புலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை

புலன்கள் அழிந்த நிழல்கள் 

என் படுக்கையைப் பார்க்கிற எவருக்கும் என் படுக்கை ஒரு நோயாளியின் படுக்கை என்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்துவிடும்.கடைசி காலத்தில் என் பாட்டி அவளுடைய படுக்கையை இப்படித்தான் அலங்கோலப்படுத்தி வைத்திருந்தாள். அவளது படுக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதுகூட மனசை சிதறடித்துவிடும். அல்லது எரிச்சல் உண்டாக்கிவிடும். அப்படியிருக்கும் அவள் படுக்கை வயோதிகத்துக்கும் படுக்கைக்குமுள்ள சம்பந்தம்போல இருக்காது. அது அதற்கும் உள்ளே ஏதோ ஒன்று ஊடாடிக் கொண்டிருக்கும். சில நள்ளிரவுகளில் அவளது ஊளைகளும் அர்த்தப்படுத்த முடியாத ஒலிச்சிதறல்களும் அவள் படுக்கையின் அலங்கோலத்திலிருந்து கிளம்புவது போலவே எனக்குத் தோன்றும். என்னுடைய படுக்கையும் மூன்று வருடங்களாய் இப்படியாகிப் போனது உள்ளூர பெரிய துக்கத்தை உண்டாக்கியிருப்பது யாருக்கும் அநேகமாய் வெளியில் தெரியாது என்றே நினைக்கிறேன். பாட்டியின் படுக்கையோடு என்னுடைய படுக்கை ஒத்துப்போகிற மாதிரியான பல தடயங்களை மறைத்துவிட நான் மேற்கொள்கிற முயற்சிகளில் என்னை நானே தூக்கி நிறுத்திக் கொள்வது மாதிரியான மகிழ்ச்சியிருக்கிறது. ஆனாலும் இப்படியான முயற்சிகளின் முடிவு ஒவ்வொன்றும் எனக்கு சாதகமற்றதாகவும், இன்னும் அதிகமான களைப்பை உண்டு பண்ணுவதாகவும் அமைந்துவிடுகின்றன. ஒரு தடயத்தை மறைக்க முயற்சிக்கிறபோதே அடுத்த தடயம் படுக்கையின் மேல்பகுதியில் துலங்கி விடுகிறது. 

என் படுக்கையின் அடிப்பக்கத்திலுள்ள மெத்தைதான் இந்த அலங்கோலத்திற்கான ஆரம்பப் பணிகளைக் கவனித்துக் கொள்வதுபோலப்படுகிறது. அதற்குள்ளே நிறைய அரூபமான நச்சுத் தாவரங்களின் விதைகள் இருக்கின்றன. அவைகளின் உயிர் ‍எழும்போது அதன்மேல் விரிக்கப்பட்டுள்ள கம்பளியும் போர்வையும் எல்லாம் கசங்கி என் களைப்பு பன்மடங்காகிவிடுகிறது.என் உடம்பின் இரத்தம் சதை இவற்றின் ஊடே ஒரு மாயமான திரவம் சுரந்து என்னைப் படுக்கையில் ஆழ்த்தி விடுகிறது. எங்கள் வீட்டின் ஒரு மூலையில் என் அறை இருப்பதால்தான் இந்த விதைகள் வேறு யாரையும் இன்னும் தன் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இந்த அறைக்குள் உள்ள அந்தரங்கம் ஓரோர் விதத்தில் வீட்டிலுள்ள எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. வயது வித்தியாசமின்றி இந்த அறை வீட்டிலுள்ள மற்ற எல்லோருக்குமே அசெளகரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனக்கு இந்த அசெளகரியங்களும், என் படுக்கையும் மிகப்பெரிய சவால்கள்தான். இருந்தாலும் இவற்றை சவால்கள் என்று எனக்கு எடுத்துக்கொள்ள இயலாத மாதிரி விதைகளின் உயிர்ப்பு ஒரு அரூபமான களைப்பை உண்டுபண்ணிக் கொண்டேயிருக்கிறது.

பெரும்பாலும் இந்த படுக்கையிலிருந்து பத்து பத்தரைக்குதான் எழும்ப முடிகிறது. எழும்பி எனக்கான காரியங்களைச் செய்ய ஆரம்பிக்கும்போது வீட்டின் ஏனைய அறைகள் காலியாக இருக்கும். அது ஒரு விதமான கசப்பான போதையை உண்டாக்கும். கொல்லைக்குப் போக இரண்டு மூன்று விளைகள் தாண்டிப் போவேன். ஒரு விளைக்குள் மட்டும் பத்தரை மணி சூரியன் புராண அரக்கன்போல கிடக்கும். அந்த விளையைத் தாண்டும் போதே மிகுந்த களைப்பு உண்டாகிவிடும். திரும்பி வீட்டுக்கு வந்து காலை டிபன் சாப்பிட்டு முடிக்க சுமாராக பதினொன்று முப்பது ஆகும். இதற்குள் களைப்பு இழுத்துக்கொண்டு போய் படுக்கையில் கிடத்திவிடும். இன்று காலை எழும்பும் போதும் இதே மாதிரிதான். வீட்டின் ஏனைய காலி அறைகள் விஷய மற்ற ஒரு சோர்வை ஏற்படுத்தியது. பிளாஸ்கிலிருந்து டீ விட்டுக் குடித்தேன். பிளாஸ்கிலிருந்து டீ விட்டுக் குடிப்பது என்பது எப்படியோ இருக்கிறது. ஜனங்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் ஒத்துப் போகிறதோ தெரியவில்லை. பிளாஸ்கிலிருந்து டீ குடித்ததும் புதிதாய் ஏதோ ஒரு நோய்க்கூறு உடலினுள் போவதுபோல இருந்தது. அனாவசியமாக சமீபத்தில் எனக்கு ஒரே ஆறுதலாயிருக்கிறவளின் ஞாபகம் வந்தது. அனாவசியமாக வந்ததென்று சொல்ல முடியாது. வாழ்க்கையின் ஒரே பிடிப்பாக இருப்பது அவள் ஞாபகம் மட்டும்தான். அவளது முகத்தைத் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சி எடுத்துக் கொள்கிற சிரமத்தில் ஒரு விதமான சுகம் இருக்கிறது. இந்த சுகத்துக்காகத்தான் ஒருவேளை அவள் முகத்தை ஞாபகப்படுத்த முயற்சிக்கிறேனோ என்னவோ தெரியவில்லை. சாயங்காலங்களில் குளித்து புறப்பட்டு அவளைப் போய் பார்த்து விட்டு வருவேன். வழக்கமாக சாயங்காலங்களில் பெரும் பாலும் காலை நேரத்துக்கு நேர் எதிர்மாறாக உடம்பில் புதுத்தெம்பு உண்டாகிறது. அந்தத் தெம்புக்கு ஏதேனும் ஒருவகையில் தீனி போட வேண்டும். எங்கேனும் புறப்பட வேண்டும். ஏதேனும் ஒரு குட்டி மலையையேனும் தள்ளிப்போடு என்று மனம் போடுகிற கட்டளைக்குப் பணிந்து ஒரு குன்றையேனும் தள்ளிப் போடுவதுபோல பாவ்லா காட்ட வேண்டும். இல்லையெனில் காலை வேளைகளில் உள்ள பூச்சிகள் பரவி பல பகுதிகளை அரிக்கத் தொடங்கிவிடும். கழிந்த மாதத்தில் பெரும்பாலும் சாயுங்காலமானால் சங்குத்துறை பீச்சுக்குப் போவேன். பீச்சுக்கு இறங்கிப்போகும் நடைபாதைப் படிக்கட்டில் உட்கார்ந்து இரண்டு சிகரெட்டுகள் புகைப்பேன். சில நேரங்களில் இவை இரண்டு மூன்று என்றுகூட ஆகும். இதையெல்லாம் நீங்கள் துல்லியமான கணக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது.நீண்ட கடற்கரையில் ஓர் ஓரத்தில் தனியாக உட்கார்ந்திருப்பது செளகரியமானது. மனது வியாபித்து விடுகிறது. மனசுக்குள் பல பேர் நடந்து போக அது வசதியாக இருக்கிறது. வெளியூரிலிருந்து காரில் வருகிறவர்களின் குழந்தைகள் குதிக்கும். அலைகளின் சுருள் நுனிகளில் அவைகள் கால்களைக் கொடுக்கும். பின்னும் குதிக்கும். அவைகள் குதிப்பதற்கும் சிரித்து கும்மாளமடிப்பதற்கும் கால்கள் நனைவதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா தெரியவில்லை. அவைகள் வீடுகளில் இருந்து வரும்போதே குதிப்பது ஆனந்திப்பது போன்ற முடிவுகளோடுதான் வருகின்றன. ஆக இங்கே ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒத்திகைகளை நிஜமாக நிகழ்த்தாமலிருக்க அவைகளுக்கு சாத்தியமில்லை. ஒத்திகைகளோடு இந்த நிஜம் ஒத்துப் போவது போன்ற பாவனைகளோடு குதிக்கின்றன. உள்ளூர குழந்தைகள் லேசான வெறுமைக்கேனும் ஆளாகியிருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். பெரியவர்கள் பெரும்பாலும் சில பொதிகளைக் கையோடு எடுத்து வருகிறார்கள். குழந்தைகளை அதட்டிக் கொண்டும் கொறித்துக் கொண்டும் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் ஒரு எந்திரத்தைப்போல எழும்பி வேகமாகச் சென்று குழந்தைகளை அதட்டி ஏதேனும் சொல்லிவிட்டு சாவகாசமாக நடந்து வந்து உட்கார்ந்திருப்பார்கள். நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளால் வளர்க்கப்பட்ட அந்த குழந்தைகள் கால் நனைத்துக் ‍குதிப்பதைப் பார்க்கிற தெளிவான மடையனுக்குக்கூட திடீரென அலை நீள வரிசைகளில் இருந்து பத்துப் பதினைந்து காட்டு விலங்குகள் வந்து, குழந்தைகளைக் கொண்டு போனாலே ஒழிய, கடலுக்குள் போக இந்த குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வாய்ப்புகூட இல்லை என்பதும் புரியும். பிறகு ஏன் இப்படியான எந்திரவேகத்தில் யாரோ கட்டளைப் பிறப்பித்ததுபோல போகிறார்கள் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் போட்டோ ‍எடுக்க தேர்ந்தெடுக்கும் ‍கோணம்,கடலை, அதன் விகாசத்தை இழிவுபடுத்த திட்டமிட்டு செய்கிற சதி மாதிரி இருக்கும்.

