நிழல் உருவங்கள் - சிறுகதை

நிழல் உருவங்கள்

தபால் தலைகள் சேகரிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே செந்தில்குமாரை எனக்குத் தெரியும். இருபது வருடகால பழக்கம் எனக்கும் அவனுக்கும் உண்டு. அதிகமான முக்கியத்துவம் கொடுத்துத் தபால்தலைகளைச் சேகரிப்பான். கலாச்சாரப் புரட்சியை தபால்தலைகள் நடத்திவிடும் என்று அதை கவனிக்கிறவர்களுக்குத் தோன்றும். அவன் முனைப்போடு தபால்தலைகள் சேகரிப்பதில் எனக்கு எரிச்சல் உண்டு. இந்த தபால்தலைகளும் வேலாயுதம்பிள்ளை வாத்தியாரும், எனக்கும் அவனுக்குமான பொது எதிரிகளாக அந்தச் சமயங்களில் தோன்றினார்கள். வேலாயுதம்பிள்ளை வாத்தியாருக்கு எதனாலோ என்னையும் அவனையும் சேர்த்து பார்க்கவேப் பிடிக்காது. ‍அதிலும் என்மேல் அவருக்குக் கூடுதலான கோபம் உண்டு. வரலாறு புவியியல் பாடத்தில் கேள்விகள் கேட்டு வரிசையாக இருக்கையிலிருந்து எழுப்பி அடிக்கும்போது எனக்கு அவர் பிரம்பில் கொடுக்கிற அழுத்தம் அவனைவிடக் கூடுதலாயிருக்கும். அவர் பயன்படுத்துகிற பிரம்புகள் வடசேரி சந்தையில் வாங்கப்பட்டு, அவரது வீட்டில் மஞ்சள் பூசி அவித்து கொண்டுவரப்படுபவை. அவரது வகுப்பில் நானும் அவனும் ஒரே வரிசையில் நெருக்கமாய் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற அவரது வகுப்பில் நானும் அவனும் ஒரே வரிசையில் நெருக்கமாய் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற அவரது கட்டளை பிசுபிசுத்துப் போகும்படி நாங்கள் ஒரே வரிசையிலேயே உட்கார்ந்திருந்ததும், பிசுபிசுத்துப் போனதற்குக் கூடுதல் காரணம் நான் என்று அவர் நம்பியதும் என்னிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட வன்மத்திற்குக் காரணமாயிருக்கலாம். அப்படியொரு நம்பிக்கைக்கு எந்த வழியில் அவரால் வரமுடிந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பழுப்பேறிப்போன எனது சட்டையோ, என் முகத்தில் நிழலாய் படர்ந்து விரிந்து கொண்டிருந்த பயமோ, என் கண்களில் தெரிந்த ஒடுக்கமுறையின் இழையோ, இவையெல்லாமான கலவையோ, அவர் தெருவில் தினமும் பார்க்கிற ‍தெருநாயோ  அல்லது எல்லைகளை மீறிப் பாய்கிற அவரது வளர்ந்த மகன்களில் ஒருத்தனை நினைவூட்டும்படியாய் இருந்திருக்கலாம். இவற்றைத் தவிர்த்து அவர் காட்டிய வன்மத்திற்கான காரணம் என்னவாயிருக்கும் என்பதை எனக்கு யூகிக் முடியவில்லை.இதுபோலவே தபால்தலைகள் எனக்குக் கொடுத்த இடையூறுகளும்.எனக்கும் அவனுக்குமான உறவை பலமுறை அவை அறுத்துப் போட்டன. எனக்கும் அவனுக்கும் பொதுவான நேரங்களை சுருங்க வைத்தன. தபால்தலைகளை சேகரிக்க முடியாதவர்கள் எந்த பயனுமற்ற விறகுகட்டைகள் என்று அவனுக்குள்ளிருந்த எண்ணம் என்னைக் கீழ்த்தரமான பிராணியாக அவனுக்கு படம்பிடித்துக் கொண்டிருந்தது. அவனது சேகரிப்பில் 'அ'வரிசையில் மூன்றாவது இருநூறாம் பக்க நோட்டு காணாமல் போனபோது அவனுக்கு என்மீது சந்தேகம் ஏற்பட்டது. ஒருவாரம் வரைக்கும் முக்கியமான எதிரியிடம் நடந்து கொள்வதுபோல என்னிடம் நடந்து ‍கொண்டான்  . அவன் எதிரிகளை எவ்வளவு வன்மத்தோடு தாக்கக்கூடியவன் என்பதை அந்த சமயத்தில் எனக்கு உணரமுடிந்தது. வார முடிவில் இந்தப் புகைச்சல் விரிந்ததில் பள்ளிக்கூடம் விட்ட பிறகு நாங்கள், நாலரை மணிக்கு விளையாட்டு மைதானத்தில் சண்டை போட்டு, அதன்பிறகு ஒரு வாரத்தில் சமாதானப்பட்டுக் கொண்டோம். இதற்கு இடைப்பட்ட நாட்களில் அவன் தொலைத்த சேகரிப்பு நோட்டு கிடைத்திருந்தது என்பது முக்கியமான விஷயம்.

