NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம்

 NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி  முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம்

நீட் NEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி, முறைகேடுகளுக்கான புதிய சாத்தியம்
நம்மிடம் இல்லாத ஒன்றைச் சுட்டி அதுவே தகுதிக்கான அடிப்படை என்கிற ஒரு தரப்பினர் வரலாறு நெடுகிலும் பயின்று வந்திருக்கிறார்கள்.எப்போதுமே மக்களுக்கு,ஏழைகளுக்கு எதிரான தரப்பினராக இருப்பவர்கள் மேற்கொண்டு வரும் அடிப்படை மனோபாவம் இது.தங்களிடம் அதிகாரத்தை கொண்டு நிறுத்தி அனைத்தையும் அபகரிக்கும் நோக்கம் கொண்ட தரப்பு இது.இந்த மனோபாவம் கொண்டவர்களும் அவர்கள்தம் தரப்பினரும் சமீபகாலங்களில் அதிக அழுத்தம் பெற்று வருவதை அனைத்து துறைகளிலும் பார்க்க முடிகிறது.மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வும் இத்தகைய ஒன்று.
இந்தியாவின் மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாட போதனைகள் உள்ளன.குறிப்பாக கேரளாவின் கல்வி முறைக்கும் தமிழ்நாட்டின் கல்வி முறைக்கும் சம்பந்தம் இல்லை.இது போன்றே மாநிலத்திற்கு மாநிலம் கல்வியில் வேறுபாடுகள் அதிகம்.மாநில சுய உரிமைகள் சார்ந்த விஷயங்கள் இவை.ஒரு மாநிலத்திற்குப் பொருந்துகிற நடைமுறைகள் பிறிதொரு மாநில நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை.இதுவே ஒரு நல்ல நடைமுறையும் கூட.
தமிழ்நாட்டு மாணவர்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்களில் பயில்பவர்களே பெருவாரியானவர்கள்.கிராமத்து ஏழை மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் இது.மாணவர்கள் பயிலாத பாட திட்டத்திலிருந்து கேள்வித்தாளை உருவாக்கி அதில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர முடியும் என்கிற நிலையை இந்த நீட் நுழைவுத் தேர்வு ஏற்படுத்தியுள்ளது .குழந்தைப்பருவம் முதற்கொண்டு இவர்கள் பயின்று வரும் பாடத்திட்டம் ஒன்றாகவும் தேர்வுகள் முற்றிலும் இதற்குத் தொடர்பற்ற மற்றொரு பாடத்திட்டமாகவும் அமைவது என்பது மிகப் பெரிய சமூக அநீதி.குறிப்பாக கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழை மாணவர்களுக்கு எதிரான சூழ்ச்சியே இந்த நீட் நுழைவுத் தேர்வு.
நீ கற்காத பாடத்திலிருந்து கேள்விகள் கேட்போம்; போட்டிக்கு வா ! என்று அழைக்கிறார்கள்.காரணம் கேட்டால் நீ கற்கின்ற பாடம் தகுதியற்றது என்கிறார்கள்.ஆதியிலிருந்தே இந்த தரப்பினர் இதே குரலில்தான் பேசி வருகிறார்கள்.ஆதியிலிருந்தே கல்வியில் இருந்த ஏற்றத் தாழ்விற்கு ,நீதியின்மைக்கு காரணமாக இருந்த குரல் இது. கற்பது ஒன்று போட்டி அதற்கு வெளியிலிருந்து.அதாவது எதிராளி கற்று வைத்திருக்கும் முறையிலிருந்து. இதுவே இந்த நீட் நுழைவுத் தேர்வின் பிரதானமான குளறுபடி.
இந்த குளறுபடியைக் களைய முதலில் எது தகுதி என்பதனை கூடி முடிவு செய்யுங்கள்.பின்னர் அதனை தெளிவு செய்யுங்கள். தகுதி என்பது என்ன ? அதற்கு பாடத்திட்டங்களில் என்னென்ன செய்ய வேண்டும் ? என்பதனை விளக்குங்கள்.ஒருவேளை நீங்கள் ஏழைகளும் கிராமத்து மாணவர்களும் எங்கெல்லாம் பங்கேற்கிறார்களோ எல்லாமே தகுதி குன்றியவை என்று கூட சொல்லக் கூடும் .அப்படியானால் அதனையும் தெளிவுபடுத்துங்கள்.எங்களைப் போன்ற சிறுமூளைகளுக்கு உங்களை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். .
இந்தியா முழுமையும் ஒருவிதமான பாடத்திட்டத்தை போதிப்பது சாத்தியம்தானா ? ஒருவேளை சாத்தியம் என்றால் அதனை நீதியென்று ஏற்கலாமா ? மாநிலங்கள் அதனை ஒத்துக் கொள்கின்றனவா ? எல்லாவற்றையும் விளக்குங்கள்.
