மார்கழித் தொகுப்பு ஏழு கவிதைகள்

மார்கழித் தொகுப்பு ஏழு கவிதைகள்

1

அந்தச் சிறுவன்
நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில்
கடந்து கனரக லாரியில்
இங்கு வந்து கொட்டப்பட்டவன்
துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது.

கொண்டைவாழையிலையை உங்கள் முன்னால் போட்டு
நீர் தெளிகிறான்
பாம்பு கொத்தியது போலே துடித்து
"தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?"
எனக் கேட்டு அவன்
அம்மையைத் திட்டுகிறீர்கள்

சாம்பாருக்கு நேரமாகிவிட்டதென
அவன் அப்பனைக் கேள்விகேட்கிறீர்கள்
சாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள்
அத்தனைபேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள்

நீங்கள் உண்ட சோறு
அவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு
நன்றி கூற
உங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது
துரத்தப்பட்ட அவனது இரவு.

2

மழைமுடிந்த நகரம் சொட்டுகள் வடிய
தனது இரவைத் தொடங்குகிறது
புத்தொளிர்வை அது இருள் வானத்தின் உச்சியிலே
கொண்டு எட்டுகிறது.

வாடகைப் பாடசாலையிலிருந்து குழந்தையை
அழைத்து வரும் தகப்பன் காய்ச்சல் மீண்டு எழுந்தவனின்
மனத்தால் வாகனத்தை ஒட்டிச் செல்கிறான்
பள்ளங்களை வேகத்தால் நிரப்பித் தடுமாறும் வாகனத்தில்
அச்சத்தின் தோற்றம்

மழையை தன்னுடன் எடுத்த வண்ணம்
பேருந்தேறும்தாதி
பேருந்துப் பாடலுக்கு புதுவண்ணம் பூசுகிறாள்

புரோட்டாக்கடை எண்ணெய் எரிந்து பேருந்தை வழிமறித்து
உள் ஏறி பின் இருக்கை வழியே  இறங்குகிறது.

குதூகலம் அடங்கிய சுற்றுலாப் பயணியொருவன்
மழையை உடையில் கசக்கிப் பிழிகிறான்.

வேற்றூருக்குக் கிளம்புகிற ரயில் ஊளையிட்டு
தன்னையொரு கனவுலகவாசி என்றறிவிக்கிறது.

மழை தான் சம்பவித்ததற்கு
நன்றிகூறிச் சிரிக்கிறது
ஒரு தாவரம் தன்னை எடுத்துக் கொண்டத்தைப் போன்று எடுத்து
உடைக்குள்ளிருந்து முகம்காட்டும்
பச்சைப்பால் குழந்தையிடம்

3  

உடலொரு கண்ணாடியாகத் தோன்றும்
புலர் காலை
நலிவுற்றால் நலிவடையும் புறத்தோற்றம்
கிளர்ந்தால் கிளர்ச்சியடையும் தாவர விஷேசம்

காமமுறும்போது முட்டி நெரித்து வெளிக்கீறி எழுகின்றன
கடலோசை தரும் பூவரசம் பூக்கள்.

எங்கே அடங்கியிருந்தனவோ
ரத்தத்தில் இந்த பாரஸ்ட் பிளேம் சிவப்பு

கொதிப்படங்க மூடும்
இந்தத்திரை அத்தனையும்

வானத்தில் நீந்துகிற கிருஷ்ண பருந்து தான்
அடிக்கடலில் நீஞ்சும்
திமிங்கலம்

4

விளக்கென்ன செய்யும்
எரியும்
ஒளி பார்வைக்குள்ளிருந்தால்தான் தெரியும்

இல்லாதபோதும் இருக்குமிந்த ஒளி
இல்லாதபோதும் எரிந்து கொண்டிருப்பதை இருப்பில்
காணவேண்டும் கண்கள்

கண்கள் உனதுமில்லை எனதுமில்லை
சரளைக்கல் போலுருண்டு
அடுத்தடுத்த ஒளியில் நிலைக்கும் சிறுதுளிப் பிரயாசை

நீ செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை
சரளைக் கற்களை காட்சியில்
ஓங்கியெறி
தீபஜோதி விளங்க
பனிப்புகை மூட்டம் அடங்க
பின் காட்சியை எடுத்து
கண்களில்
வை

காட்சி
எப்போதும் இருப்பிற்கும் இன்மைக்கும் இடையில்
நின்று எரிந்து கொண்டிருந்தால்
அதன் பேரை சுடரென்றும் சொல்லலாம்
மலரென்றும் கொள்ளலாம்

ஓம் நமச்சிவாயா

5

நீ என்னைப் பார்த்து விட்டாயா
எனக் கேட்ட கடலிடம்
நீங்கள் என்னைக் கண்டு கொண்டீர்களே
அந்த கணத்தில் மட்டும் என்று பதில் கூறினேன்.

நீயென்னை உணர்ந்தாயா எனக் கேட்ட தாவரங்களிடம்
நீங்கள் இப்படி உணர்ந்தீர்களே
அப்போது மட்டும் என்று பதில் சொன்னேன்.

