மக்கள் மீது தொடுக்கப்படும் அரசின் யுத்தம்

மக்கள் மீது தொடுக்கப்படும் அரசின் யுத்தம்

தன்னெழுச்சி கொண்ட மக்கள் போராட்டங்களின் உளவியல் எளிமையானது அல்ல.தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் நடைபெறவில்லை என்கிற அதிருப்தியின் தரப்புகள் மூடியிருப்பவை.எந்த ஒரு தரப்பையும் நிறைவு செய்வது இத்தகைய போராட்டங்களின் பணி அல்ல.தன்னோடு இணைகிற அத்தனை தரப்புகளையும் தன்னில் கரைக்கவே இத்தகைய போராட்டங்கள் முயற்சிக்கும்.தன்னில் இணைகிற தரப்புகளை கண்காணிப்பதோ   ,பரிசோதனை செய்வதோ இயலாத காரியங்கள் .

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பொறுத்தவரையில் மேட்டிமையின் குரல்கள் பொது உளவியலின் மீது நடத்திய தாக்குதலில் இருந்து அது கிளர்ந்தது.கிளர்ந்ததன் ஒரு காரணம் மட்டுமே தான் இத்தகைய போராட்டங்களுக்கு மூலமாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை.எளிமையில் வைத்து இதனை யூகிப்போர் சொல்லும்  அதிருப்திகளும் ; அரசு முடிவில் செய்வதை ஒப்ப ; தீய சக்திகள் போராட்டத்தில் உள் புகுந்து விட்டன  என்பதை  ஒப்ப ஒரு சார்பானவை.

அதே சமயம் இத்தகைய  போராட்டங்களை விளங்கி  ஒரேயொரு கண்ணோட்டம் மட்டும்தான் இருந்தாக வேண்டும்  என எவரையும் நிர்பந்திக்க இயலாது .ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில் அதன் மீது செலுத்தப்பட்ட தலித் கண்ணோட்டம் மிகவும் முக்கியமானது.இந்த பிரச்சனையில் நியாயம்  பேசும் கண்மூடித்தனமாக   தரப்புகளுக்கு அகநெருக்கடியை ஏற்படுத்திய , புறந்தள்ள முடியாத ஒரேயொரு கண்ணோட்டம் இது மட்டுமே.தன்னெழுச்சிப் போராட்டங்களில் உருவாகும் கண்ணோட்டங்களுக்கு இதன் தன்மை எளிமையானது இல்லை என்கிற விழிப்பு இருக்கிறதா ? என்பது முக்கியமானது.அரசியல் சக்திகள் இத்தகைய போராட்டங்களை தங்கள் கையகப்படுத்த நினைப்பதும் இதன் ஒரு பகுதியே.சிலசயங்களில் இத்தகைய தன்னெழுச்சி மிக்க போராட்டங்களில் இருந்து புதிய தலைமைகளும் தலைவர்களும் உருவாவதும் உண்டு.

அரசியல் போராட்டங்களை அரசு எதிர்கொள்கிற விதத்திற்கும் ,இத்தகைய போராட்டங்களை அரசு எதிர்கொள்கிற விதத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன.தன்னெழுச்சியான இத்தகைய போராட்டங்களை அரசு அஞ்சுகிறது.இதன் உளவியல் தாக்கத்தின் மீது அது போர் தொடுக்க விரும்புகிறது.கடந்த இருபது ஆண்டு கால இந்தியாவில் அரசு அடைந்திருக்கும் இறுக்கத்தையும் ,ஜனநாயக விரோத தன்மையையும் அரசு மக்கள் மீது தொடுக்கிற போர்களில் இருந்து அறியலாம்.இந்த குரூரமான போரை இந்திய அரசுகள் அரசியல் கட்சிகள் பங்கெடுக்கும் போராட்டங்களில் அதிகம் பலவந்தம் செய்வதில்லை.மக்கள் மீது போர் தொடுக்கும் அரசின் இந்த முறைமை மிகவும் அபாயகரமானது.ஒரு ஜனநாயக நாட்டில் இப்போக்கு நீண்டு கொண்டே  செய்வது நல்லதல்ல.இந்த முறைமை முற்றுப் பெறவேண்டிய ஒன்று.

இதற்கு அரசு எந்தவிதத்திலும் ,எந்த விஷயத்திலும்,எந்த பிரச்சனையிலும்  தனது தரப்பில் பின்வாங்க விரும்பவில்லை என்பதே  காரணம்.

மக்களின் முன்பாக அரசு பின்வாங்க வேண்டும் .மக்களிடம் பின்வாங்குதல் நல்ல அரசின் குணம்.மாறாக மக்களின் மீது அவதூறு செய்வதும் போர் தொடுப்பதும் ஆகாத காரியங்கள் .மெல்ல மெல்ல அழிந்தே ஆக வேண்டிய அரசின் செயல்பாடுகள் இவை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"