

ஒரு மாபெரும் சர்வாதிகாரி எனக்குள்ளமர்ந்து
பொட்டல் வெளியில்
பயணிக்கையில்
இந்த நிலமெங்கும் என் சாம்பலை தானியங்களைப் போல தூவுங்கள் என கத்துகிறான்
அவன் கவித்துவத்திற்கு கைத்தட்டல்கள் சேருகின்றன

கொஞ்சம் பொறுக்கமாட்டானா இந்த பிச்சைக்காரன் ?
தானியமாய் தூவுவது இருக்கட்டும்
களவுபோய்விட்ட எனது தானியங்களை கைவசமாக்குங்கள் முதலில்
பிறகு பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என்கிறான்

நாடோடிக்கு அந்திச் சூரியனின் ரெத்தக்கலங்கலில்
குருதியின் வெப்பம் பூக்க அம்மன் பிரச்சனமாகிறாள்

சூபி பத்துதலைகளை வேடிக்கை
பார்த்தாயிற்று
பத்துதலைகளும் இல்லையானால் யாதடா மனுஷா நீ
என்றொரு சாதுவைக் கடக்க
எல்லார் முகத்திலும் வந்து
ஒடுங்கிற்று பத்து முகம்

அன்பின் முகத்தை மட்டுமே தாளம் செய்தவன் முதுகில்
ஒங்கி மிதித்தவன் வழிப்பறிக்காரன்

அப்படியானால் சர்வாதிகாரிக்கும் மீதம் இருப்பது
ஒன்பது முகங்களா
மிஸ்டர் சாப்ளின் ?

6

பனிரெண்டு தினங்களில்

நான்கு பேர் இறந்து போய்விட்டதாகச் சொன்னார்கள்
நானறியவில்லை

புயல்மழைச் செய்திகள் நாற்பது
கடந்ததாம்

நின்றவர் பறந்ததும் பறந்தவர்
வந்ததும்
நானறியவில்லை

புதிதாக பாலம் திறந்திருக்கிறார்கள்
புரோட்டா கடையிருந்தயிடத்தில்
கல்யாண மண்டபம்

ஒரு நூறுபேருக்கு கல்யாணம்
முடிந்திருக்கிறது
பத்து நூறுபேர் பட்டதாரியாகியிருக்கிறார்கள்
எங்கள் நகரத்தில்

எண் கணித ஜோதிடத்திற்கொரு நிபுணர்
வந்திருக்கிறார்
நரம்பியல் மருத்துவர் இருவர் புதியவர்
பாலாலயத்திலிருந்து சாமி
வீதிவலம் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்

இன்னும் ஏராளம் நடந்து விட்டது என்கிறார்கள்
நானேதும் அறியவில்லை
அவர்களோடொப்பம் நானும் வசித்தலைவது
 இதேயூர்தானென்றாலும்

7

மசால் வண்டிக்காரனின் மகள்

"அப்பா வண்டிய மாத்துப்பா" என்ற போது
மகள் பெரியவளாகிவிட்டாள் என்பதை அப்போதுதான்
கவனித்தான் மசால் வண்டிக்காரன்

"நீ தேவைப்பட்டால் வாடகைக் கார் அமர்த்தி
சென்று வா மகளே"
என்கிற பதிலில் அவன் கோபம் கொள்ளவில்லை.
இயல்பாகச் சொன்னான்

அழுக்கடைந்த தனது டி.வி.எஸ்.50 இருபுறமும்
மசால் பாக்கட்டுகள் சுமந்து இந்த நகரத்தின் சந்து பொந்தெல்லாம்
சுற்றித் திரும்பும்
அழுக்கடைந்தது அதன் புறம் மட்டும்தான்
இன்ஜினுக்கு இருப்பதோ மகளின்
இருதயத் துடிப்புதான்

பின்னிருக்கையில் இருந்து
"நான் அவனிடம் பேசவில்லை" என்னும் தொனியோடு
காதலனுடன் பேசிக் கொண்டு வந்தவளை
வேண்டுமானால் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன்
"பேசி முடித்த பின் செல்லலாம் மகளே"
என்றவன் சொன்னபோது
எங்கோ உள்ளுக்குள் பட்ட அடியின் வலி

