எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை.

                    எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை.


உள்ளடக்கமும் , கதை சொல்லுதலும் வேறு வேறு காரியங்கள்.கதையடைகிற உருமாற்றமே உள்ளடக்கம்.
எழுத்தாளனைக் கதை சொல்லியென இங்கே பலரும் கருதுகிறார்கள்.நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் உங்களிடம் கதை சொல்வது ,கதைக்கு அப்பால் உள்ள ஒரு உள்ளடக்கத்தைப் பற்றி உங்களோடு தொடர்பு கொள்வதற்குத்தானே அன்றி கதையை மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்வதற்காக அல்ல.இந்த உள்ளடக்கம் ஒரு எழுத்தாளனிலிருந்து மற்றொருவருக்கு மாறுபட்டது.சில சமயங்களில் முற்றிலும் மாறுபட்டது.எதிரெதிர் நிலைகளிலும் கூட உள்ளடக்கம் அமைய முடியும்.எழுத்தாளனை content writer என்று புரிந்து கொண்டால் அதிக சிக்கல் ஏற்படாது.கதை சொல்ல எல்லா கிழவிகளுக்கும் தெரியும்.ஊர் கிழவி சொல்லுகிற கதைகளும் ஒரு எழுத்தாளன் முயலுகிற உள்ளடக்கப் பாய்ச்சலும் வேறு வேறானவை.தமிழில் உருவான அதிமுக்கியமான எல்லா எழுத்தாளர்களும் content writer தானே அன்றி வெற்றுக் கதைசொல்லிகள் இல்லை. புதுமைப்பித்தன்,மௌனி ,சுந்தர ராமசாமி,எம்.வி .வெங்கட்ராம் ,வண்ணநிலவன் ,அழகிரிசாமி ,ஜானகி ராமன் யாரை வேண்டுமானாலும் நோக்கிப் பாருங்கள் இது உண்மையென்பது விளங்கும்.
உள்ளடக்கத்தின் தரிசனம் என்பது ஒருபோதும் எழுதுகிறவனின் தன்னிலையை சுவரொட்டியாக்குவதில்லை.தன்னிலையைக் கரைக்கும் இடத்திற்கு சிறந்த உள்ளடக்கம் இடமாற்றம் பெற்று விடும்.
எழுத்தாளர்கள் கதைகள்தான் சொல்வார்கள் ஆனால் கதை சொல்வதற்காக மட்டும் இல்லை.அல்லது கதையை மட்டும் சொல்வதற்காக இல்லை.ஊர் கிழவி கதை சொல்கிறாள் ,அவள் கதை சொல்வதற்காக மட்டும்தான் கதை சொல்கிறாள்.இதுதான் வேறுபாடு .
ப்ரன்ஸ் காப்காவின் " உருமாற்றம் " கதையையோ,பியோதர் டாஸ்டாவெஸ்கியின் " அருவருப்பான விவகாரம் " கதையையோ ,டால்ஸ்டாயின் " நடனத்திற்குப் பிறகு ... " கதையையோ,டி.ஹெச் .லாரன்ஸின் "கிறிதாந்தாமப் பூக்கள் " கதையையோ இல்லையெனில் செகாவின் " ஆறாவது வார்டு" ," நாய்க்கார சீமாட்டி "கதைகளை யோசித்துப் பாருங்கள்.இல்லை இது போன்ற மேலான கதைகளை யோசித்துப் பாருங்கள் ,கதையின் சுவாரஸ்யத்திற்காக மட்டுமே அவை சொல்லப்பட்டிருக்கவில்லை.ஆழ்ந்த தரிசனங்கள் அக்கதைகளில் உண்டு.ஆழ்ந்த தரிசனங்களை எட்டுவது வரையில் அந்த கதைகள் வளர்ந்து கொண்டே செல்லும் .
டால்ஸ்டாயும் லாரன்சும் கதைகளில் தரிசனம் கைகூடுவது வரையில் நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருப்பார்கள்.அகப்பட்ட மறுகணத்தில் அவர்கள் தரிசனத்தை நம்மில் இறக்கி வைத்து விட்டு நீங்கிச் செல்வதை அவர்களுடைய படைப்புகளில் காண முடியும்
உள்ளடக்கமும் கதை சொல்லுதலும் வேறு வேறு என்பதை எப்போது ஒருவர் உணர்கிறாரோ அப்போதிலிருந்து அவருக்கு விமர்சனக் குரல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதனை தெளிவுற தெரிந்து கொள்ள முடியும்.உள்ளடக்கமற்ற வெற்றுக்கதைகளை மனவெளியிலிருந்து அவை அப்புறப்படுத்துகின்றன.உள்ளடக்கமற்ற கதைகள் உள்ளடக்கத்தை ஏங்குபவை.உள்ளடக்கமற்ற பல கதைகளில் எழுதுகிறவன் ஏறியமர்ந்ததும் அவை எழுந்து நடமாடத் தொடங்குவது இதனால்தான்.உறங்கும் கதைகளும் கலைஞன் கைப்பட்டவுடன் உயிர்கொண்டு நெளியும்.கதைகளுக்கு ஆழ்ந்த உள்ளடக்கங்களைத் தருவதும் ,ஏற்றுவதும் எழுகிறவனின் வேலை .உள்ளடக்கமற்ற கதைகளை உறங்கும் கதைகள் என்றும் சொல்லலாம்.
கவபட்டா, எட்கர் கிரட் போன்றோர் கதைகளே சொல்லாமல் அல்லது கதைகளில் அதிக நோக்கமில்லாமல் நேரடியாக உள்ளடக்கத்திற்குள் பாய்ந்து விட முயல்வதை கவனிக்கிறீர்களா? கதை சொல்வான் எழுத்தாளன் ஆனால் ஒருபோதும் கதை சொல்வதற்காக மட்டுமே அவன் கதை சொல்வதில்லை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"