சேகரிப்பு சமயங்களில், அதை ஒட்டி ஒழுங்குப்படுத்துகிற சமயங்களில், அந்த நடவடிக்கைபற்றி யாருடனாவது பிரஸ்தாபப்பட்டுக் கொள்கிற சமயங்களில் அவன் என்னை சாமர்த்தியமாக தவிர்ப்பதாக உணர்ந்தேன்.நான், அவனோடுள்ள சந்தர்ப்பங்களை அவனது இந்தப் பணிக்கு இடையூறானதாகவ‍ே இருக்கும் என்று நம்பினான். அவனது காரியத்தைப் பிரஸ்தாபித்துக் கொள்கிற இடங்களில் நானிருப்பது அவனுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது. விழுந்துவிழுந்து சேகரிப்பது, ஒழுங்குபடுத்துவது, வகைப்படுத்தியவற்றைத் தடித்தடியான இருநூறாம் பக்க நோட்டுகளில் ஒட்டுவது இவற்றுக்கே அவனது நேரத்தில் அதிகத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் எனக்கும் அவனுக்கும் பொதுவான நேரம் சிறுத்துக்கொண்டிருந்தது. இதனால், அவனது இந்த பணிக்கு ஒத்துழைக்கப் பலமுறை என்னை தயார்படுத்த முயற்சித்தேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் என் கைக்குக் கிடைத்த தபால்தலைகளைப் பத்திரப்படுத்தி ஞாபகமாக அவனிடம் கொண்டு கொடுத்தபோது, அவற்றை அவன் மிகுந்த ஏளனத்துக்குட்படுத்தினான். அவனது சேகரிப்புகளோடு நான் கொடுத்தவற்றை ஒப்பிட்டால் இவை வெறும் அற்ப ஜென்மங்கள்தான் என்றாலும் அவனது ஏளனம் மனச்சோர்வை எனக்கு ஏற்படுத்தியது. அவனுக்கான எனது உழைப்பை‍யேனும் அவன் கவனத்தில் ‍எடுத்திருக்கலாம். ஆனால் என்னை தவிர்ப்பதிலேயே அவன் குறியாக இருந்தான். அந்த ஏளனத்துக்குப் பின்பும் நான் சேகரிப்பதில் இல்லாவிட்டாலும், ஒழுங்குப்படுத்துவது, வகைப்படுத்தி ஓட்டுவது போன்ற அவனது பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிற மனநிலையிலேயே இருந்தேன். அது எனக்கு அவனை முன்னிட்டு செய்ய இயலக் கூடிய காரியம்தான். ஆனால், இது சம்மந்தமாக எனது எந்த உதவியும் அவனுக்குத் தேவைப்படாதது மட்டுமல்ல, அசெளகரியத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்திருந்தது. வேலாயுதம்பிள்ளை வாத்தியாரால் எனக்கும் அவனுக்குமான நேரத்தில், சனி ஞாயிறு தவிர்த்த தினங்களில், கூடிப்போனால் நாற்பத்தைந்து நிமிடங்களை மட்டுமே தட்டிப்பிடுங்க முடியும், இந்த தபால்தலை சேகரிப்பு தினசரி எனக்கும் அவனுக்குமான நேரத்தில் சில மணிநேரங்களைத் தின்று கொண்டிருந்தது. அதில் அவனுக்கிருந்த அலாதியான மகிழ்ச்சியும், மகிழ்ச்சிக்கு நேர் எதிர்நிலையில் எனக்கு உருவான அசுவாரசியமும் ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்ள முடியாதததாகப் போய்க்கொண்டிருந்தது.

