சாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி

சாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி

சாதியுணர்ச்சி என்பது அதன் உள்வட்டத்தில் தேங்கி நிற்கிற வினோதமானதொரு காமம்.நமது கூட்டுப் பெருக்கில் நமக்கு கிடக்கிற சில்லிப்பு இருக்கிறதே அதுதான் சாதியுணர்ச்சிக்கு அடிப்படை.தனியே இருக்கும் போது , நாம் ஒரு மனிதனாகவும் நாலுபேர் தொங்கிப் பிடிக்கக் கிடைத்தால் நாம் வேறொரு மனிதனாகவும் இருக்கிறோம்.சாதிகளில் மட்டும் என்றில்லை அமைப்புகளில் ,நிறுவனங்களில் ,கட்சிகளில் ,சாதியெதிர்ப்புக் கூட்டங்களில் கூட இதன் தன்மை உண்டு.ஒருமித்த கொள்கை கொண்டோர் பிறரை கூட்டு சேர்ந்திருக்கும் போது தாக்குவதற்குத் துணை நிற்பதும் இதே உணர்ச்சிதான்.தனியே இருக்கும் போது ஒருவன் எவ்வாறு நடந்து கொள்வானோ அது போலவே கூட்டமாக  இருக்கும் போதும் நடந்து கொள்வானோ அப்போது முதற்கொண்டுதான் நாகரீக மனிதனாகிறான்.அது தான் சார்ந்த கூட்டமாகவும் கூட இருக்கலாம். இல்லாமல் இருப்பதெல்லாம் பொய்யுருக்கள் .

முதலில் தனி மனிதன் தனியாக வாழ்வது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  சாய்வு கொண்ட கூட்டத்தில் மட்டும்தான் உனக்கு ஜொலிப்பு இருக்கிறதென்றால் உனக்கின்னும் அருகதை கூடவில்லை என்று பொருள்.தனியே வாழ்வதற்கு பயத்தை முதலில் வெல்வது எப்படி ? என்கிற பொருள் குறித்து ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற ஞானிகள் நிறைய விவாதித்துப் பொருள் கண்டிருக்கிறார்கள்.கூட்டத்தில் மட்டுமே பயமின்றி இருப்பது தொல்குடிகளின் நிலை.உதாரணமாக நீங்கள் எதிரியைத் தாக்குவதற்குரிய அனைத்து சக்தியையும் கைவசம் வைத்திருக்கும் போதும் தனியே இருப்பது போல நடந்து கொள்ள வேண்டும்.தாக்க நேருமாயினும் கூட நீங்கள் தனியே இருந்து தாக்குவது போலவே தாக்க வேண்டும். கூட்டம் திரளாமல் இருக்கும் போது நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்களோ அதுவே உங்களுடைய நிஜம்.களரி போன்ற வித்தைகளை கற்றுத் தருகிற ஆசான்கள் கற்றுத் தருவதற்குத் தொடங்கும் போது ; இதையெல்லாம் நீ கற்றுக் கொள்வது யாரையும் தாக்காமல் இருப்பது எப்படி ? என்பதை அறிந்து கொள்வதற்குத் தானே தவிர தாக்குவதற்காக இல்லை என்பதை சொல்லித் தருவதுண்டு.

இங்கே நீங்கள் கவனித்தால் தெரியும் .தனியே இருக்கும் போது மிகவும் சுருங்கிப் போயிருப்பவன்,நாலுபேர் கூட்டணி சேர்ந்தால் எப்படி ஊதி  பெருத்து விடுகிறார்கள் என்பதை.இதை ஏதோ வெளியாட்களுக்குச் சொல்லுவது போல சொல்லவில்லை.நாம் இவ்வாறுதான்  இருக்கிறோம்.நீங்களோ நானோ இதற்கு விதிவிலக்கில்லை.

பின்னணியற்ற பெண் எனில் நமக்கு அவளிடம் ஈர்ப்பு கொட்டினால் அடங்கி விடும்.பின்னணியற்ற ஆணிடம் பெண்ணுக்கும் இங்கே வசீகரம் கிடையாது.தனியாகவெனில் அவள் எவ்வளவு கொடூரமாக துண்டாடமுடியுமோ அந்த எல்லைவரைக்கும் சென்று  துண்டாடுவாள்.எல்லா குறையையும் எடுத்து பரப்பிவிடுவாள்.இரண்டொரு  நாளில் தீர்ந்து போவார்கள்.காதல் திருமணங்கள் அடைகிற வேதனைகள் இதன்பாற்பட்டது.பின்னணி கடுமையாக இருந்தால் மட்டும்தான் நம்மால் அடங்க முடியும்.தனிமனிதனாக நாம் இன்னும் வாழத் தொடங்காததிலுள்ள குறை இது.

