காந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல் ...


காந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல்  ...

காந்தியைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்மிடம் நாம் கொண்டுள்ள கற்பனைகள் ,மிகையுணர்ச்சிகள் ,விருப்பங்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றில் கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கான ஒரு வழிமுறை .அது உண்மையை நேர்கொண்டு முன்னடக்க உதவும்.காந்தியை புரிந்து கொள்ளுந்தொறும் அதில் புரிந்து கொள்பவர்களுக்குத் தான் லாபமேயொழிய வேறொன்றும் இல்லை.உண்மைக்கும் நமது விருப்பங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு என்ன என்பது காந்தியை புரிந்து கொள்ளும் காரியம் விளக்கித் தரும்.பொய்யிலிருந்து விடுவிக்கும்.

உண்மையைப் பற்றி "அவ்வாறே பேசுதல்" என்றே பலரும் அர்த்தம் கொண்டுள்ளோம்.அதுவல்ல.திருவள்ளுவர் உண்மை பற்றி பேசும் போது நீ மறைப்பதும் கூட உண்மைத்தன்மை பெற முடியும் என்று கூறுவதை புரிந்து கொள்ள முடியுமேயானால் , காந்தி உண்மையென்று எதனைக் குறிப்பிடுகிறார் என்பதும் விளங்கும்.உண்மையென்பது ஆழமான அர்த்தம். பல சமயங்களும் உண்மை பற்றி விவாதித்திருக்கின்றன.அதனை ஸ்தூல உருவாக எட்டியவர் காந்தி.முயன்றால் நம்மிலும் நடைமுறையில் எட்டச் செய்து விடுபவரும் காந்திதான்.

பொய் பேசுதல் என்பது பெரும்பாலும் நாம் பேசிக் கொண்டிருக்கும் அனைத்துமே பொய் தான்.ஒவ்வொரு விஷயங்கள் சார்ந்தும் பொதுவாக நமது விருப்பங்களை முன்வைக்கும் பழக்கம் நம்மிலிருந்து விடுபடாதவரையில் பொய் அகலாது.நாம் ஒவ்வொருவருமே விருப்பங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்.அன்றாட செய்திகளில் தொடக்கி ,காமம்,காதல் எல்லாவிதமான விஷயங்களிலும் நமது விருப்பங்களையே பேசிக் கொண்டிருக்கிறோம்.உண்மைக்கும் நமது விருப்பங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி உண்டு.விருப்பங்களால் நம் அவற்றை நிரப்புவோம்.விருப்பங்களால் ஒன்றை நிரப்புவதற்குப் பெயர்தான் பொய் என்பது.விருப்பங்களும் உண்மையும் வேறு வேறு என்பதை நம்மால் கண்டுணரும் சக்தி  கிடைக்குமேயானால் உண்மை மட்டும் நம்மிடம் துலக்கம் அடைவது மட்டுமல்ல,தரிசனங்களும் சேர்ந்து துலங்கும்.தரிசனம் என்பது உண்மையை நெருங்கும் இயக்கம்.விருப்பங்களை பேசுவதற்கு ,பொய் பேசுவதற்கு விடை கொடுத்தால் தரிசனம் வாய்க்கும்.தரிசனம் மற்றபடி நெருங்கவே இயலாத மாயவித்தையெல்லாம் ஒன்றுமில்லை.