அவள்
உணரத் தகாது என்பதுதான் அவன் விருப்பம்
அவளும் உணரவில்லை
நன்று

அப்பாவுக்கு எதுவுமே புரியாது என்பதில்தான் என்னே ஒரு சந்தோசம்
 மசால் வண்டிக்காரனின் மகளுக்கு

8

பிரான்சிஸ் கிருபாவின் ஊரில்
தொடுவானம் தரையில் வந்து விழுகிறது
சூரிய அஸ்தமனம் தரையில் தெரிகிறது

உதயமும் இவ்வாறே இருக்கக் கூடும்
கைக்கெட்டும் தூரத்தில் வானம்
இடுகாடும் இருக்கிறது சுடுகாடும் இருக்கிறது
குறையொன்றும் இல்லை

உனைக் கொன்றுவிடுவேன் என்கிற
பகிரங்க வெயில்

எல்லாவற்றையும் தாண்டி
எட்டு பெட்டிகளைக் கொண்ட ரயில்
ஊருக்குப் புறத்தே செல்கையில் கைகாட்டி விட்டு
வீடு திரும்பினேன்

பத்தினிப்பாறை என்பது இவ்வூரின் மேலே
வந்து விழுகிற எவ்வளவு
கடுமையான வன்சொல்

9

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத் தொடங்குகிறது

தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை

ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச் செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது
வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டேன்

எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை யாருக்கும்
தெரிவிக்கமாட்டேனென உத்திரவாதம் கூறி திரும்பிக் கொண்டிருக்கிறேன்

எப்போதும் போல ஜன்னலோரம் தானெனதிருக்கை

10

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத் தொடங்குகிறது

தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை

ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச் செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது
வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டேன்

எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை யாருக்கும்
தெரிவிக்கமாட்டேனென உத்திரவாதம் கூறி திரும்பிக் கொண்டிருக்கிறேன்

எப்போதும் போல ஜன்னலோரம் தானெனதிருக்கை

11

ஒரு நாள்தான்
இடைவெளி போலும்

சாலையில் விழுந்த பர்ஸை எடுத்துக் கொண்டு
நிமிர்ந்து நோக்கும் விஜய லெட்சுமி

தளர்ந்த தன் முகம் திருப்பி
வண்டியில் காலுதைத்துக் கிளம்புகிறாள்

ஒருநாளுக்கு அப்புறம் நாணயத்தின்
மறுபக்கத்தை கவிழ்த்தி
என்னுடன் பாட்டம் விளையாடிய
விஜய லெட்சுமியை
 அவளிடம் கைநீட்டுகிறேன்

அடையாளம் காண இயலாத
விஜய லெட்சுமியின் வண்டி விரைந்து
முன்னேறிக் கொண்டிருக்கிறது பணிக்களைப்பில்

சிறுமியை என்ன செய்வது என்று தெரியாது
அறைக்கு அழைத்து வந்து விட்டேன்

சாலையில் தொப்பென்று விழுந்தது
 அவள் பர்ஸ் மட்டுமல்ல
ஒருநாள் முன்பக்கம் இருந்த அவள்
சிறுமியும்
சேர்ந்துதானே

தங்கள் சிறுமியை தொலைத்தோரே
வந்து பெற்றுச் செல்லுங்கள்

ஒருநாள் அளவிற்குத்தான் தூரம் இருவருக்கும்
ஆனால் எவ்வளவு மகா தூரத்தில் இருக்கிறார்கள் இருவரும்


12

எனது அறை திறந்துதான் இருக்கிறது
எப்போதும் போலவே

எப்போது வேண்டுமாயினும் நீங்கள் வரலாம்

நீங்கள் யார் என்று கேட்க மாட்டேன்
ஊர் பெயர் அவசியமற்றது
உங்கள் பாலினம் என்ன ? தேவையில்லை