நிறைய இருநூறு பக்க நோட்டுகுள் சேர்ந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் சேகரித்துப்போட்ட இருநூறு பக்க நோட்டுகளில் அவனுக்கு அதிக நாட்டம் இருக்கவில்லை என்பதை நாளாவட்டத்தில் புரிந்து வந்தேன். ஆனாலும்,அவற்றை இழந்துபோக அவன் தயாராக இல்லை. மனஇறுக்கமான பொழுதுகளில் அவற்றைத் திருப்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அடுக்கி வைக்கிற பழக்கம் அவனிடமுண்டு. புதிதாகச் சேகரிக்கப் போகிற தபால்தலைகளிலேயே நாட்டமும் ஈடுபாடும் உடையவனாயிருந்தான். அவனது அப்பாவும் குடும்பத்தினரில் சிலரும்கூட அவனது தபால்தலை சேகரிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அதோடு குடும்பத்தில் உள்ளவர்கள் இவனுக்குக் கொடுக்கிற அங்கீகாரத்தின் பெரும்பகுதியில் இந்த தபால்தலைகள் முக்கிய பங்காற்றின. புதிதாக அவன் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள், நண்பர்கள் எல்லோருடைய தருணங்களிலும் இந்தத் தபால்தலைகள் பங்கெடுத்துக் கொண்டன. மொத்தத்தில் அவனது சூழலுக்குள் இவை முக்கியமான வினையாற்றிக் கொண்டிருந்தன. பிரக்ஞாபூர்வமற்ற இந்த வினையை பயன்படுத்திக்கொண்டு இருநூறு பக்க நோட்டுகளும் வேகமாக வளரத் தொடங்கின. புதிதாக தபால்தலைகள் சேகரிப்பதில் இறங்குகிறவர்களுக்குக் கனவாக இருந்தான். அவன் புதிய சேகரிப்பாளர்களுக்குக் கூறிய அறிவுரைகள் உத்திகள் எல்லாம் குறிப்பெடுக்கப்பட்டன. எனக்கோ இவையெல்லாமே மாயாநிகழ்வுப்போலத் தோன்றியது. கால்களற்றுப் பறப்பதுபோலவும், ஆவி மொழியில் மந்திரங்கள் பரிமாறிக் கொள்ளப்படுவது போலவும் இருந்தன. இவை ஏற்படுத்திய அசுவார சியத்தில் அடிக்கடி மனச்சோர்வுக்குத் தள்ளப்பட்டேன். இருந்தாலும் எனக்கும் அவனுக்குமான உறவில் அத்தனை பிணைப்புகளும் அறுந்து போகாதபடி ஏதோவொரு திரவஇயக்கம் இருந்து கொண்டிருந்தது. எங்களுக்குப் பொதுவாக அமைந்த குறைந்த சந்தர்ப்பங்கள் சோர்வை மிக இலகுவில் தாண்டி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது இதற்கான காரணமாயிருக்கலாம். ஆனால் அதிர்ஷ்ட வசமாகவோ என்னவோ பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற கால கட்டத்தில் செந்தில்குமார் முற்றாக தபால்தலைகள் சேகரிப்பை நிறுத்திவிட்டான். இருநூறு பக்க நோட்டுகளின் வளர்ச்சி தடைபட்டது. எனக்கு மாயா உலகத்திலிருந்து அவன் தப்பிவிட்டதுபோல மகிழ்ச்சி ஏற்பட்டது.எனக்கும் அவனுக்கும் பொதுவான சமயங்களில் இனி சிக்கல்கள், பின்னல்கள் ஏற்படாதென்கிற மனநிறைவும் கூடிவந்தது. தபால்தலைகள் சேகரிப்பவர்களை பரிதாபமாகவும் ஏளனமாகவும் பார்த்தான்.

தபால்தலைகள் சேகரிப்பாளனாகிய பழைய செந்தில்குமாரை அருவருத்து ஒதுக்கித்தள்ள ஆரம்பித்தான். மறுபிறப்புக்கு ஆளானவனைப்போலக் காணப்பட்டான். பேச்சிலும் நடவடிக்கைகளிலும் கூர்மை தென்பட்டது. சேகரிப்புக்கான உபதேசங்களையும் வழிமுறைகளையும் கேட்க வருகிறவர்களிடம் வருத்தப்படுகிற அளவு நடந்துகொண்டாள். மோசமான முறையில் ஏமாற்றப்பட்டுவிட்டது போன்ற மன நிலைக்கு ஆளாகியிருந்தான். தனது பழைய காரியங்களை வெறுத்ததன் வழியே என்மீது நம்பிக்கையும், வெட்கம் கலந்த மதிப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. எனது பேச்சையும் நடவடிக்கைகளையும் கூர்மையாய்க் கவனித்தான். எனது சாதாரண நடவடிக்கைகள் அவனது கவனிப்புக்கு உள்ளாகியிருந்தது எனக்கு சிரமத்தைத் தந்தது. சில சமயங்களில் ஹயூமரைக்கூட தீவிர சர்ச்சைக்கு வலிந்து பிடித்திழுத்தான். பழக்கத்தின் காரணமாக என்னை எதிர்கொண்டு நெருப்புப்பொறி ஏற்படுகிற அளவு விவாதிக்காமல் இருக்க அவனுக்கு முடியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்ட நெருப்புப் பொய்யானவை. இந்த நெருப்பு பொறிகள் நெருப்பு பொறிகளின் மாதிரிகள் மட்டுமே. இரண்டு பக்கங்களிலும் காயத்தை ஏற்படுத்த இயலாதவை இவை. தவிர பழக்கத்தின் காரணமாக மட்டுமேதான் பொய்யான நெருப்புப் பொறிகளை உண்டுபண்ணுகிறான் என்றும் அவனை எளிமைப்படுத்திவிட முடியாது. என்மீது அவன் கொண்ட நம்பிக்கைக்கு அவனுக்குச் சாட்சியங்கள் தேவைப்பட்டன. தேவைப்பட்ட சாட்சியங்களுக்காக நெருப்புப் பொறிகளைக் கிளற வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. அவன் பிறரை எதிர்கொள்கிறபோது அவன் தரப்பு விவாதங்களை என் தரப்பு விஷயங்கள் மூலமாய் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தபோது மன அதிர்ச்சிக்குள்ளானேன் என்றாலும், எனக்கு அவனோடுள்ள உறவு எளிமைப்பட அந்த சந்தர்ப்பங்கள் உதவின. இந்த காலகட்டத்தில்தான் அவன் குடும்பத்தினரோடு அவனுக்குள்ள உறவுகள் பலகீனப்பட்டுக் கொண்டிருந்தன. தபால்தலைகள் சேகரிப்புக்கும் குடும்ப உறவுகளுக்கும் அப்படி என்னதான் பிணைப்போ புரியவில்லை.

