"ஓம் சக்தி ஓம் பராசக்தி "- வேலாயுதம் பொன்னுசாமி

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூல் பற்றிய
வேலாயுதம் பொன்னுசாமி எழுதியிருக்கும் பீம ராஜா விருதிற்கான  குறிப்பு :


ஓம் சக்தி ஓம் பராசக்தி - லக்ஷ்மி மணிவண்ணன்
அங்கதத்தின் துடிகொண்டாடும் எழுத்து

தமிழ் இலக்கியப்பரப்பில்  கவிஞராக கால் பதித்த லக்ஷ்மி மணிவண்ணன் சிறுகதை ,கவிதை,நாவல் ஆசிரியர் ,விமர்சகர் , உரைநடை எழுத்து , "சிலேட் " இதழ்  ஆசிரியர் ,எழுத்தாளர்கள் தங்கி எழுத்துப் பணியை மேற்கொள்ள "நிழற்தாங்கல்" அமைப்பு என பல தளங்களின் செயல்பாட்டாளர் .

இலக்கியத்தை யந்திரத்தனமான பிரதிபலிப்பாக பார்க்காது ,பண்பாட்டு விளைச்சலாகப் பார்க்கக் கூடியவராகவும் ,பண்பாட்டு உருவாக்கத்துக்கு காரணமான தெய்வம் ,பொருளாதாரம்,அரசியல்,உளவியல் போன்ற கருப்பொருட்களுடன் கருத்துநிலை கூறுகளின் வலிமையையும் நன்குணர்ந்தவராக எழுத்தின் மூலம் அறிய முடிகிறது.

தன கருத்து நிலையில் இருந்து சமூகத்தை ,இலக்கியத்தை பார்ப்பது ,விமர்சிப்பது ,படைப்பது என்ற இவரின் பதிவுகளில் தற்போதைய உரைநடை எழுத்தாக வந்துள்ளது."ஓம் சக்தி ஓம் பராசக்தி " இப்புத்தகத்தின் தடமறியும் பிரயத்தனத்தில் உள்நுழையும் போது பரிதவித்து அலையும் இரத்தக் காட்டேரி ,சிற்றெறும்பின் ஊர் தடம் ,கருநாகத்தின் நெகிழ் வளைப்பாதை ,சிறுநதியின் சலனம் படிந்த வழி தடங்களின் அழகியலையும் தமிழ்ச் சூழலில் உறைந்திருக்கும் பண்பாட்டு பனிப்பாறைகளை உடைத்தெறியும் மூர்க்கத்தையும் பார்க்க முடிகிறது.

பொது கருத்துக்களை  கவிதையின் பாடுபொருளாக்கும் கவிஞர்களையும் ,பிரக்ஞய் அற்று வாசிப்பவர்களை சாடும் லக்ஷ்மி மணிவண்ணன் ., பெண்தான் இச்சமூகத்தின் ஆதார கனவாகவும் , அக உந்துதலாகவும் இருக்கிறாள் என்ற அவதானிப்பை முன்வைப்பது ,அக்கா மாதேவி ஆன்மாவை முன்வைத்த ஆன்மீக நோக்கின் ,நவீன பார்வையின் நீட்சியாக பார்க்க முடிகிறது.

முரண்பாடுகளுக்கு இடையிலான இணைவுகளை கண்டடைவதையும் ,வாசிப்பின் அறிதலைக் கடந்து வாசிப்பின் உணர்தலை முன் வைக்கிறார்.சொல்ல வரும் கருத்தைப் படிமமாக்கி பின் அதைச் சுற்றி புனைவைக் கட்டும் எழுத்தில் துடி கொண்டாடுகிறது அங்கதம் .

"அறிய அறிய போதாமையில் உழல வேண்டுமென்பது நவீன மனிதனின் செயற்கை அழிவின் விதி "  தாய்மை கனிய மடு உருக கன்றுகள் இன்று அவசியமில்லை " , "சாதாரண மக்கள் என்று சொல்லப்படும் மனிதர்களின் பல நூற்றாண்டு அனுபவங்கள் நவீன விஞ்ஞானத்தின் முன்பாக அர்த்தமிழந்து போனது போலவே மனிதர்களும் அவசியமற்றவர்களாகிறார்கள்" இப்படியாக தொடருகிறது பல பதிவுகள்..பிரக்ஞயற்று வலிந்து இடதுசாரிகளை விமர்சிக்கும் பதிவுகளும் தொடர்கிறது.எந்த அர்த்தத்தில் சொற்களை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தாமல் பிரதியை கடந்து செல்வது ஆபத்தாக முடியும் .

நேர்மறையைச் சொல்ல எதிர்மறை வார்த்தைகளையும் ,எதிர்மறையைச் சொல்ல நேர்மறை வார்த்தைகளையும் பயன்படுத்தும் ,கலைத்துப் போடும் யுக்தியையும் உரைநடையை புனைவெழுத்தாக எழுதி பார்க்கும் வக்ரோக்தியையும் தமிழில் தொடர்ந்து பதிவாக்கும் எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன் என்று உறுதிபட சொல்ல முடியும்.சிந்தனையை ,மொழியை தன்னிச்சையாக இயங்க விட்டு திசைவழி எண்திசையும் திரிந்தலையும் ஊழி போன்றது லக்ஷ்மி மணிவண்ணனின் எழுத்து.

தான் கடந்ததும் கடக்க முடியாததுமான வாழ்வியல் நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை ஆன்மீக தளத்தில் நின்று நோக்கி ; எழுதாமல் இருக்க முடியாது என்ற மனோ நிர்பந்தத்தில் எழுதி தீர்ப்பது, எழுதிக் கடப்பது , என்ற பித்தத்தின் நிறமும் ,வாசனையும் எழுத்தாகி ஆன்மீக சமத்துவத்திற்கான குரலாக உருக் கொண்டதிந்த பிரதி.  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"