முதலில் கண்ட கனவில் திறக்கப்பட்டதிந்த கதவு
எட்டு பாழிகள் இருந்தன

நீங்கள் உங்கள் பெருமைகளை எடுத்து வந்தால்
இங்கே உங்களுக்கு சோர்வு தட்டக் கூடும்

திறக்கப்பட்ட எட்டு பாழிகள் வழியே
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தெருக்கள் சாலைகள் வீடுகள் கேந்திரங்கள்
கிளிகள் சிட்டுக் குருவிகள் என
எனக்கு ஒன்பது கண்கள் தெரியுமா ?
எட்டாவது பாழியிலிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது
எனது முதிர்ந்த ஆண்குறி
என்னுடைய மூன்றாவது கண்

எட்டு கண்களுடன் நீங்களும் வந்திணைந்தால்
நாம் ஒன்பதாவது கண் வழியே ஒன்றாகக் காண்போம்
நதிகளையும் ,மாமலைகளையும் ,தொடுவானத்தையும்

தேகம் இதில் முதல் கண்
தேக்கமற்றது இரண்டாவது கண்
பரலோகம் ஒரு கண்
பார்க்க இயலாதைவை இரண்டு கண்கள்
பார்க்க இயலாதவற்றைக் காணும் கண்கள் இரண்டு

நெற்றிக்கண் என்கிறார்களே
அது எப்போதும் கனவு பார்ப்பது எனக்கு

திறந்துதான் இருக்கிறேன்
உள்ளே வரலாம்
இல்லாத அறைக் கதவை தட்டுவதற்குப் பதிலாக
"சாப்பிட்டு விட்டீர்களா ?" என்று கேட்டு விட்டு வாருங்கள்
இல்லையெனிலும் எப்போதும் உங்களுக்கான உணவை
எடுத்துதான் வைத்திருக்கிறேன்
உடலின் அப்பம் போல

நீங்கள் திரும்பிச் செல்கையில் என்னிடம்
சொல்லத் தேவையில்லை

இரண்டு கண்களோடு மட்டும் இந்த அறைக்குள் உட்புகுந்தால்
கருக்கரிவாள் இன்னும் பதமாகத் தானிருக்கிறது
இரண்டு கண்கள் கொண்ட தலைகளை கொய்த்தெடுக்க
அது தயாராக இருக்கக் கூடும்
ஜாக்கிரதை

13

நீ வெளியேறிச் செல்லும் போது
ஒரு கொக்கு சாலையில் குறுக்கே பறந்து சென்றால் நீ
பாக்கியவான்

ஒரு செம்பருந்தைக் காணாமல் திரும்புவதை ஒருபோதும்
பயணமென்று கூறாதே

கூட்டமாக பறவைகள் நீலத்தின் உயரத்தில்
வரிசையாக நகரும் போது அப்படியே நின்று விடு

மரங்களில் இருந்து சப்தத்தில் விடற்கும்
சிறகுகள் மீண்டும் அமரும் வரையில் காத்திரு
செம்மறிகளை தொட்டுப் பார்த்து
பீதியுண்டாக்காதே

எதையும் தொட்டுப் பார்க்க விழையாதே
அது சம்சாரியின் வேலை

இரண்டு மைனாக்கள்
உனக்குக் காத்திருக்கும்
பேசிப் பழகி விடு.

நீ பேசுவது அவற்றுக்கும்
அவற்றின் மொழி உனக்கும்
எட்டும் போது பெரும்பாலும்
காக்கைகள்
உன் கையில் வந்து அமரத் தொடங்கி விடும்

இத்தனையும் செய்து விட்டு
வீடு திரும்பும் போது எங்கே போயிருந்ததாய் ?
என்று கேட்பார்கள்
சும்மா இங்கே தான் இருந்தேன் என்று
சொல் தைரியமாக
தவறில்லை

கொஞ்சம் அசதியாக இப்படித்தான் செய்கிறேன் என்றால்
கொலைமுயற்சி செய்வாளுன்
 மனைவி
ஈவிரக்கமின்றி
மறைத்து விடு

வெளியே விஷயம் தெரிய வேண்டாம்
தீவிரவாதி என்பார்கள்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்