அப்புறமாய் இரண்டுபேரும் இணைந்தே சினிமா நடிகர்களின் படங்களை வெட்டிச் சேகரிக்க தொடங்கினோம். இதில் இருவருக்குமே சுவாரசியம் இருந்தது. ஏற்கனவே, ஒரு பழக்கத்திலிருந்து விடுபட்ட அவனுக்கு விடுதலைபெற்றது போன்ற உணர்வும் கிடைத்தது. பிரக்ஞாபூர்வமற்ற சேகரிப்புதான் என்றாலும் இரண்டு பேருக்கும் உருவான சுவாரசியம் காரணமாக இதில் ஈடுபடமுடிந்தது. அதோடு, கோபாலோடு அந்த சமயத்தில் எங்களிருவருக்கும் ஏற்பட்ட நட்பு சேகரிப்புக்குப் பயனுள்ளதாக இருந்தது.

நிறைய தமிழ் சினிமா பார்க்கிறவன் கோபால். நிறைய சினிமா இதழ்களும் வாங்குவான். அவன் சினிமா இதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதுவதுகூட உண்டு. ரேவதிப்பிரியன் என்ற பெயரில் வெளியாகும் அவனது வாசகர் கடிதங்கள் அப்போது வந்த சினிமா இதழ்களில் கவனிக்கப்படக்கூடியதாக இருந்தன. அவை கவனிக்கப்படுவதற்காக முழு புத்திகூர்மையையும் ஆரம்ப நாட்களில் பயன்படுத்த வேண்டியிருந்தது. பழக்கத்தில் நுட்பங்களும் உள்அடுக்குகளும் புரிந்துவிட்டபிறகு கவனிப்பைப் பெறுவது சுலபமாக மாறியிருந்தது. அந்த இதழ்களில் அப்துல் கலாமுக்கும் அவனுக்கும் ரகசியமான போட்டியும் உண்டு. என்றாலும் கோபால் அதில் கொண்ட வெற்றி அசாதாரணமானது. அப்துல் கலாமின் புழுக்கமும் தோல்வியும் பல செவுடு வித்தைகள் அறிந்த வலிய ஆசானை கூப்பிட்டுகு கெட்டிக்கொள்கிற சாமானியனின் ‍தோல்வியைப்போல இருக்கும்.சுருக்கமாகச் சொன்னால் கோபால் அந்த இதழ்களில் வட்டார பிரபல்யஸ்தனைப்போல் காணப்பட்டான்.

சென்னையிலிருந்து 'அலைகள் காய்வதில்லை' என்ற படத்துக்காக சகல படமெடுக்கும் சாதனங்களையும் கொண்டுவந்து நாகர்கோவிலிலுள்ள ஒரு கல்லூரி வாத்தியாரிடம் ஒரு கும்பல் வழிகேட்டபோது அவர் காட்டிய ஒரே திசையாக கோபாலிருந்தான். அந்த கல்லூரி வாத்தியார் அவரது உயர்ந்த பட்ச லட்சியமே திரைப்பட சுருள் நாடாவில் பதிவதுதான் என்றாகி, அந்த வண்ணன்கனவை ஏற்கெனவே சிலப் படங்களில் எட்டியிருந்தார். திரைச்சீலையில் ஏதேனும் வயதான நபரோடு கூடவருகிற குணச்சித்திரப் பாத்திரங்கள் அருக்கு அவற்றில் கிடைத்திருந்தன. என்றாலும் குணச்சித்திர கோலம் இரண்டு நிமிடங்கள்கூட நிற்காமல் திரையில் ஓடி மறைவது அவருக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தும். இரண்டு வார்த்தைகள் வசனம் பேசி, திரைச்சீலையில் தெரிந்த அவரது குணசித்திரகோலம் அவரது வாழ்வில் ஜீவகாவிய அனுபவமாகிவிட்டது. இந்த நிலையை எட்ட அவர் அடைந்த அவமானங்கள் தாழ்வுகள் எல்லாம் தெரிந்த நபர்களில் கோபாலும் ஒருவன். ஒருமுறை அவர் அவமானங்களால் அடைகிற மனக்கசப்புகள்பற்றி எழுதி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் வாசித்த கவிதையின் நான்கைந்து வரிகளை கோபால் நினைவில் வைத்திருக்கிறான். இவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கோபால் சொல்ல ஆரம்பிக்கும் தருணங்களில் எங்களுக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உருவாகும்.பிறரது அவமானங்களில் நமக்குண்டாகிற மகிழ்ச்சியான போதையின் சூட்சுமங்கள் எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.