உடல் திறக்கச் செல்லும் விரைவுப் பயணத்தில்
கீ கீயென்றுரைக்கும் மைனா
என்னுடலுக்குள்ளிருந்து வெளியில் பறந்து முன் செல்கிறது
மலைத் தொடர்களில் பனிப்புகை கடக்க
எனது தேவதை விஸ்வரூபம் கொள்கிறாள்

என் உடலே கேளே
நீயென்னை உணர்ந்தாயா என்று !
கடலும் மாமலையும் ,மரமும் சாட்சி
நீ திறந்து மொட்டவிழ்த்த இடத்தில்தானே
சாட்சிக்குருவிகள் கடந்து செல்கின்றன.

நான் என்ன சொல்கிறேன் புரிகிறதா ?
நான் என்னை மட்டுமே சொல்கிறேன்.

6

பெருஞ்சாலையின் கோபுர தரிசனம்.

ஒரு பெரிய சாலையின்
கிளை முறுக்கில் திரும்பி ,குளக்கரை கடந்து
அம்மன் கோவில் முற்றத்தில் இருந்தது
உங்கள் பழைய வீடு.
கோபுர வாசல்
அருகில் அவர் வீடு

மற்றொருவர் மணல் தேரி மேட்டில்
சாலையின் மற்றொரு தொடுப்பில்
மாடுகள் நிறைந்த வீட்டில் இருந்தார்.

கடலுள் சாடிய பெரிய சாலை மலைப்பாதைக்கும்
செல்கிறது
கடற்கரை குருசு
வழியனுப்பி வைக்க
பனிமய மாதா
ஆண்டாளாகக் காட்சியளிக்கிறாள்
படர் பனி அகம் சூடி

குளக்கரையில் வளைந்து செல்லும் சாலைகளும்
பெரிய சாலைக்குத் தொடுப்பில் உள்ளன.
வளைந்து செல்லும் சாலைகள் காட்டிய நளினம்
இன்னும் மறைந்து விடவில்லை.
பெரியசாலைகளின் தெப்பத்தில் மரக் கிளைக்கனிபோல
தொங்கும் கிராமங்களும்
வயது பூர்த்தியான புலர் சூரியகுமாரனும்
நண்பர்கள்

பெரிய சாலையில் திமிரும் மார்கழிப் பனி
கிளைச் சாலைகளில் நீண்டு புகைநீட்டி தன் விந்து சிந்துகிறது இப்பொழுதில்
பெருஞ்சாலையின் கோபுர தரிசனம்.

அப்போதைய மார்கழி
கிளைச் சாலைகள் பொங்கி வந்திணைந்த
பெரியசாலைகளை
தாமரைத் தடாக விழிகளில் வைத்திருந்தாள் ...

இப்போது யாருமே தொடர்புக்கு அப்பாலில்லை
நெடுஞ்சாலையை நிறைத்து
நனைகின்றன
முற்றத்துக் கோலங்களெல்லாம்

இட்ட கோலங்கள் அத்தனையையும் எடுத்துச் சுருட்டி
கொண்டோடுகிற நெடுஞ்சாலையோரத்தில்
இல்லாத பெட்டிக்கடையில்
இருந்து அமுது புசிப்பவள்
என் தேவதை

மேம்பாலம் வழியாக அவள் தலைமீது
சற்றே திகைத்து
பின் மீண்டும் ஏறியமர்ந்திருந்து இணைக்கிறதிந்த
நெடுஞ்சாலை
எனது தேவதை கல்கொண்டெறிந்து விடக்கூடுமோ
எனப் பயந்து

7

இல்லாதபோதும் இருப்பது

மரணத்திற்குப் பிந்தைய சூரியன்
அஸ்தமனமாகிக் கொண்டிருந்தான்
சாலையில் வேகம் கடந்த பேருந்தின் ஜன்னலோரத்திலிருந்து
அதனை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அமைதியாக மிகவும் அமைதியாக மலைகளின்
தோளிலிருந்து
மனம் விட்டு
இறங்கிக் கொண்டிருந்தான் அவன் .

மரணத்திற்கு முந்தைய சூரிய அஸ்தமனம் எவ்வாறிருந்ததோ
அவ்வாறு
ஒரு துளி மாற்றமும் இல்லை
அஸ்தமனம் கடந்து மலைகள் முழுவதுமாக செவ்வொளியை
விழுங்கி முடிகின்றன.

மரணத்திற்கு முந்தைய சூரியனுக்கும்
பிந்தைய சூரியனுக்கும்
இடையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
பேருந்தின் ஹாரன் ஒலி எனக்கு சொல்லிக் கொடுத்த
போதம் இதுதான் நண்பா ...

இருப்பிற்கு
இருவேறு சூரிய அஸ்தமனங்கள்
உண்டு
ஒன்று பார்த்துக் கொண்டிருப்பது
மற்றொன்று இல்லாதபோதும் இருப்பது.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"