கடலைப் பார்க்க வந்திருக்கிறேன் பேர்வழி என்று வருகிறவர்கள் பெரும்பாலோருக்கு கடல் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கடற்கரையை வீட்டுத் திண்ணையைப் போல அலுவலகத்தைப் போல கிளப்புகள் போல பார்கள் போல சமையல்கட்டுகள் போல உபயோகப்படுத்துகிறார்கள். இவர்கள் ஏன் கடற்கரையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை யூகிக்கவே முடியவில்லை. கடற்கரையை கடற்கரையாக நினைக்க இவர்களுக்கு முடிவதே இல்லை. வயதான தம்பதிகள் நீளமாக கடற்கரையில் நடப்பார்கள். எதையும் அதிகமாக பேசிக்கொள்வதில்லை. கடல் நிச்சயமாக அவர்களை என்னவோ செய்கிறது. ஒரு வேளை அவர்களில் கரைகிறது. கடற்கரையில் நீளங்களில் நடந்து போகும்போது திசைகளுக்கு திசை சில கனங்கள் அவர்களது பார்வைகள் மெதுவாக நின்று நின்று நகரும். கடல் அவர்கள் கண்களுக்கு ஒரு பிரகாசத்தைக் கொடுக்கிறது. சில வெளிநாட்டு ஜோடிகள் எப்போதேனும் வருவார்கள். சூரியன் மங்கும் நேரத்தில் அவர்கள் படுத்திருப்பதைப் பார்ப்பது ஒருவிதமான காமத்தை உண்டுபண்ணுகிறது. பெரும்பாலும் இங்கு வருகிற வெளிநாட்டுப் பெண்களின் விறைப்பு நம் பெண்களை பல நூற்றாண்டுகளுக்குப் பின் தள்ளுவதுபோலப்படுகிறது. அவர்களுக்கும் நம்மேல் ஒர் இழிவான பார்வை இருக்கும்போல. அதனாலேயே அவர்களோடு ஏதேனும் பேசலாமே என்று எனக்கு வருகிற எண்ணத்தையும் மறைத்துக் கொண்டு அவர்களைப் பொருட்படுத்தாததுபோல் உட்கார்ந்திருப்பேன். அவர்கள் கடலைத் திட்டமிட்டு பார்ப்பதுபோல பார்க்கிறார்கள். பார்க்கவேண்டும் என்பதுபோல பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன். கரையின் பலமுனைகளுக்கும் போய் நின்று பார்க்கிறார்கள். எந்த நாட்டுக் காரர்கள் என்றெல்லாம் சொல்லும் விரிவான அறிவு எனக்கில்லை என்றாலும் வெளியிலிருந்து வருகிறவர்கள் இப்படி முனைக்கு முனை சென்று பார்ப்பதை நிறுத்தினால் பரவாயில்லை. தனியாக வருகிற வெளி நாட்டுக்காரர்கள் வேறுவிதமாய் நடந்து கொள்கிறார்கள். இப்படி‍ யெல்லாமான காட்சிகள் எல்லாம் ஒருவிதமான எரிச்சலையும், ஆறுதலையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.ஒருசாட்சிதான் மிகுந்த அருவருப்பை உண்டுபண்ணுகிறது. ஐந்து ஆறு மணிக்கெல்லாம் முறுக்கேறிய உடலைத் திட்டமிட்டு உற்பத்தி செய்துகொண்ட நான்கு அல்லது ஆறுபேர் வரை வருகிறார்கள். கடற்கரையின் நீளத்தின் ஒரு பகுதியில் வெள்ளை உடைகளோடு கராத்தே பயிற்சி எடுக்கிறார்கள். கால்களை ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்குத் தூக்க முடியும் என்று கற்பனை செய்து கொள்வோமோ, அதைவிட இரண்டு மூன்று இஞ்சுகள் குறைவாக அவர்களுக்குத் தூக்க முடிகிறது. அந்த ஒவ்வொருவருமே கற்பனையான ஒரு எதிரியைத் திட்டமிட்டுக் தூக்கிக் கொண்டே முன்னேறுகிறார்கள். பின்பு ஆரம்பநிலைக்கு எதிரியை வரவழைத்து மீண்டும் தாக்குகிறார்கள். எதிரியைப் பெரும்பாலும் இவர்களது கற்பனைக்குள்ளேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். இவர்களின் கவனங்கள் கடற்கரையில் உட்கார்ந்திருப்பவர்களிடமே இருக்கிறது. கரையில் இருப்பவர்களின் கவனங்களே அவர்களது தாளகதியை இயக்குகிறது. உடலைப் பிழிந்து எடுக்கிறார்கள். பகுதிகள் பிதுங்கி வியர்வை வெளியேற அவர்களின் எதிரி சோர்ந்து போவான்போல. சாயங்கால கடற்கரை எவ்வளவோ இலகுவாக இருக்கிறது. சூரியனை கடலிலிருந்து பிரித்து எடுக்க எடுக்க கடல் விருப்பப்படுகிற மாதிரியான இளம் பெண்ணாகி விடுகிறது. அதன் மிகுந்த நாணத்தைப் பொருட்படுத்தாமல் அவளைக் கற்பழிக்க விறைத்து நிற்கும் குறிகளைப்போல இவர்கள் நிற்பார்கள். ஆட்கள் மெதுவாகத் திரும்பத் தொடங்கியதும் இவர்கள் விறைப்பு துணிந்து ஆடைகளை உடுத்திக் கொண்டு கிளம்பு தணிந்து ஆடைகளை உடுத்திக் கொண்டு கிளம்புவார்கள். கிளம்பும்போது முகமெல்லாம் வெறுமை படர்ந்து இருக்கும்.காமமும் வெறுமையுமாய் அலைக் கழிக்கப்படுவதில் உள்ளூர அவர்களுக்கு ஒரு லயிப்பு இருக்கிறதென்று நினைக்கிறேன். இவர்களது நடவடிக்கை கடற்கரையின் பெரும்பகுதியை வன்முறைக்களமாக்கி விடுகிறது. ஏழு ஏழரைக் கெல்லாம் ஆட்கள் கரையேறத் துவங்குவார்கள். ஆட்கள் எல்லோரும் போனபின்பு இந்த கடல் என்ன மாயக் கோலமெல்லாம் போடுகிறது? போதை உண்டு பண்ணுகிற லாவகங்கள், இருட்ட இருட்ட பெரிய கண்கள் போல மாறிவிடுகிறது கடல். அப்போது மீண்டும் ஒரு சிகரெட் அந்த நேரத்தில் இருக்காது. தீப்பெட்டியில் இருந்து சில குச்சிகளைக் கிழித்துப் போடுவேன். வழக்கமாகத் தீக்குச்சிக் கிழித்து போடுவேன் என்று சொல்ல முடியாது. அதோடு தீக்குச்சி கிழித்து போடுவது என் பிரக்ஞையிலும் இருப்பதில்லை. அப்புறமாய் வீட்டுக்கு நடக்கும்போது மனசில் பூச்சிகள் பறக்க முடியாதபடி ஒரு நெருப்பு சுழன்று கொண்டிருக்கும்.