ஒருசமயம் எங்கள் பகுதியே  எண்ணம் கொண்டாலே பயந்து நடுங்கும் ஒருவருக்கும் எனக்கும் முரண்பாடு பகை .நானோ ஊரிலிருந்து பொது இடம் ஒன்றில் வந்து வாழ்கிறவன்.தனியன்.அவனுக்கோ ஏராளமான குடுமிகள்.தடுக்கி விழுந்தால் நாலு குடுமிகள் வந்து முந்துவார்கள்.ஆறுமாத காலங்களுக்கும் மேலாக பகை நகர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.நள்ளிரவில் எங்கேனும் போய்விட்டது திரும்பிக் கொண்டிருப்பேன்.வழிமறித்து மல்லுக்கு வருவார்கள்.தாங்கி கொள்ள இயலாத சல்லித்தனங்கள்.ஒவ்வொரு எடுபிடியும் தலையின் பெயரை சொல்லித் தாக்க வருவான்.என்ன செய்வது என்றே தெரியவில்லை.குடிப்பழக்கம் கொண்ட ரௌடியெனில் காலையில் அவன் குடிப்பதற்கு முன்னரே சென்று பார்த்து விட்டீர்கள் எனில் தலை தொங்கித்தான் கிடப்பான்.எனக்கு வாய்த்த எதிரியோ குடிப்பழக்கம் இல்லாதவன்.ஸாகா செய்யக் கூடியவன் காலையில்.வீட்டுக்கு வெடிகுண்டெல்லாம் வைத்து விடுவோம் என்று அவன் குடுமிகள் வலிபேசித் திரிந்தன.

பொறுக்க இயலவில்லை.காலையில் நேரடியாகக் கிளம்பி அவனுடைய வீட்டிற்குச் சென்றேன்.குடுமிகள் பயிற்சியில் இருக்க தலை சட்டையில்லாமல் நின்று கொண்டிருந்தது.அவனுக்கு வாய்ப்பு எதுவுமே வைக்காமல் " அரிவாள் நீ வெட்டினாலும் வெட்டும் நான் வெட்டினாலும் வெட்டும்."; நாலுபேரோடு மட்டுமே எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற நாய் நீ ? நான் தனியாக இருப்பவன்.உனக்கு என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டேன்.எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று சொல்ல நடுங்கினான்.எனக்கு இந்த அனுபவமே புதிய அறிவாக அமைந்தது.பின்னர் எப்போதென்றாலும்   எனது நண்பர்களுக்கென்றாலும் சரி ,இது போன்ற சிக்கல்கள் தோன்றினால் எதிரியை தனியாக பார்க்கவே சொல்லித் தருகிறேன்.அவன் பக்கம் சந்திப்பின் போது ஆட்கள் இருக்கலாம்.உங்கள் பக்கம் ஒரு சல்லிப்பயல் கூட இருக்கக் கூடாது.  மிகவும் தெளிவாகத் தான் நான் அன்று துணைக்கு ஒருவரையும் அழைத்துச் செல்லவில்லை. அவ்வளவுதான் விஷயம்.அதன் பிறகு அவர்கள் எனது வீட்டிற்கு குண்டு வைக்கிற கொள்கை முடிவை மாற்றிக் கொண்டார்கள்.

பேனரோடு தாக்க முற்படுபவர்களை பேனர் இல்லாமல் தனிமைப்படுத்தி எதிர்கொள்ள வேண்டும்.துவண்டு போவார்கள். பேனரை இணைத்து விட்டீர்கள் எனில் சக்தி கொண்டெழும்பி விடுவார்கள்.  .கூட்டம் என்பது தாழ்வுணர்ச்சியின் காம ஆற்றல்.நாய் ஒருபோதும் பயப்படாதவர்களை கடிப்பதில்லை.அதனால் பயத்தை மட்டுமே கடிக்க முடியும் .நாயைக் கட்டுவது என்று சொல்வார்களே அது ஒன்றுமே கிடையாது .சாந்தி யோகத்தில் இருக்கத் தெரிந்தவனிடம் நாயால் குரைக்கக் கூட இயலாது.

நாம் தொடர்ந்து கூட்டமாக மட்டுமே வாழப் பழகி வைத்திருக்கும் சமூகம்.தனிமனித வாழ்வு என்பது என்ன என்பதனை அறிந்து கொள்ளாதவரையில் சாதியை நம்மால் கடக்கவே இயலாது என்பதுதான் உண்மை.ஏனெனில் நம்முடைய காமம் சேகரமாகியிருக்கும் இடம் அது. இதற்கு மதத்தையும் பிசாசுகளையும் காரணம் காட்டுவதால் ஒரு பலன் கிடையாது.மேலும் மேலும் சாதிகளை உருவாக்கிக் கொண்டுதான் இருப்போம்.கொள்கைகளும் கோஜங்களும் புதிய புதிய சாதிகளாக.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்