நீங்கள் இப்போது இடதுசாரியா ? வலதுசாரியா ? பாவமே !

நீங்கள் இப்போது இடதுசாரியா ? வலது சாரியா ? பாவமே !



கேரளா கம்யூனிஸ்ட் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுதான் நம்பூதிரிகளிடமிருந்த பாட்ட நிலங்கள் அத்தனையையும் பிடுங்கி மக்களுக்கு வழங்கினார்.நம்பூதிரிகளிடம் தலைமுறை தலைமுறையாக இருந்த பாட்டநிலங்களை போஷிக்கவும் பாதுகாக்கவும் அதன் உருப்படிகளை அள்ளிவந்து அவர்களிடம் ஒப்படைக்கவும் பாட்டக்காரர்களும் தலைமுறை தலைமுறையாக இருந்தார்கள்.உருப்படிகள் வந்து கொண்டிருக்கும் நிலம் எங்கிருக்கும் ? என்பது நம்பூதிரிகளுக்குத் தெரியாது.அப்படி வாழ்ந்திருக்கிறார்கள்.
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு கேரளா முதல்வர் ஆனதும் முதலில் கையொப்பமிட்ட அரசாணை இந்த நிலச் சீர்திருத்தம்தான்.ஒரேநாளில் பெரும்பாலான நம்பூதிரிகள் வீதிக்கு வந்து விட்டார்கள் .அவர்கள் இப்படியாகும் என்று யோசித்திருக்கவே இல்லை.வீடு மட்டுமே உண்டு.நம்பூதிரிகளின் வீடுகள் இருள் அப்பியது இவ்வாறுதான் .நள்ளிரவே தெருவாயிற்று அவர்களுக்கு. முறையாகத் தொழில் தெரியாது.பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்களில் சமையல் செய்யவேண்டும் என்பதால் சமையல் தெரிந்து வைத்திருந்தார்கள்.அதுதான் அது ஒன்றுதான் அவர்களைக் காப்பாற்றியது.ஒரு அரசாணையால் இந்தியா முழுமைக்கும் சிதறியோடிய ஒரு சமூகம் அது.மிகவும் மூர்க்கமாக பாதிப்பிற்குள்ளாகி இந்தியா முழுமையிலும் அவஸ்தை அனுபவித்த சமூகம் இது போல வேறு உண்டா என்பது சந்தேகமே ! அதிலிருந்து அவர்கள் நிறைய கற்றுக் கொள்ளவும் செய்தார்கள்.ஊரிலிருந்து தப்பிச் செல்கிற நம்பூதிரி எப்படியும் பிழைத்துக் கொள்வான்.வாழ்க்கை நிர்பந்தித்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் அது.
மும்பையில் ,சென்னையில் ,திருப்பதியில் என நீங்கள் போகுமிடமெல்லாம் ஒரு நம்பூதிரி டீ கடையையோ ,மெஸ்ஸையோ காண்பதற்கு வேறு காரணிகள் ஏதும் கிடையாது.நல்ல நிலையில் இருந்து திடீரென குலைந்து விழுந்த சமூகம் அது.ஒரு முன்னேற்பாடுகூட கிடையாது.பல புனித ஸ்தலங்கள் தங்களுக்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் இடங்களாக மாற்றமுற்றன.
எவ்வளவு ஒழுக்கங்களை ,பாரம்பரிய நியதிகளை வகுத்துக் கொண்ட சமூகமாக இருந்தாலும் சரி ,நெருக்கடி என்று ஒன்று வந்துவிட்டால் எல்லாமே நிலைகுலைந்து போகும் என்பதற்கும் இச்சமூகம் ஒரு சான்று. இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு ஒரு சர்வாதிகாரி போலத்தான் அக்காரியத்தில் நடந்து கொண்டார்.அவர் சர்வாதித்தனமும் கொண்டவர்தான்.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் காரணங்களை சொன்ன அரசியல்வாதிதானே ? ஆனால் கேரளா சமூகத்தில் மக்கள் விழிப்படைவதற்கு உதவி செய்த மிக முக்கியமான சீர்திருத்த சட்டம் அது.மக்கள் சமநிலை அடைவதில் அவருடைய அரசாணை மிகவும் உதவியிருக்கிறது.அப்படியான பார்வையையும் புறந்தள்ள முடியாது.