கோபால் அந்த சினிமாக் கும்பலைக் கூட்டிக்கொண்டு நடந்தான். அவர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு சாதனத்துக்கும் பொறுப்புள்ளவனாக நடந்து கொண்டான். எப்போதுமே இருந்திராத வகையில் எந்திரத்தைப்போல உழைத்தான். அந்த சமயத்தில் அவன் புதிதாக வாங்கிப் போட்டிருந்த இரண்டு ஏற்றுமதிக்கான காட்டன் சட்டைகளின் பின்புறமும் அப்போது பார்க்க முடிந்த எல்லா தருணங்களிலும் நனைந்திருந்தது. முகத்தில் பதட்டத்தோடு காணப்பட்டான். தவற விட்டுவிட்ட பஸ்ஸை துரத்தி ஓடிப் பிடிக்கமுடியாமல் நிற்பது போன்ற பதட்டம்.ஒருமுறை தாழ்வான குரலில் உடம்பை கொஞ்சம் கவனிக்கக் கூடாதா என்று கூறினேன். அந்த வார்த்தைகள் அப்போது எந்த பயனுமற்றது என்று எனக்குத் தெரிந்தும் அப்படிக் கூற நேர்ந்தது. பரிதாபங்களுக்கும், அனுதாபப்பட வேண்டியவர்களுக்கும் நம்மால் உதவி செய்ய இயலாமல் போகும்போது கூற நாம் கைகளிலேயே வைத்திருக்கும் கையேந்தி வார்த்தைகளின் மாதிரிகள் தான் இவை. இவற்றிற்கு யாரும் காது கொடுக்க முடியாது. கோபாலும் அப்படியே. கோபால் அவர்களோடேயே போய் பெரிய கதாநாயகனாகி விடவேண்டும் என்கிற அற்பமான கனவுகளைக் கொண்டவனில்லை. என்றாலும் இது அவனது எண்ணங்கொண்டிருந்தான். கண்ணப்ப நாயனாரின் குடிசைக்கு சிவன் வர நேர்ந்தால் நாயனா எப்படி நடந்து கொண்டிருப்பாரோ அப்படி நடந்து கொண்டான். அங்கு வந்த சாதனங்கள் அந்த சாதனங்களின் நூதனங்கள் பற்றியெல்லாம் கோபால் சொல்லிக் கேட்கவேண்டும். அங்கு வந்திருந்த சன்னமான மெழுகுப்பொம்மை போன்ற நடிகையோடு அவன் பேசிய விஷயங்கள் உச்சகட்டமாயிருக்கும். ஒவ்வொருமுறை அவன் அதைச் சொல்லும்போதும் அதுவே உச்சகட்டமாயிருக்கும். ஏனைய விபரங்கள், அவன் சொல்லும்போது தடுமாறி, குழம்பி, அடுக்குகள் மாறிவரும், நடிகையோடு பேசியதுபற்றிச் சொல்லும் போது அவன், அவனது வாழ்வில் மிகச் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயத்தை ஈடுபாடில்லாமல் ‍சொல்வதுபோல நமக்குத் தோன்றவேண்டும் ன்று நினைத்துக் கொண்டு சொல்வான். இந்த கோபால்தான் சினிமா நடிகர்களின் படங்கள் சேகரிப்புக்கு உறுதுணையாக நின்றது. அவனது உதவி என்னும் நினைவில் நிற்கக்கூடிய ஒன்று.