இந்திய அடிப்படை அரசியல் சாசனங்களுக்கு எதிராக நீதிமன்றங்களைத் தூண்டி கொள்கை முடிவுகளை எடுப்பது கோழைத்தனமும் அநீதியும் நிறைந்த வழிமுறைகள்.இந்தியாவில் நீதிமன்றங்கள் அரசின் மறைமுகமான அங்கமாக மாறிவருகின்றன.பல நீதிபதிகளின் நிலை என்பதே ஏட்டு முற்றி போலீஸ் என்பதுதான் இங்கே.அவர்களில் பலர் அவ்வப்போது உதிர்க்கும் பொன்மொழிகள் அவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்களா என்பதை கேள்வி கேட்கும்படி மட்டுமல்ல பலசமயங்களில் நாணி வெட்கமடைய வைக்கின்றன. பல்லாயிரக்கணக்கில் குவிந்து கிடைக்கும் பொதுநல வழக்குகளில் இருந்து தேவைகளுக்கேற்ப ; கிளி துண்டு எடுப்பது போல அரசு சில வழக்குகளை பொறுக்கியெடுத்து நீதிபதிகளின் வாக்குமூலங்களில் ஏறியமர்ந்து கொள்வது இந்தியாவில் சமீப காலங்களில் அரசின் ஒரு வாடிக்கையாகி வருகிறது.அரசியல் விதிகளின் படி உருவாக்க இயலாதவற்றை இப்படி மறைமுகமாக நீதிமன்றம் மூலமாக நிறுவ முயலும் போக்கு ஆபத்து நிறைந்தது. கல்வி போன்ற விஷயங்களில் ஏற்றத்தாழ்வுகளை வாய்ப்பளிக்கும் விஷயங்களை ஊக்கப்படுத்துவது என்பது சமூகத்தை நேரடியாக ஊனப்படுத்தும் செயல் .
அடுத்த குளறுபடி நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் உள்ளே புகுந்து விளையாடுகிற ஊழல் .லட்சக்கணக்கில் நடைபெறுகிற ஊழல்.எந்தவிதமான மருத்துவ கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கேற்ப நீட்டில் மதிப்பெண் பெற்றுத் தருகிறோம் என்று கூறி சந்தையில் ஏராளமான புரோக்கர்கள் வந்து விலை பேசிக் கொண்டு நிற்கிறார்கள்.முப்பது லட்சம் தொடங்கி ஒரு கோடி வரையில் விற்பனை பேரத்தில் இழுப்படுகிறது .உங்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் விருப்பமெனில் அதற்கு ஏற்ப .அரசு கல்லூரிகள் எனில் அதற்கு ஏற்ப விலைகளில் நீட்டின் தகுதியை விற்பனையில் சாத்தியமாக்கியிருக்கும் புரோக்கர்கள் கடந்த ஆண்டில் அந்ததந்த பகுதிகளில் விற்ற புள்ளிவிபரங்களையும் கைகளில் வைத்திருக்கிறார்கள்.தகுதியின் விலையை புரோக்கர்கள் கைவசமாக்கியிருப்பதுதான் உங்களின் தகுதிச் சாதனையா ?
இதுவரையில் படித்து மதிப்பெண் பெற்றுவிடுகிற மாணவர்களுக்கு மருத்துவத்தில் விலையற்ற படிப்பு பற்றிய ஒரு சிறிய உத்திரவாதம் நம் கண்முன்னர் இருந்தது.அது நீட் மூலமாக நம் கண்முன்னரே காணாமல் போய் கொண்டிருக்கிறது.நீட்டுக்கான பயிற்சி வகுப்பு நடத்துபவர்களின் கொள்ளை ஒருபுறம் எனில் புரோக்கர்களின் பண வேட்டை இன்னொரு புறம் என ஏழை மாணவர்களை இந்த அமைப்பு துப்புரவாக இல்லாமலாழிக்கப் பார்க்கிறது.ஏழை மாணவர்களை இல்லாமல் ஆக்குவதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம்.கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்போரின் குழந்தைகள் ,ஏழைக்குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படும் மருத்துவப்படிப்பிற்கான இடங்களில் புரோக்கர்கள் வழியே சென்றடைந்து உட்கார்ந்து கொள்வதற்கான சதுரங்க விளையாட்டு இந்த நீட் நுழைவுத் தேர்வு .
ஏற்கனவே பணம் வைத்திருப்போரின் குழந்தைகளுக்கு நிறைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நீட் மூலமாக ஏழை மாணவர்களின் அனைத்து இடங்களையும் இந்த தேர்வு வசதி படைத்தவர்களுக்கு திறந்து கொடுக்கிறது.இது மிகப் பெரிய கொடூரம்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் எந்த முறை பின்பற்ற படவுள்ளது என்கிற குழப்பம் இதுவரையில் நீங்கவில்லை.இரண்டுக்கும் இடைப்பட்ட படிக்கும் மனநிலையே வேறுபட்டது.அவர்கள் புதிய நிலைக்கு மாறவேண்டுமாயின் அவர்களுக்கு ஆரம்பம் முதற்கொண்டே பயிற்சி அவசியம்.இப்படியான இரட்டை நிலைப்பாடு என்பது அவர்களை பைத்தியக்காரத்தனத்திற்கு இட்டுச் செல்கிற வழி.
தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கோ தங்கள் வயிற்றுக்கு சோறு வந்து கிடைக்கிறதா என்பதுதான் பிரதான அக்கறையெல்லாம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"