இந்த மாதம் கடல் இருந்த இடத்தில் ஒரு பெண் புகுந்துவிட்டாள். ஒரு நாளில் ஒரே ஒரு பார்வை மட்டும்தான் அவளிடமிருந்து எனக்குச் சாதகமாக கிடைக்கிறது என்றாலும் என்னுடைய இருப்பை அவள் உணர்வது அரைமணி நேரம் மிகுந்த சிரமத்தையே அவளுக்குத் தருகிறது. அதை சமாளிக்க நேர்த்தியான பல தந்திரங்கள் அவளிடமிருக்கின்றன. ஒருவேளை நான் வராமலிருந்தால்கூட இந்த நேரத்தில் இந்த இடத்தில் அவள் இந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும்போல. அப்படி பழக்கமாகிவிட்டது அவளுக்கு. எனக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு ஒரு பாதுகாப்பான நிலையிலேயே நான் நின்று கொள்வேன். அவளுக்கு ஏற்படும் சிரமங்கள் மகிழ்ச்சியான சங்கடத்தைத் தருகின்றன. மொண்மையான பெண்களின் இத்தகைய சிரமங்கள் கீறிச்சிடுவது போல், தரையில் இருந்து உயரே பறப்பதுபோல், இவள் எரிச்சலை உண்டாக்குவதில்லை. உராய்வுகளை ஏற்படுத்துவதில்லை. ஒரு பெண்ணின் இத்தகைய சிரமங்கள் பற்றிய எனக்குள் உள்ள கற்பனைகளும் இவளது சிரமங்களும் சந்தித்து ஒரு உரையாடல் நடத்தினால் பரஸ்பரம் அவை தங்கள் உறவுகளைப் பரிமாறிக் கொள்ளமுடியும். அவளது சிரமங்கள் பெயிண்டிங் நுட்பங்கள் போல் தோன்றுகின்றன. அவளது பெயர் தெரிய எனக்கு விருப்பமில்லை. எனக்கும் அவளுக்குமான இந்தச் சாயங்கால உறவுக்கு பெயர் அந்த அளவு முக்கியமானதல்ல. சாயங்காலம் மட்டும் முக்கியம். அவ்வளவுதான். எனக்கான இந்த பெண் வருவதற்கு முன்னால் வேறு இரண்டு பெண்கள் வருவார்கள். அவர்கள் வந்து பதினைந்து நிமிடங்களுக்குள் அவர்கள் போகவேண்டிய பேருந்து இந்த சந்துக்கு வரும். அதில் ஏறிப்போவார்கள். நான் கவனிக்க முடிந்த பதினைந்து நாட்களுக்குள்ளாகவே அவர்களிடம் நேர்த்தியான பல ஆடைகள் இருப்பது தெரிந்தது. அவர்களைக் கவனிப்பதற்கு அந்த ஆடைகளின் நேர்த்தி பெரிதும் உதவுகிறது. இரண்டுபேருமே உணவு பிரச்சனைகள் இல்லாத குடும்பங்களால் வளர்க்கப்பட்ட உடல்களைப் பெற்றிருக்கிறார்கள். இந்த பதினைந்து நாட்களில் நானும் அவர்களது கவனத்தைப் பாதித் திருக்கிறேன். ஏதோ ஒருவிதத்தில் நான் அவர்களுக்கு சவாலாகக்கூட இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இரண்டு பேரும் பார்வைகளை என் கண்கள் நோக்கி மாற்றிக் கொண்டிருப்பது அவர்களுக்குள் போட்டி நடப்பதை எனக்கு உணர்த்துகிறது. இரண்டு பேரும் அவர்கள் போட்டிக்கு சம்மந்தம் இல்லாத ஏதோ விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பதற்கு மத்தியின் என் கண்கள் அவர்களுக்கிடையில் விழிப்பு நிலையில் இருக்கின்றன. அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணின் செய்கை அடுத்தப் பெண்ணை ஜெயிக்க சில வெளிப்படையான கிறீச்சிடல்களையும் செய்கிறது. நான் இந்தப் பெண்ணை லேசாய்த் தவிர்க்க முயற்சிப்பது அவளைச் சுருக்கி அவளது கிறீச்சிடல்களைப் பெருக்குகிறது என்றாலும், இரண்டு பேருக்குமாக என் விழிகள் மாறுவது அவர்களில் ஒருவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளுதல் என்பதற்கு மிகுந்த தடையாக உள்ளது. யாரோ ஒருவர் தன்னை ஸ்தாபித்து முடிகிற பட்சத்தில் என் கண்கள் அவர்கள் இரண்டு பேருக்குமே சாரமற்றதாக ஆகிவிடும். அதிலும் அந்த கிறீச்சிடுகிற பெண், உடல்வாகு எல்லாம் சாதாரண பல இடங்களில் அவளுக்கு மற்ற பெண்ணை எளிதில் வென்றுவிட சாதகமானதாக இருக்கக்கூடியதுதான். அதனாலேயே அவளுக்கு மிகுந்த சவாலை என் கண்கள் உண்டு பண்ணியிருக்கின்றன. எதிர்கொள்கிற ஒவ்வொரு கண்ணிலும் அவர்களுக்குள் இப்படி ஒரு சவால் இருக்கும்போல.
 
இன்று காலையில் கொல்லைப் பகுதிக்குப் போவதற்கு முன் வீட்டின் முன் வராண்டாவில் உட்கார்ந்திருந்தேன். இருப்பதற்கு விருப்பம் இல்லாமலேயே இருக்க வேண்டியிருக்கிறது. எதிரில் தார் ரோட்டில் பதினொரு மணிக்கு சூரியன் அப்பிடிக் கடப்பது களைப்பை அதிகரித்தது. ரோட்டின் புறங்களில் தென்னை மடல்களின் இருளை சூரியன் ‍எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மாதிரி நேரங்களின் மடல்களின் இருளைப் பார்ப்பது தணுப்பாக இருக்கும் என்றாலும் ரோட்டில் அப்பிக் கிடக்கும் சூரியன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு எதிரான ஒரு மனநிலையை உண்டுபண்ணுகிறது. நடந்து கொல்லைப்பகுதிக்கு சென்று வந்ததும் களைப்பு அதன் உச்சநிலைக்கு வந்துவிடும். சூரியனின் அடங்கல் வினளதாண்டி போவதைப்பற்றி நினைக்கும்போதே உடம்பின் மேல்பாகத்தோலின் அடிப்பாகத்திலுள்ள கொழுப்பு கொதித்து உருகத் தொடங்கிவிடுகிறது.