ஒருசமயம் எனது நண்பன் ஒருவன் அவனுடைய காதலி நிராகரித்து விட்டுச் சென்றதும் என்னிடம் வந்த பிளாக் மேஜிக் பேரில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா ? என்று கேட்டான்.அவன் அவளுக்கு யாரோ அந்த மேஜிக்கை அவளிடம் செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நம்பினான்.அப்படி மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினான்.   அவனுடைய காதலி நிராகரித்து சென்றதை அவனுடைய மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்பதுதான் விஷயம்.அந்த நிராகரிப்பின் மீது ஏதேனும் போர்வையைப் போர்த்த முடியுமா ? என்று அவனுடைய மனம் சிந்திக்கிறது.உண்மையை தவிர எதனைச் சொன்னாலும் நம்புவதற்கு அது காத்திருக்கிறது.உண்மையை மட்டும் என்னிடம் திறந்து விடாதீர்கள் என்று பிறரிடம் கெஞ்சுகிறது.இதுதான் பொய் காட்டும் ஜாலம்.ஒருவேளை இவன் அவளை முன் கூட்டியே நிராகரித்திருந்தால் இவனுக்கு ஒரு பிரச்சனையுமே ஏற்பட்டிருக்காது.நிராகரிப்பை அவன் மனம் ஏற்கவில்லை.இதுதான் பொய் என்பது.மற்றபடி ஒன்றை அப்படியே சொன்னால் அதன் பேர் உண்மையும் அல்ல.ஒன்றை மாற்றிச் சொன்னால் அதன் பேர் பொய்யுமல்ல.நாம் கொள்ளுகிற விருப்பங்களில் இருந்து மனத்தைத் துண்டிக்க வேண்டும்.அதில் எஞ்சுவதே உண்மை.

நாம் எல்லோருமே இறந்து விடுவோம் என்பது நமக்கு எல்லோருக்குமே நன்கு தெரியும்.எது நமக்கு நடக்கவே நடக்காது என்று கருதுகிறோமோ அது நடந்தே தீரும் முந்திக்கூட்டி நடக்கும்.வியாதியிலிருந்து,விபத்து வரையில் .உறவு முறிவதிலிருந்து ,பிரிவு வரையில்.எது நடக்கவே நடக்காது நமக்கு என்று கருதுகிறோமோ அந்த விஷயத்தின் பேரில் நமக்கு உரிமையும் உடைமையும் கடுமையாக இருக்கும்.இதுவே போதும் அலட்சியம் வந்து கண்களை மறைக்க ,எல்லாமே வந்து சேர .உறவு என்பது பரஸ்பரம் ஈர்ப்பு கெடாமல் வைத்திருக்கும் ஒரு செயல்.ஈர்ப்பு கெட்டால் நாசம்தான் ,ஈர்ப்பு கெட்ட பின் உறவு தொடர காரணங்களேனும் வலுவாக வேண்டும்.இல்லையெனில் உடைந்து தூளாகும்.ஈர்ப்பு கெடாமல் வைத்திருப்பது என்பது ஒரு தீவிர நிலை.நாம் உடையவே மாட்டோம் என்று கருதுபவர்கள் உடைந்து நொறுங்குவது உடைமையின் மமதையால்தான்.மகன்தானே,மகள்தானே கேட்க  மாட்டார்களா ? என்று நினைப்போம்.கேட்கமாட்டார்கள் என்பதே உண்மை .ஈர்ப்பு கெட்டால் கேட்க மாட்டார்கள்.    

எனக்கு மனதிற்கு விருப்பமான பெண்களைக் காட்டிலும் அதிகமாக காந்தியைப் பிடிக்கும் என்பதை அறிந்த நண்பர்கள் என்னிடம் "காந்தியிடம் எனக்கு முரண்பாடு உண்டு " என்று பேசத் தொடங்குவார்கள்.

"நல்லது.அப்படியானால் நீங்கள் காந்தியை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா ? "என்று திருப்பிக் கேட்பேன் .புரிந்து கொண்ட பின்னர்தானே முரண்பாடு எழவேண்டும் ?

அவர்களில் பெரும்பாலோரிடத்தில் இந்த கேள்விக்கு பதில் இருப்பதில்லை.பொருளும் இருப்பதில்லை.இந்த கேள்வி என்ன சொல்கிறது என்று புரிவதும் இல்லை.இதுதான் காந்தியின் பேரில் இங்கே கட்டப்பட்டுள்ள ஆகப்பெரிய முரண்பாடு.

காந்தியிடம் கற்பது சுவாரஸ்யமான விஷயம்.நானும் பல அறிஞர்கள் மூலமாக தாமதமாக அறிந்து கொண்டதுதான் இது.இப்போது காந்தியிடம் எனக்கு ஏற்பட்டிருப்பது understanding  .புரிதல்.அது காந்தியைப் பற்றிய புரிதல் மட்டுமல்ல என்னைப்பற்றிய புரிதல்.என்னைப்பற்றிய understanding  அது. 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்