சினிமா நடிகர்களின் படங்களைச் சேகரிக்கத் துவங்கிய சில மாதங்களில் செந்தில்குமார் கொஞ்சம் திசைமாறிச் செல்வதுபோல ஒருகட்டத்தில் உணர்ந்தேன். இந்த திசைமாற்றம் அடிக்கடி அவனில் நிகழ்வதையும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்வதையும் நான் அர்த்தத்தோடு கவனிக்கத் துவங்கியது இந்த சமயத்தில்தான். அந்த நடிகர்களுக்கு சம்பந்தபடாத குறிப்புகளைப் படங்களுக்குக் கீழே அவன் எழுதி வைத்திருந்தது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது.அந்தக் குறிப்புகளின் மொழியே எனக்குப் புலப்படவில்லை. அந்த மொழியை அறியும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டாலும்கூட அறிமுகமில்லாத காட்டுக்குள் அவன் அழைத்துச் செல்வதுபோல இருந்தது. சினிமா நடிகர்களின் படங்களோடு ‍அரசியல்வாதிகள், பிரபல எழுத்தாளர்கள், பிரபல்யஸ்தர்கள் என்று அவனது சேகரிப்பு விரிந்த களமாகியிருந்ததையும் அந்த கவனிப்பில் தான் உணர்ந்தேன். ‍ஏதோவொரு திசை வழியே நோக்கி நுட்பமாக அவன் பயணிப்பதுபோல் எனக்குப்பட்டது. இதற்குமேல் அவன் உருவாக்க இந்த காலகட்டம்தான் துணை புரிந்திருக்கிறது என்பதை அந்த சமகாலத்தில் எனக்குப் புரிந்துகொள்ள முடியாமற் போயிற்று. முதன்முதலில் அவன் இந்த சேகரிப்புகளை வைத்து எழுதிய கட்டுரை வெளியானபோது தான் எனக்கு சில விஷயங்கள் பிடிபடத் துவங்கியது. அவனைப்பற்றி கொண்டிருந்த மெல்லிசான ஏழ்மையான சுருக்கப்பட்ட எண்ணங்கள் சுயஅருவருப்பை எனக்குள் உண்டாக்கியது. சுய அவமானத்துக்குள்ளானேன். ஒரு காட்டாறு ஏரியைக் கடந்து செல்கிற போது, ஏரிக்கு ஏற்படுகிற நிலை போன்றது அது. இவற்றையெல்லாம் மீறி ஏதேச்சையாய் அவனைப் பார்க்க நேர்ந்தபோதுதான் நெடுநாட்களாய் அவனைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. முகத்தில் கண்ட சுருக்கங்களும் கண்களை வட்டமிட்ட கறுப்புமாய் இப்போது அவன் முகம் என்னை அவனிலிருந்து விலகவைத்தது. எனக்கும் அவனக்குமிடையில் இவை ஒரு திரையை எனக்குள் விரித்துப் போட்டியிருந்தன.