சமையல்கட்டுக்குப் போனேன். கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். சில எச்சில் பாத்திரங்கள் கைகழுவும் பேஸினுக்குள் கிடக்கின்றன. உடம்பெல்லாம் புண் வந்ததுபோல். எதனாலோ அவை அப்படி கிடப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை.சில குப்புறக் கிடக்கின்றன. சில பக்கவாட்டில் சரிந்துப் பார்வையைத் தவிர்த்தும்கூட அவைகள் என்னை விட்டபாடில்லை. பிடித்திழுக்கின்றன. ஞாபகத்தின் ஒரு காட்சியாய் கட்டித் தழுவுகின்றன. என் அறைக்குள் வந்தேன். என் அறைக்குள் இருந்த களைப்பை உண்டாக்கும் இருட்டு இன்னும் தன் புது விழிப்பு நிலையில் இருந்தது. ஜன்னல்களைத் திறந்ததும் வெளிச்சம் உள்ளே நெளிந்தது. என் அறைக்குள் உள்ள இருட்டுப் பகுதியைத் துப்புரவாக வெளியேற்ற அந்த மேற்குப்பக்க ஜன்னல் காலையில் அவ்வளவாக உதவாது. காலையில் அதை திறந்ததும் அதன் வழியே வரும் வெளிச்சம் என் அறையில் இருட்டோடு ஏதோ கெஞ்சும். மிகப் பெரிய கெஞ்சலுக்குப் பிறகு ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து இரண்டு பேரிடமும் உள்ள பாதிப்பாதி சாராம்சங்கள் இங்கிருக்கலாம் என்று முடிவு செய்கின்றன. துணி துவைக்கலாம் என்று எனக்கிருந்த முடிவை யாரோ என் உடம்புக்குள்ளிருந்து தவிர்ப்பதுபோல உணர்ந்தேன். கொல்லைக்குப் புறப்பட்டபோது மணி பதினொன்று முப்பத்தைந்து இருக்கும்.இரண்டு விளை தாண்டும் போதே உடம்பின் முதுகுப்புறமும் இடுப்புப்பகுதியும் வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. மூன்றாவது விளை தாண்டும்போது அது இன்னும் அதிகப்பட்டிருந்தது. அப்போது எனக்குப் பரிச்சயமான ஞானசெல்வம் வீட்டு நாய் விளையின் முள்வேலியின் ஓர் இடுக்கு வழியே உருவி ஒடிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டு அது ஓடுவதற்கான காரணம் எதுவும் எனக்குத் தெரிந்து இருக்கவில்லை. எப்போதேனும் ஒரு கல்லை இதன் மேல் விட்டெறிந்த தாகக்கூட ‍எனக்கு ஞாபகம் இல்லை. அதற்கு மனிதர்கள் பேரில் ஒட்டுமொத்தமான அபிப்பிராயம் உண்டாகியிருக்கிறதென்று தோன்றியது.
ஞானசெல்வம் வீட்டு அந்த நாய் உத்தேசமாகப் பத்து வருடங்களுக்கு முன்னால் சின்னக் குட்டியாக வந்து சேர்ந்தது. ஞானசெல்வம் வீட்டு மணி, தான் கே.ஆர்.விஜயா வீட்டில் டிரைவர் வேலை பார்ப்பதற்காகச் சொன்னதை எனக்கு நம்ப முடிந்தாலும், அந்த குட்டி நாயையும் அங்கிருந்தே கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதை எனக்கு நம்ப முடியவில்லை. ஊரிலுள்ள பலரும் நாய்க்குட்டியைப் பார்க்கப் போனார்கள். சில பெரியவர்களுக்கு அந்த நாய்குட்டியைப் பார்க்க விருப்பமிருந்தாலும் ஒரு நாயைப் பார்க்கப் போவது எப்படி என்ற மனத்தடை அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இருந்தாலும் பல பெரியவர்கள் ஞானசெல்வம் வீட்டின் வழியாக நடக்கிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு பார்த்து வந்தார்கள். ஊரில் டி.வி. இல்லாத வீட்டில் உள்ள பெண்கள் தாராளமாகப் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். அதன் உடம்பு பூராவும் இருந்த உரோமம் அதோடு கொஞ்ச வேண்டும் என்கிற மன ஸ்பரிச உணர்வை பலருக்கும் உண்டு பண்ணியது. அதன் கண்கள் அதன் ப்ரவுன் கலர் உரோமத்துக்குள் சுறுப்பாய்த் தெரிந்தது. காதுகள் மடிந்து இறுக்கமற்று லேசாய் தளர்ந்து கிடந்தன. தனியாக அது துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது எல்லோருக்கும் அபூர்வமாக இருந்தது. தென்னை நிழல்களின் கீழே அது குரைத்துக் கொண்டு திரிந்தது மன சந்தோசத்தை ஏற்படுத்தியது. அந்தக் குரைப்பை எல்லோரும் செல்லமாக எடுத்துக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த குரைப்பிலும் கான்வென்ட் பெண் பிள்ளைகள் இங்கிலீஷ் பேசுவது போன்ற த்வனி தெரிந்தது. அந்த வீட்டு வேலி வளாகத்துக்குள் அது ஒற்றைக்கு ஆட்டம் போட்டுக் கொண்டு திரிந்தது. அது வேலியை விட்டு வெளியே வருவதில்லை. அந்த வேலிக்குள் தென்னை நிழல் விழுந்துகிடக்கும் தரைதான் அதன் வளாகம். கழுத்தில் கட்டப்படாத கயிற்றின் இழுப்புக்கு உட்பட்டு அதன் காரியங்கள் நடப்பதுபோல இருக்கும். யாரேனும் பிள்ளைகள் அல்லது பார்க்க வருகிறவர்கள் அதை கையிலெடுத்து வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தால் மணி அதை கீழே விடும்படி சத்தம் போடுவான். அவனுக்குள் எல்லோரும் இப்படித் தூக்கித் தூக்கி விட்டால் நாய் நரங்கி போகும் என்கிற எண்ணம் இருந்தது எனக்கு நியாயமாகவேத் தோன்றியது. அப்படி இல்லாவிட்டால் இந்த நாய்க்குட்டியை இந்த ஜனங்களிடமிருந்து காப்பாற்ற முடியாது என்பது உண்மையே.எனவே மணியின் குரல் பலருக்குச் சங்கடத்தையும் தற்பெருமை கொண்டவனின் அகங்காரம் அது என்பது போலவும் ஏற்பட்ட மன உணர்வுகளை எல்லாம் எனக்கு நியாயமானதென்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. மணியோடு சில வேளைகளில் அது சைக்கிளில் போகும் போது ஏனைய ஊரில் உள்ள நாய்களின் சாயத்தை வெளிறச் செய்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் ஊரிலுள்ள பல நாய்களுக்கும் இது சங்கடத்தை உண்டு பண்ணியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பலர் தங்கள் தங்கள் நாய்களின் மேல் அன்பு காட்டுவதற்கு இடைப்பட்டப் பகுதிகளை இந்த குட்டி நாய் அடைத்துக் கொண்டது. அந்த நாய்குட்டிக்கு மணி வைத்திருந்த பெயர் இப்போது எதனாலோ ஞாபகம் வைத்து கொள்ள முடியாதபடி மறந்து போனது. அது ஒரு வெளிநாட்டுக் காரியின் பெயர். இந்த குட்டி ஆண்நாய்க்கு ஏன் மணி வெளி நாட்டுப் பெண்ணின் பெயரை தேர்ந்தெடுத்தான் என்று தெரியவில்லை. ஊரில் அந்த பெயர் உச்சரிக்கப்படுகிற முறைக்கும் அந்த குட்டி நாயின் கவர்ச்சிக்கும் தொடர்புகள் உண்டா என்றும் தெரியவில்லை. ஆனால் ஊரில் அந்த பெயரின் அழுத்தத்தில் மந்திரத்துக்குண்டான சக்தி எல்லோருக்கும் தெரிந்தது. இப்போது அதன் ரூபமே மாறியிருப்பதைப் பார்க்க ஒரு விதமான மனச்சங்கடம் உண்டாகிறது. அதன் முதுகில் குத்தாய் ரோமங்கள் அடர்ந்து அடர்ந்து புண்களாய் இருக்கின்றன. அதன் கண்கள் ஏதோ ஒரு ரீதியில் தாக்குவது போல உள்ளது. சில தூக்கமற்ற ராத்திரிகளில், நினைவுகளின் போதைக் களைப்பை ராத்திரிகளில், நினைவுகளின் போதைக் களைப்பை அனுபவித்து தன் நச்சுக் காற்றை என் தூக்கமின்மையில் கரைக்கும்போது இதன் ஊளைகளைக் கேட்டிருக்கிறேன். ராத்திரிகளில் தூக்கமற்ற வேளைகளில் கேட்க முடிகிற சகலவிதமான நுட்பமான மெளன சப்தக்கூறுகளையும் இதன் ஊளை உடைத்தெறிந்து விடுகிறது. புண்களின் கனம் அந்த ஊளையில் ஊடுருவியிருக்குமோ என்னவோ. அப்போது இரவின் அலங்காரங்கள் எல்லாம் உதிர்ந்து காற்றின் சலசலப்பில் பறக்கும். காற்றற்ற ராத்திரிகளில் அலங்காரங்கள் உதிர்ந்து போட்டது போட்டபடி கிடப்பது மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்டிப்பாக இந்த ஊளை வயோதிகத்தால் நோயுற்றவர்களுக்குப் பெரிய நெருக்கடியை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை. ஊரில் வயோதிகப் படுக்கையில் இருப்பவர்களுக்கு பெரும்பிரச்சினைதான் இது வயோதிகத்தின் மனப் புண்ணுக்கு ஆளான இவர்களுக்கு இந்த ஊளை தரும் நெருக்கடியை எதிர்கொள்ளுவது நிச்சயமாக சாதாரணமாக இருக்காது. இந்த வயோதிகர்களின் தூக்கமின்மைக்கு அவர்கள் இது இல்லாவிட்டாலும் கூட ஏதேனும் காரணங்களைச் சொல்லக்கூடும். பூச்சிகளின் சத்தம் மகனின் படுக்கை அறையின் நுட்பமான ஒலி சருகு பறக்கும் சத்தம் எல்லாம் கூட அவர்களுக்கு இடையூறாய் இருக்கலாம். அதற்காக, சருகுகளைக் காற்றில் பறக்காமல் தடுப்பதற்கில்லை. ஏதேனும் ஊரும் பிராணிகள் ஓலைகளில் உண்டாக்கும் சத்தங்களை அல்லது யாரோ நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அதன் எல்லையில் அது கலைந்து போவதை என்று எல்லாவற்றையும் தவிர்ப்பதற்கில்லை. இருந்தாலும் இந்த நாயின் ஊளையின் வழியாய் அவர்களின் மனப்புண்களைத் துளைத்துச் செல்லும் மின்கம்பி போன்ற திரவம் தரும் நெருக்கடி சாதாரணமானதில்லை. இந்த வயோதிகங்களுக்கு இந்த நாய் பேரில் உள்ள வெறுப்புக்கு வேறுவிதமான என் யூகங்களுக்கு வரவே முடியாது. காரணங்களும்கூட இருக்கலாம்.