மோடியும் அது போன்ற ஒரு காரியத்தைத் தான் இப்போது செய்திருக்கிறார்.அவரை ஒரு டீக்கடை பையனாக சித்தரிக்கும் கம்யூனிஸ்டுகள் எந்த ஊரில் மார்க்சியம் கற்றார்கள் என்று தெரியவில்லை.அவசர காலகட்டத்தில் இந்திராகாந்தி சில நடப்படிகளை எடுத்திராவிட்டால் இந்தியா முழுமைக்கும் இன்றுவரையில் லாரி போக்குவரத்தை சரிசெய்திருக்க முடியாது என்பதே உண்மை.இந்தியா முழுமையும் நூற்றுக்கணக்கான சிலீப்பர் செல்கள் தூங்கி கொண்டிருந்த தருணம் அது.எல்லாவற்றைப் பற்றியும் பார்ப்பதற்கு பல விதமான கோணங்கள் உண்டு.இப்படித்தான் என்று இன்னொன்றை மறைக்க வேண்டியதில்லை.
இப்போது நீங்கள் ஒரு நிரந்தர வலதுசாரியா ? இடதுசாரியா ? என்கிற நிரந்தர சின் முத்திரைகள் எல்லாம் வேலைசெய்வதில்லை.அப்படியொரு பூரண அவஸ்தை இப்போது கிடையாது.ஆற்றும் காரியங்களை வைத்து மட்டுமே அரசியல் காரியங்களை சார்புப்படுத்திக் கொள்ளவேண்டும்.அளவிட வேண்டும். ஒருவர் ஆற்றுகின்ற காரியத்திற்கு நிரந்தர பின்னணியில் இருந்து வருகிற ஐயங்கள் பிறழ்வுத்தன்மை கொண்டவை.நிரந்தரமாக ஆதரவும் கொள்ள முடியாது , நிரந்தர எதிர்ப்பும் காட்டமுடியாது.அவை காலாவதியான தூக்க மாத்திரைகள்.அன்றாடத்தில் நடக்கிற விஷயங்களை நேரடியாக கொண்டு சார்பை ,வேறுபாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர நீண்ட ஆயுளுக்கு உடனிருந்து குடும்பம் நடத்த அரசியல் என்பது குடும்ப நீதிமன்றம் அல்ல.அப்படி நம்மிடம் புழங்குகிற அனைத்தும் ஐயமுற வேண்டியவை.
வலது இடது என்பதெல்லாம் வகையெல்லாம் இல்லை இப்போது.தினத்தந்தி செய்தியாளனுக்கு மட்டுமே இப்போது அது உபயோகப்படுகிறது. அவ்வகைமைகள் மிகவும் குழப்பமானவை.சாம்ஸ்கி இந்த வரையறைகள் போதுமானவை அல்ல என்கிறார்.பல இடதுசாரிகள் தூய வலதுசாரிகளாக இருப்பதும்.வலதுசாரிகள் என கருதப்படுபவர் ஆற்றும் காரியத்தில் இடதுசாரியாக தொனிப்பதும் காரியங்களை மட்டும் முன்வைத்தே கணிக்கப் படவேண்டும்.ஆற்றாத காரியங்களின் நிரந்தர பணியாளர் தேர்வு என்னும் மாயா அவசியமற்றது.
இவையெல்லாம் இருக்கட்டும் இடதுசாரிகள் என்றால் தூய ஆவிகள் என்று அர்த்தமெல்லாம் உண்டா என்ன ? ஒன்றும் கிடையாது.ஹிட்லரைக் காட்டிலும் அதிக கொலைகளை கோட்பாடுகளின் உதவியோடு விஞ்ஞான ரீதியாகச் செய்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் இப்போது ஒரு பாழடைந்த பங்களாவில் இருக்கிறார்கள் அவ்வளவுதான் விஷயம்.எல்லாருடைய கற்பையும் பரிசோதனைக்குட்படுத்துவதற்குரிய ஆய்வகத்தின் உடமஸ்தர்கள் இடதுசாரிகள் இல்லை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்