அவனுக்கு முகங்கள்தான் எல்லாம். முகங்களிலிருந்து தான் பிறரைப்பற்றிய அவனது எண்ணங்கள் துவங்குகின்றன. கோடுகள், சுருக்கங்கள், கறுப்பு வளையங்கள், சிரிப்புகள் இவற்றை நுட்பமாகத் கவனிக்க அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஆரம்பத்தில் தபால் தலைகள் சேகரிக்கும்போது வகைப்படுத்திப் பழக்கிக் கொண்டதாலோ என்னவோ முகங்களை பல தினுசாக வகைப்படுத்தியிருந்தான். அவனது குறிப்புகளிலிருந்து அவனது வகைப்பாட்டுக்கான அர்த்தத்துக்கு எளிதில் வரமுடியும் எப்போதுபோல இருந்தது. அந்த அர்த்தங்களில் காணக்கிடக்கிற வெளிச்சம் நம்மை தூக்கி எறிவதுபோல இருக்கும். நம் வாழ்வில் அடிப்படைக் கனவுகளை முட்டையை உடைத்து தகர்ப்பதுபோல இருக்கும். நமது முகங்களைப் பார்க்க நம்மை தூண்டுவதுபோல இருக்கும். அந்த சமயத்தில் ஒரு சாயங்காலத்தில் அவன் வகைப்படுத்தி யிருந்த முகங்களை ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்துக்காட்ட ஆரம்பித்தான். மூளைக்கு குவிக்க வேண்டியிருந்தது. அவற்றைப்பற்றி அவன் பேச ஆரம்பித்தபோது என் இருப்பில் சந்தேசம் உண்டாவதை உணர்ந்தேன். நிறமற்று வெளிறிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. முகங்களைக் கழற்றிப் பிரித்துக் காட்டிக்கொண்டெ போனான். அவனது நடவடிக்கையில் விஞ்ஞானிக்குரிய நுட்பமும் மந்திரவாதிக்குரிய செயல்பாடும் கலந்திருந்தன. இருபது வகைமாதிரிகளுக்குள் இந்த முகங்களை வகைப்படுத்தி விட முடியுமா என்பதில்தான் தன் சிக்கல்கள் வந்து நிற்பதாகச் சொல்லி அவன் சிரித்த சிரிப்பு இன்றும் ஞாபகத்திலிருக்கிறது. அன்று அவனது சிரிப்பு எனக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்பில் உன் முகத்தை வேண்டுமானால் இருபத் தொன்றாக வைத்துக் கொள் என்று உள் வெறுப்‍போடு கூறினேன். அதற்கு அவன் அது ஏற்கனவே இருபதுக்குள் வந்துவிடுகிறது. அதுவல்ல எனது பிரச்சினை என்று நிதானமாகக் கூறினான். அவனது பதிமூன்றாவது வகைமாதிரி சேகரிப்பில் எனது முகத்தைப் பார்த்தேன். அதில் எனக்கேற்பட்ட துன்பத்தை விளக்க இயலாது. அதில் எழுதியிருந்த குறிப்பைப் புரிந்தவகையில் சொல்வதுகூட எனக்கு சாத்தியமில்லை. என் இரும்பைச் சிதறடித்து விடக்கூடிய குறிப்பு அது. அவனது சேகரிப்பில் ஒரு வகையான உதட்டைப் பிரிக்காத பூரிப்பு கலந்த சிரிப்பு அவனைத் துன்பத்துக்குக்குள்ளாக்குவதை உணர்ந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அந்தவகை முகங்களை விவரிக்கிறான். அதில் நிறைய நம் அரசியல்வாதிகள், பிரபல்யஸ்தர்கள், பிரபல்ய எழுத்தாளர்கள் முகங்களே நிரம்பியிருந்தன. ரயில் விபத்தொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்கிற ஒரு இந்திய தேசிய அரசியல்வாதியின் பூரிப்பை அந்தவகை மாதிரியின் முக்கியத் தடயமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கிறான். மனித சிரிப்புகளிலேயே இரத்த வேட்கைக் கொண்ட சிரிப்பு அது என்பதே அவனது குறிப்புகளிலிருந்து அறிய முடிகிற விஷயமாய் இருக்கிறது. நமது சகல துன்பங்களுக்கும் காரணமான சிரிப்பு அது என்று குறிப்பிடுகிறான். உலக மனநோய்களில் பல யுத்தங்களுக்கும், ஆபாசமான மரணங்களுக்கும் காரணமான மனநோய்க்கான தடயம் அதுதான் என்பதில் அவனுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரிந்த பிரபல்ய எழுத்தாளரிடம் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைச் சொல்ல நேர்ந்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட வேதியல் மாற்றத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாய் அந்த பூரிப்பு கலந்த சிரிப்பு இருந்தது. இன்னும் இதுபோன்ற பலமுகங்கள் எனக்கு அவனது இடங்களில் நின்று செய்து கொண்டிருந்ததுபோல எனக்குத் தோன்றியது. ஒரேயொரு வாய் மட்டும் பல திசைகளில் நின்று ஒலியெழுப்புவதுபோலத் தோன்றியது. சண்டையின் தாளகதியின்போது உருவான முகபாவங்கள் ஒரேயொரு வகைமாதிரியை மட்டும் நினைவூட்டக்கூடியதாகவே இருந்தது. ராகவனின் வசைகளையும் அப்பாவின் வசைகளையும் எப்படி எனக்குப் பிரித்தறிய முடியவில்லையோ அதுபோலவே ராகவன் மனைவியின் வசைகளையும் அம்மாவின் வசைகளையும் கூட பிரித்தறிய முடியவில்லை. ஒலியின் அதிர்வுகளும் ஏற்ற இறக்கங்களும் ஒரே மாதிரியானவை. மனசின் அழுகிய நாற்றம் பொட்டிச் சரிந்த ஒலிப்போட்டி. எனக்கு செந்தில்குமாரின் பிரபல்யஸ்தரின் முகங்களை இந்த சண்டையின்போது கண்ட முகக்கோணல்கள் அடையாளங்காட்டின. ராகவன் பரம்பரை பரம்பரையாய் சம்பவங்களை ஞாபகப்படுத்தி, அவரது ஒழுங்கில் அவற்றை அடுக்கிக் கத்தினார். அப்பாவின் பொறியாளர் பதவி தனது உபகாரத்தால் பொறப்பட்டது என்றார். எங்கள் வீட்டிலுள்ள பல பொருட்களும், பேண்ட், சட்டைகள் உட்பட சந்தேகத்துள்ளாக்கப்பட்டன. அப்பா நீ வேலை வாங்கி தந்தாயா, எனக் கேட்டு அதற்கெதிரான சான்றாதாரங்களை நிறுவினார். எல்லாம் வெக்கையைக் கூட்ட முயற்சித்தனவே தவிர வெக்கை தணிந்த பாடில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று, மற்றொன்று என்று தாவி  உயரம் அதிகரித்துக் கொண்டிருந்தது. எனக்கு இருளும், மின்சார விளக்குகளும் கலந்த இருளில் இந்த முகங்களின் நிழலுருவங்கள் பெரிதாய் ஆடிக் கொண்டிருந்தது பயமூட்டும்படியாய் இருந்தது.