சுடலைமணிக்கு இந்த நாய்பேரில் மிகுந்த வெறுப்பு இருக்கிறது. சுடலைமணி இந்த நாயை காணும் சமயங்களில் கல்லெடுத்து விரட்டி விரட்டி எறிவது அவரது நாற்பத்தைந்து வயதுக்கு பொருந்துகிற மாதிரியாய் இருக்காது. ஊரில் இந்த நாயைக் கல்லால் அடிக்கிற வேறு பல நாற்பத்தைந்து வயதுக்காரர்கள் இருக்கிறார்கள் என்றாலும், சுடலைமணியின் கல்வீச்சில் தெரிகிற வெறுப்பை ஏனையவர்களின் கல்வீச்சில் காண முடிவதில்லை. சுடலைமணியின் காம்பவுண்டுக்குள் எப்போதேனும் இந்த நாயைக் காண முடிந்தால் சுடலைமணியின் மொத்த உயிரும் ஏதோ ஒரு ரீதியில் அதிர்கிறது. அதைக்கொன்றால் மட்டுமே அவர் நிம்மதியாக இருக்கமுடியும் என்கிற நிலைக்கு வந்துவிட்டார் என்ற‍ே தோன்றுகிறது. பலமுறை அவர் இந்த நாயைக் கொல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகள் கடைசி சமயத்தில் செல்லுபடி ஆகாமல் போனது அவருக்கு உள்ளூர நாய் பேரில் அவர் கொண்டுள்ள வெறுப்புபற்றி ஏதேனும் பேசலாம் என்று எனக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது என்றாலும், அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று எனக்குள் உள்ள தயக்கம் காரணமாகக் கேட்க முடியவில்லை. இப்படி என்னுடையது மாதிரியான தயக்கங்கள்தான் அவர் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள சாதகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தத் தயக்கம் லேசாய் பொட்டித் தெறிக்குமானால்கூட அவர் உள்ளூர நிலைகுலைந்து போகிற மாதிரியாய் ஆகிவிடக்கூடும். அதன்மூலம் அவர் அந்த நாய்‍ பேரில் கொண்டுள்ள வெறுப்புக்கு அவர் தயாரித்து வைத்திருக்கிற நியாயங்கள் எல்லாம் குப்புற சரிந்துவிடக்கூடும். என்றாலும் எனக்கும் அவருக்குமான உறவுக்கு இடைப்பட்ட எனக்கும் அவருக்குமான உறவுகள் இடைப்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டுள்ள இந்த தயக்கம் பொட்டிப் போவதால் இன்னும் அதிகமாய் ஏற்படுகிற பிளவு எந்த வகையிலும் என்கு சாதகமானதல்ல.வேலை எதுவும் இல்லாமல் ஊரில் தனியனாய் அறுத்துவிடப்பட்டுள்ள என்னைப் போன்ற ஒருத்தனுக்கு தன்மேல் புதிதாய் பாய்கிற வெறுப்பு மனநிலைக்கு ஆரோக்கிய குறைவையே ஏற்படுத்தும். இப்படி கணக்கு பார்க்கப் பார்க்க தயக்கத்தின் கூர்மை இறுகிக் கெண்டேதான் போகிறது. ஆக சுடலைமணியிடம் கேட்பதென்பது தற்பொழுதுள்ள நிலையில் எனக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 

சுடலைமணி சராசரிக்கும் சற்று அதிக உயரம் கொண்டவர். சத்தம் போட்டு பேசுகிற சுபாவம். அந்த அதிகப்படியான சத்தத்தில் உள்ள த்வனி தன் ஸ்தாபிதத்துக்கு எடுத்துக் கொள்கிற முயற்சியாய்த் தோன்றும். எந்த இடத்திலும் தன்னை ஸ்தாபித்துக் கெள்ளும் வலு சுடலைமணியின் சரீரத்துக்குள் கண்டிப்பாய் இருக்கும் என்று நம்புவது யாருக்கும் பெரும்பாலும் சிரமமாக இருக்காது. நிச்சயமாக ஏதோ வசியத்தை அந்த சரீரம் பெற்றிருப்பதை சுடலைமணியின் முகம் உடலின் மதமதப்பு எல்லாம் நிறுவிக் கொண்டேயிருக்கும். முகத்தின் அடியாழத்தில் லேசாய் மங்கிப் போய்த் தெரியும் நிழல் சுடலைமணியின் ஆரம்பகால வறுமையை லேசாய் நினைவுபடுத்தும்.முகத்தில் தன் ஆரம்பகால வறுமைக்கு சுடலைமணியின் சரீரம் தக்க வைத்திருக்கும் ஒரேயொரு தடயம் அதுதான் வைத்திருக்கும் ஒரேயொரு தடயம் அதுதான் என்றும்கூட சொல்லமுடியும். ஆனால் இதையெல்லாம் மீறி சுடலைமணியை உள்ளூர ஏதோ ஒருவித வினோத பயம் ஆட்கொண்டுள்ளது என்கிற மாதிரியான எண்ணம் சுடலைமணியின் பரபரப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்த பரபரப்பால் சுடலைமணி பல இடங்களில் தடுமாறுவதை உண்டுபண்ணும் மாயப் பரபரப்புக்கான காரணம் எது என்றும் தெரியவில்லை. பயம் திடீரென்று தாக்குகிற சமயங்களில் சுடலைமணியின் மொத்த சரீரம் காப்பாற்றி வருகிற ஆகிருதிகள் எல்லாம் இறங்கி சாரமற்று சுடலைமணி கொந்தளித்துப் போவார். அவரது கற்பனைகயின் வழியே வந்து பாயும் கொந்தளிப்பு சில சமயங்களில் எதிர்கொள்ள முடியாதபடி பொய்யின் வலு கூடிப்பெருத்திருக்கும். இப்படியான சுடலைமணியின் கற்பனைக் குதிரை சுடலைமணியின் மனைவி, குழந்தை மீதும்கூட பாய்ந்திருக்கிறது. கற்பனைக் குதிரையின் சாகஸத்திலும், அதன் நேர்த்தியிலும் சுடலைமணியின் மனைவி பலமடங்கு தளர்ந்து போவாள். தளர்ந்து போனபின் குதிரை ஜெயத்தை வெளிப்படையாக அறிவிக்கும். சுடலைமணி தன் ஆரம்பகாலத்தை மூடி மறைக்க ‍எடுத்துக்கொள்கிற முயற்சிகளும் அசாதாரணமானவை.இவற்றைக் கடந்தும் அவை வெளியே மிதக்க ஆரம்பிக்கும்போதுதான் சுடலைமணியின் கால்கள் நடுங்குகின்றன. பாதங்களைப் பூமியில் நிலைகொள்ள வைக்க முடியாமல் போகிறது. சுடலைமணிக்கு டவுணில் பல உயரதிகாரிகளோடு தொடர்பு உண்டு. அவர்களோடுள்ள உறவுக்கு சுடலைமணி கொடுக்கிற விலைகளும் அசாதாரணமானவை. சில அதிகாரிகளுக்குப் பெண்களை ஏற்பாடு செய்யும் தரகும் சுடலை மணிக்கு உண்டு என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தாலும் எனக்கு அது அதிர்ச்சியான அல்லது ஆச்சரியமான விஷயம் அல்ல. தன்னை உள்ளூர மறைத்துக்கொள்ள சுடலைமணி இப்படியெல்லாம் விலையுயர்ந்த சாயங்களைப் பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான சாயங்களின் வழியாகத்தான் சுடலைமணியின் கால்கள் பாவுகின்றன. உயர் அதிகாரிகளோடு இவர் கொண்டுள்ள இந்த தொடர்புக்கும் விசுவாசத்திற்கும் நேர் எதிர்மாறானவை அவர் ஊரில் கீழ்நிலையில் உள்ளவர்களோடு‍ கொண்டுள்ள தொடர்பு. அந்தத் தொடர்பில் அவர் கொண்டுள்ள வன்முறையின் அடர்த்தி மொத்தமும் தான் அந்த நாய்மேல் பாய்வதுபோல என் காட்சியில் படுகிறது. 

பூத்தங்கம் பற்றியும் இந்த இடத்தில் நான் ஏதேனும் சொல்ல முடியும். இந்த நாய் குட்டியாக இருந்தபோது அதன் பேரில் மிகுந்த செல்வம் காட்டியவள் பூத்தங்கம். அந்த நாய் மீது காட்டிய செல்லத்தின் மூலம் மன ஸ்பரிச உணர்வுக்கு ஆளான ஜனக்கூட்டத்தில் ஒருத்தி என்றும்கூடச் சொல்லலாம். எனக்கு அவள் அந்த குட்டி நாளை கையில் எடுத்து வைத்துக் கொஞ்சிக் ‍கொண்டிருக்கும் சில காட்சிகள் மனவெறுமைக் கூடுகிற சமயங்களில் ஞாபகத்துக்கு வரக்கூடியவையாகவும், அதன் இயற்கைக்கு எதிரான தன்மை மூலமாய் அந்த காட்சி உறைந்து எனக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்துவதையும் அந்த காலகட்டத்தில் கவனித்திருக்கிறேன். இப்போது அந்த காட்சி என் வெறுமையில் இணைகிற கணங்களில் மிகுந்த களைப்பை ஏற்படுத்திவிடுகிறது. பாதியுடல் அறுக்கப்பட்டு புண்ணாகிப்போன ஒரு தரிசுப் பாறையின் வெயில் தகிக்கும் சாய்ந்த பரப்பில், ஒரு குத்தாய் சில பூச்செடிகள் நிற்பதுபோல இருக்கலாம் அது. பூத்தங்கம் அந்த நாயைக் கொஞ்சுவது எனக்கு உயிர்ப்புக்கு எதிரானதுபோல இருந்தாலும் அது இப்போது முக்கியமானதல்ல. பூத்தங்கத்துக்கு இப்போது அந்த நாய் பேரில் ஏற்பட்டிருக்கும் சரிவுதான் முக்கியம். இப்படியேன் ஒரேயடியாக சரிவு நிகழ்கிறது என்பதில் எனக்குள் அதிர்ச்சி கலந்த புதிர் தேங்கி நிற்கிறது. பூத்தங்கம் அந்த நாயைப்பற்றி பெரும்பாலோரோடு பேசும்போதும் பராதிகள் சொல்கிறாள். ஒருவேளை இந்த நாய்பற்றிய பராதிகளைப் பிரச்சாரம் செய்யத்தான் எல்லோரிடமும் பேச்சு ஆரம்பிக்கிறாளோ என்னவோ. ஞானசெல்வம் வீட்டு நாய்பேரில் அவளுக்கு உள்ள ‍வெறுப்பு அதன் அடர்த்தி குறையாமல் ஞானசெல்வம் பேரிலும் மணி பேரிலும்கூட இருக்கிறது. ஞானசெல்வத்தை கூதறத் தேவடியாள் என்கற ‍பெயரில்தான் அடையாளப்படுத்துகிறாள். புதிதாக யாரெனும் அவளோடு பேசவேண்டி வந்தாலும் அவள் ஞானசெல்வத்தை அல்லது அந்த நாய் வீட்டுக்கார அம்மாளைத்தான் இப்படிக் கூப்பிடுகிறாள் என்பதைத் தெரிவிக்கும்படியான இணைப்புகள் அவள் பேச்சில் இருக்கும் மணி புற காரணங்களால் பிடிக்காமல் ரீதியான பெண்கள் எல்லோருக்கும் அல்லது பாலியல் ரீதியான பெண் தொட்டிகளுக்கும் (அவளுக்குப் பிடிக்காமல் போகிறவர்கள் எல்லோரும் அவளைப் பொறுத்த வரையில் இப்படித்தான்) மணிக்கும் தொடர்பு உண்டு என்பதும் அவள் பிரச்சாரத்தின் ஒரு பகுதி. பல பெண்கள் பூத்தங்கத்திடம் நடத்துகிற உரையாடல்களின் ரஸானுபவம் இதுதான் என்பது தனிப்பட்ட என் அனுமானம். அவர்களிடம் பெரும்பாலும் இவளது பிரச்சாரம் தோற்றுப்போய் இந்த ரஸானுபவம் மட்டுமே மிஞ்சுகிறது என்றும் படுகிறது எனக்கு. ஞானசெல்வம் வீட்டுக்கு பக்கமாகப் போகவேண்டி வருகிற சந்தர்ப்பங்களில் பூத்தங்கம் இந்த வீடு சம்பந்தமாக எதையோத் திட்டியபடியே நடந்து செல்கிறாள். எல்லாம் ஒரு விதத்தில் வினோதமாகவே இருக்கிறது. நான் பூத்தங்கத்துக்கும் இந்த நாய்க்கும் இந்த வீட்டுக்கும் என்று இணைப்புகளில் உருவாக்குகிற காரணங்கள் எல்லாம் யூகங்களாகச் சரிகின்றன. என் யூகங்களைத் தாண்டிய ரகசியங்கள் ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிற தெனக்கு. இப்படியான சிக்கல் மிகுந்த ரகசியங்களை, முடிச்சுகளை உற்பத்தி ‍‍செய்வதில் கடவுளுக்கு என்னதான் சந்தோசமோ சந்தோசமோ தெரியவில்லை. 

ஞானசெல்வத்தின் வீடு இப்போது ஒட்டுக்கூரையின் நடுமுதுகு ஒடிந்து கிடக்கிறது. கூரையின் பல பகுதிகளில் பணிகள் முறிந்து உள்ளேயிருக்கும் கரும் அடர்த்தி வெளியே தெரிகிறது. கூரையின் ஒருபகுதி 
ஓடுகள் பணிகள் பாழ்பட்டிருப்பது ஒரு கோணத்தில் அடுக்களைப் பகுதியை வெளியே தெரியப்படுத்துகிற விதமாய் இருக்கும். அதற்குள் ஏதோ மூச்சதைவுபோலத் தெரிவது என் மனோபாவத்தின் விசும்பாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தப் பகுதிவழியாய் குளுமையான இருட்டு உள்ளேயிருப்பது தெரிகிறது. பக்கத்தில் உள்ள சில மாமரங்களுக்கு தன்னிச்சையானப் போக்கு உருவாகி ஞானசெல்வம் வீட்டு வளாகத்துக்குள் காட்டின் இயல்புத் தன்மை கூடி வருகிறது. பக்கத்தில் கிடக்கும் பாழுங்கிணறு ஒரு காலத்தோடு நின்றுபோன புகைப்படம்போல் இருக்கும். காலத்தில் பின்தங்கிப் போயும்கூட அதோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வினோதத்துக்கு ஒரு தீங்கும் நேர்ந்துவிடவில்லை. இரண்டடி விட்டம் கொண்ட முப்பதடி ஆழக் கிணறு அல்லது குழி என்று அதைச் சொல்லலாம். சின்ன வயதில் எனக்குள் இந்த கிணற்றின் வினோதம் கவித்துவமாய் இருந்தது. என் வயதையொத்த பல சின்னப் பிள்ளைகளுக்கும்கூட இப்படி இருந்திருக்கலாம். அந்த கிணற்றின் இரண்டடி விட்டம் பூமியைப்‍ பொத்துக் கொண்டு இரண்டடி உயரத்துக்கு மேலே நிற்கும். அதனுள்ளே பார்ப்பது ஒரு ரகசியத்தைப் பார்ப்பது போலத்தான். அந்த கிணற்றின் ஆழமெல்லாம் குளிர்ந்த இருள் நிரம்பி, அடியில் கண்ணின் கருவிழி மட்டும் அசையும். இந்த வீட்டில் விசேஷங்கள் நடக்கும் சமயங்களில் இந்த கிணற்றைச்சுற்றி நான்கைந்து கமுகுமரங்கள் நிற்பது எனக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. இப்போது பார்வையில் அந்த கமுகுகள் இல்லை. அவை நின்ற இடங்களில் ஒரு வெறுமையே தென்படுகிறது. 