எங்கள் வீட்டுக்கு ராகவன் வீட்டிலிருந்துதான் கழிந்த மாதம் வரைக்கும் பால் வந்தது. திடீரென ராகவன் எங்கள் வீட்டுக்குமட்டும் பாலை நிறுத்திவிட்டதும் அதன் தொடர்ச்சியில் ராகவன் முகத்தில் கண்ட இறுக்கமும் பொட்டியதில் ஏற்பட்ட சண்டை இது என்றே எளிமைப்படுத்தி சுருக்கி நினைத்துக்கொள்கிறேன். அப்பா ராகவனுக்கு ஒரு கனவு என்பதையும் புரிந்தே இருக்கிறேன். ராகவனின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அப்பாவை பிரதிபலிக்கக்கூடியதாகவே இருக்கும். நடை உடை பாவனைகளிலிருந்து குழந்தை வளர்ப்பிலிருந்து சகலமும் குட்டி அப்பாவைப்போல இருக்கும். இதனாலேயே ராகவனின் மகனாகிய சுரேஷ் எனது முகசாயலை அடைந்து கொண்டிருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது. எனது முகசாயலை உருவமாக தினசரி பார்க்க வேண்டிவருவதில் போதையும் உள்ளூர வெறுப்பும் எனக்குள் இருக்கிறது. சண்டையையும் வயது வித்தியாசமுள்ள இரண்டு அப்பாக்கள் போட்ட சண்டை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அப்பாக்களின் பரஸ்பர சண்டைகளைப் பார்த்து பயப்பட ஒருவேளை எதுவுமில்லாமல் கூட இருக்கலாம். எச்சில் உமிழ்வது, துண்டை உதறுவது, சன்னல்கள் அடைப்பது, சமிக்சைகளால் மனப் புண்ணில் பழுப்பு கசிவது போன்ற போராட்ட உத்திகளைப் பார்த்து பயப்படாமல் இருக்கவும் தெரியவில்லை. நியாயமாகப் பார்த்தால் இந்த நிகழ்வில் நானும் பங்கு பெற்றிருக்கவேண்டும். புறவயமான அசைவுகளோடும், ஒலிகளோடும். செந்தில்குமாரின் சேகரிப்புகளும் அவைபற்றிய குறிப்புகளும் எனக்குள் ஆற்றியிருந்த வேதி வினைகள் என்னை மெளனமான ஓவியமாக்கிவிட்டது. சொல்லப்போனால் இது செந்தில் குமாரின் ஓவியம். இந்த மெளன ஓவியங்களுக்கான இடமென்ன? ஓவியங்களைச்சுற்றி இப்படியான முகங்களே நிறுத்தப்படுகின்றன. ஓவியங்கள் தோற்று தளர்ந்து விழுகின்றன.

கழிந்த வருடம் புத்தளம் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்த என் நண்பனின் பையன் நீக்கப்பட்டபோது அதற்கான காரணம் அவன் எழுதிய காதல் கடிதமாய் இருந்தது. நானும் நண்பர் துரையும் பள்ளி தலைமையாசிரியரைப் பார்க்கப் போயிருந்தோம். அவரும் எனக்கு இந்த முகத்தையே நினைவுப்படுத்தினார். ராஜியை ஒழுக்ககேடான பெண் என்று சொல்லி கல்லூரியை விட்டு விலக்கிய கல்லூரி முதல்வரும் இதே முகம்தான். என் அப்பாவும் ராகவனும்தான் பல இடங்களிலும் வேறுவேறு விதமான ஆடைகளுக்குள் இருப்பதுபோல தோன்றுகிறது. இருபது முகங்களைக் காண செந்தில்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளையும், துன்பங்களையும் யூகிக்க ஒருமுகத்தை பல இடங்களில் காண நேர்ந்தபோது எனக்கு ஏற்பட்ட மனத்துன்பங்களே காரணமாய் இருக்கின்றன.

செந்தில்குமாரின் ஓவியங்களை அடிக்கடிக் கவனிக்கிறேன். எதுவும் அதிகமாய் அவனிடம் பேசும் தேவை தற்போது குறைந்து வருகின்றது. அவனது அறை சுற்றிச் சுற்றி பல கேன்வாஸ்களில் ஓவியங்களைத் தாங்கிக் கொண்டு, ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறது. முன்பு போல, அவன் ஓவியங்களில் எழுத்துக் குறிப்புகள் எதுவும் தருவதில்லை. ஓவியத்திலேயே கோடுகள் மூலம் குறிப்புகள் செய்கிறான். அவன் ஓவியங்களைப் புரிய ஆரம்பத்தில் நான் எதிர்கொண்ட நெருக்கடிகளைவிட புரிதல் ஏற்படுத்திய நெருக்கடி பலமானதாயிருக்கிறது. மொத்தத்தில் அவன் ஓவியங்கள், கோடுகள், குறிப்புகள் எல்லாம் நமக்கு ஆதிகால ஓவியமாய் பழையதாய் தீர்ந்து தூசி படிய வேண்டுமென்றே தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் இறந்த காலத்துக்குள் தள்ளி விட்டுவிட்டு பெருமூச்சு விட வேண்டும் போல இருக்கிறது.


புகைப்படம்  - ரகுராய்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"