ஞானசெல்வம் வீட்டிற்கு, ரோட்டிற்குத் தெற்குப் பக்கமாய் சுடலைமணி வீட்டு முற்றம் தாண்டி பின்னும் நாலைந்து விளைகள் தாண்டிப்போக வேண்டும். போகிற வழிகளெல்லாமே தென்னை நிழல்கள் விழுந்திருக்கும். நிழல்களின் ஊடே லேஸ் ஸேஸாய் சூரியன் பயந்து உட்கார்ந்திருக்கும். பாதைக்கு ஒருபக்கத்தில் வேலியோரமாய் மாமரங்கள் சில இருந்தன. இப்போதும் இருக்கின்றன. அந்த மாமரங்கள் மறைக்கும் இடுக்குகள் வழியே துரைராஜ் பெரும்பாலான நேரங்களிலும் தெரியும். இந்த பகுதிகளிலெல்லாம் பல வினோதமான வினளயாட்டுகள் விளையாடியிருக்கிறோம். ஞானசெல்வம் வீட்டு வளாகம் அடர்ந்த குள்ளமான தென்னைகளின் சுகம் கொண்டது. 

இந்த வளாகத்துக்குள்தான் இப்போது பெரும்பாலான சமயங்களிலும் இந்த நாய் எங்கேனும் ஒளிந்திருக்கும். அது ஒளிந்துகொள்கிற மாதிரியாக இந்த வளாகமும் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இந்த நாய் குட்டியாக இருந்தபோது அதற்கு ஒரு நிமிடம்கூட மறைந்து கொள்ள இடம் இல்லாததுபோல எப்போதும் கண்ணில் படும். இப்போது அது கண்ணில் படுவதே அபூர்வம் என்றாகிவிட்டது. இதேபோல ஊரில் ஏறிபடுகிற சில தெருநாய்கள் உள்ளன. அவைகளை எப்போதும் பார்க்கவும் முடிகிறது. இதற்கு மட்டும்தான் ரகசிய ரகசியமான அறைகள் ஆக ஒழிந்துகொள்ள வசமாய் அது மாறி இருக்கிறது. இந்த நாயைப்போல அவை களைத்துப்போனதாகவும் தெரியவில்லை. இது ரொம்ப களைத்துப்போய் இருக்கிறது. முகத்தில் சாதகமற்ற இறுக்கம் உண்டாகியிருக்கிறது. மனிதர்களற்ற விளை நோக்கி ஓடித்திரியும் அதன் ஒவ்வொரு கணத்திலுமுள்ள சந்தேகமும் பயமும் மீண்டும் மீண்டும் மனிதர்களற்ற பகுதிகளை நோக்கிப் போகும்படியாய் செய்திருக்கிறது.ஜெவஹர் தவிர மற்றெல்லோரிடமும் உறவு அறுந்து போனது மட்டுமல்லாமல் அதிகப்படியான விரோதம் இந்த நாய்க்கு வளர்ந்திருக்கிறது என்றும் நினைக்கிறேன். அது மனிதர்களுக்கு பயந்து ஓடுவதற்கும் தாக்குவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டென்று எனக்குத் தோன்றவில்லை. அது மனிதர்களை விட்டு விலகி ஓடுவதே தாக்குவதற்கான முன்னேற்பாடு அல்லது தாக்குவதற்கு மாறான ஒரு ஏற்பாடு என்றே நான் நினைக்கிறேன். அது இனி தன்னை எறிந்தவர்களை, புண்படுத்தியவர்களை என்று பார்த்து தாக்குவதும் சாத்தியமில்லை. என்னையும் தாக்கலாம். என்னைக் கண்டு ஒடும் போதும் எனக்கு இப்படியான எண்ணமே ஏற்படுகிறது. இரவில் லேசான அசைவுகளையும் குரைத்துத் தாக்குகிறது என்றே நினைக்கிறேன். அதன் வயிற்றுக்குள்ளிருந்து எக்கி வெளிவரும் குரைப்பின் வழியாய் அதன் எதிரியின் அசைவுகளின் வலு தெரியும், எப்படியாயினும் கொல்வது எனக்கு நியாயமாகப்படவில்லை. அதனைக் கொல்வதன்மூலம் எட்டுகிற நிரந்தரம் பேரில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த நாயின் பாயத்தையும் அச்சத்தையும் போக்கும் வகையில் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுதவிர மாற்று வழிகளேதும் இல்லை என்றே எனக்குப்படுகிறது. பெரும்பாலோருக்கு அதைக் கொல்ல வேண்டும் என்கிறதில் இருக்கிற தீவிரம் எனக்குத் தருகிற அச்சத்தைக் காட்டிலும், இந்த நாய் உண்டாக்குகிற அச்சம், எனக்கு எதிர் கொள்ளும்படியானதாகவே இருக்கிறது.

அந்த நாய் நான்கைந்து விளைகள் தாண்டி எனக்கும் அதற்குமான இடைவெளியைத் துரிதமாக அதிகப்படுத்தி பின் என் பார்வையிலிருந்து விடுபட்டதை அறிந்தேன். அதன் துரிதத்தில் ஒட்டிக் கொண்டிருந்த தடுமாற்றம் தான் என் மனச்சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஏதேனும் ஒரு வாய்ப்பில் சமரசம் செய்து நட்பை அதோடு ஏற்படுத்தி அதற்கு முடிகிற பணிவிடைகள் செய்ய மனசில் ஏக்கம் விரிந்தது. அதில் மெய்யாக உள்ள தடைகளை யோசிக்க யோசிக்க அந்த ஏக்கம் அறுந்து என் எதிர்காலம் பற்றியதாக மாறி, எனக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தரைப் பார்த்து உடனடியாக ஏதேனும் பேசவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. அவரை அப்போது பார்ப்பதும் உடனடியாகப் பேசுவதும் சாத்தியமில்லை. எனக்கும் அவருக்குமிடையில் உள்ள ஒருமணி நேர இடைவெளிக்கு மத்தியில் என் உடல் இருக்கிறது. ஒருவித ஏக்கம் திரண்டு காமமாகி மீண்டும் வெறுமையில் கலந்து களைப்பு விழிப்பு நிலைக்கு வந்தது. மார்புக் கச்சைகளின் இறுக்கத்தில் வெளியே பீறிட்ட பால் இறுகி மீண்டும் ரத்தத்தில் கலந்து சுரம் இழந்ததுபோல.

ஜெவஹருக்கு இந்த நாயோடு இப்படியொரு சமரசம் சாத்தியப்பட்டிருக்கிறது. அல்லது இயல்பாகவே கூடி வந்திருக்கிறது. சென்னையிலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் இந்த நாயை பழைய நண்பனைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறான். எந்தத் தடையுமற்று அவன் அதோடு பேசிக்கொள்கிறான். அதன் புண்களுக்கு மருந்து போடுகிறான். இரவில் பத்து மணிக்குப்பிறகு பஞ்சாயத்து தண்ணி டாங்க் பக்கத்து மேட்டில் அந்த நாயோடு அவனைத் தெருவில் பார்த்திருக்கிறேன். அவன் வரும் காலங்களில் அந்நாயும் ஊளை போடுவதில்லை என்பது என் மனுமானம். அவன் அந்த நாயோடு பேசுவதையும்கூட அரைகுறையாகக் கேட்டிருக்கிறேன். அதை சுத்தமான தமிழ் என்று சொல்வதற்கில்லை. அவனை உரசிக்கொண்டு அது நிற்கும். உரசிக் கொள்வதில் அதற்கு ஒரு தைரியக் குறைவு அல்லது ஒரு தயக்கம் இருப்பது போலவும் இருக்கும். கூச்சம் என்றுகூட அதைச் சொல்லலாம். இந்த நாய்க்கு இப்படியான ஒரு உறவு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. ஜெவஹர் மேல் நான் கொண்டுள்ள மதிப்புக்கு அவனது இந்த நாய் உறவும் காரணம் என்பது அவனுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. ஜெவஹர் சென்னையில் ஒரு மோசமான உத்தியோகத்தில்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அவனது கஷ்டங்களை ஊற்றி நிரப்பியிருப்பது போலிருக்கிறது அவனது தோற்றம். ஆறு மாதத்துக்கொருமுறை அவன் ஊருக்கு வருவான். ஆனால் நிச்சயம் ஏதும் கிடையாது. அப்படி அவன் வருகிறபோது அவனிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதும் பரஸ்பரம் ஆத்மார்த்தமாய் சிரித்துக் கொள்வதும் எனக்கு அர்த்தம் கொண்டதாக இருக்கும்.அதிகம் பேசிக்கொள்ளாமலும் செளகரியக் குறைகளை விசாரித்தறிந்து கொள்ளாமலும் அதைத் தாண்டிப் புரிந்துக்கொள்ள அவனுக்கு என்னோடும் எனக்கு அவனோடும் முடிகிறது. எனக்கும் ஜெவஹருக்கும் பொதுவான அம்சங்களும் உண்டு. ஜவஹருக்கு மிகப்பெரிய எதிரி அவனது அண்ணன் குணசேகரன்தான். குணசேகரன் ஊரில் இருக்கும்போது ஜெவஹரும் ஊருக்கு வந்தால், வந்து ஒன்றிரண்டு நாட்களில் குணசேகரனுக்கும் ஜவஹருக்கும் இடையே உள்ள வெறுப்பு பொட்டித் தெறிக்கும். அதில் மிகவும் களைப்படைந்து சோர்ந்தும் போவான் இவன். இப்படியான நாளில் மிச்சப்பகுதியில் எங்கேனும் புறப்பட்டுப் போய்விடுவான். இவனது வெறுப்பு பொட்டித்தெறிக்கும் சமயங்களில் இவன் பயன்படுத்தும் வார்த்தைகளில் உண்டாகும் தடுமாற்றம் புதிய மொழியாக இருக்கும். அவனுக்கு என்ன செய்கிறான் என்பதும் பெரும்பாலும் அப்போது தெரிவதில்லை. ஒரு பெரிய கூட்டத்தைத் தனியாய் நின்று தாக்குகிறவனின் ஆவேசம் போலவும் தடுமாற்றம் போலவும் தோன்றும். ஜெவஹருக்கும் குணசேகரனுக்குமிடையில் இப்படியான வாக்குவாதங்கள் நடக்கும்போது, குணசேகரன் பாதுகாப்பு மிகுந்த இடத்திலிருந்து நிதானமாக எதிரியைத் தாக்குவதைப் போலவும், ‍ பாதுகாப்பாற்ற நிலையில் நின்று ஆவேசமாகத் தாக்குவதைப் போலவும் எளிதாகவே உணரமுடியும். குணசேகரனுக்கு அவனது நியாயங்களை வரிசையாக அடுக்கிச் சொல்ல முடிவதுபோல ஜெவஹருக்கு முடிவதில்லை. ஆவேசத்தால் நியாயங்களை உணர்வுகளாகக் கலைந்துப் போய்விடுவான். பெரும்பாலும் இதன் மூலமாக ஊரில் ஜெவஹர் பக்கம் விரைவாக சரிந்து வீழ்ச்சிக்கு வந்து விடுகிறது. இந்த வீழ்ச்சியோ ஜெயமோ கூட அவன் நோக்கமில்லை என்பதுபோல எங்கேனும் புறப்பட்டுப்போவான். அது ஒருவகையில் குணசேகரன் வெற்றிபெற வாய்ப்பாக இருந்த அத்தனை சாதகங்களையும் புறக்கணிப்பது போலத்தான் என்று எனக்குத் தோன்றும். குணசேகரன் ஜெயத்தை நோக்கமாக கொண்டு நகர்ந்து ஒரு கொடியைப் பறக்கவிட்டதும் அவன் ஜெவஹரின் சோர்வுக்கு எதிரான ஒரு விறைப்பைப் பெறுகிறான். அந்த கொடிமரத்தை வேரோடு சாய்க்கவேண்டும் என்கிற தீவிர ஆசை எனக்கேற்பட்டதும் ஜெவஹர் அப்படிப் புறப்பட்டுப் போவதால், நிஜமாக அந்த கொடி சாய்ந்து தரையில் சாக்கடை நீர் பாடிய வீழ்ந்து பரவுகிறது என்கிற ஒரு கற்பனை விரிப்பில் ஜெவஹரின் உதாசீனம் என்னை முடக்கும். ஆனால் ஜெவஹரின் உதாசீனம் குணசேகரனை ஏதேனும் ஒரு அளவிலேனும் உள்ளூரப் பாதித்திருக்குமா என்றும் தெரியமுடியாது. உள்ளூர லேசாக அது பாதிக்கிறது என்று கற்பனை செய்து கொள்வதுதான் எனக்குப் பாதுகாப்பாக உள்ளது. 

குணசேகரன் ஒரு காலம் வரைக்கும் அன்பையாவுக்கு விசுவாசமான பிள்ளை அவனது ஒழுக்கத்தையும், அன்பையாவுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதையும் பல தகப்பன்மார்கள் பல பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். அவன் பேரில் ஊரிலுள்ள பெண் பிள்ளைகளுக்கு ரகசிய காதலும், ரகசிய வெறுப்பும், வெளிப்படையான மதிப்பும் இருந்தது. பெண் பிள்ளைகளுக்கு ஜெவஹர் பேரில் இருந்த உறவு இதற்கு நேர் தலை கீழானது என்பதையும் பின்னாட்களில் நான் உணர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு ஜெவஹர் பேரில் ரகசியமான மதிப்பும், வெளிப்படையான வெறுப்பும், வெளிப்படையான காதலும் இருந்தது என்று சொல்ல வேண்டும். அன்பையா தன் கனவுகளையெல்லாம் குணசேகரனுக்கு ஊற்றி தன் உழைப்பால் தேய்ந்து போகப்போக, குணசேகரன் அவரின் உழைப்பின் வேகத்துக்கு பக்கம்வரை செல்கிற அளவு ஈடுகொடுத்தான். அன்பையாவின் கனவின் 95 சதவீதமாய் குணசேகரன் விரிந்து நின்றபோது ஜெவஹர் தொடர்ந்து சிவப்பு மதிப்பெண்களையே பெற்றுக் கொண்டிருந்ததால், அன்பையாவால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? ஜெவஹர் பீடி குடித்ததைக் கண்டு பிடித்துத் தண்டனை வழங்கினார். அவன் சினிமாவுக்குப் போவதைக் கண்டுபிடித்தார். குணசேகரனின் நண்பர்கள் பரிசுத்த ஆவிகளாகவும், ஜெவஹரின் நண்பர்கள் சாத்தான் தோற்றமும் கொள்ள ஆரம்பித்தார்கள். ஏதோ காரணங்களால் ஜெவஹர் படிப்பையும் இடையிலேயே நிறுத்திவிட்டு அன்பையாவோடு வேலைக்குப் போக வேண்டிவந்தது. அன்பையாவுக்கு வேலைக்குப் போக வேண்டி வந்தது. அன்பையாவுக்கு தன் மேல் உள்ள சுயவெறுப்பெல்லாம் மொத்தமாய் ஜெவஹர் மேல் சரிய இது முக்கியமான காரணமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு மாறாய் தன் கனவை தன் உழைப்பின் மூலமாய் செய்து முடித்த உற்சாகம் குணசேகரன் வழியாய் திரண்டு வழிந்தது. குணசேகரனுக்கு மிகப் பெரிய இடத்திலிருந்து சகல செளபாக்கியங்களோடும் ஒரு வேலைபார்க்கிற பெண் செளபாக்கியவதியானபோது அவர் மனம் எப்படி யிருந்திருக்குமென்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை. அன்பையா தன் வாழ்வின் உச்சத்தில் சிறகடித்த நாட்களாகத்தான் அவை இருக்க வேண்டும். அந்த செளபாக்கிய நிகழ்ச்சியிலும்கூட தன் சுய அருவருப்பை ‍ஜெவஹர் வழியாய் அவர் அடைந்து இடையிடையே லேசான வருத்தத்துக்கு ஆளாகி இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சிலும்கூட ‍ஜெவஹரிடம் அவருக்குண்டான மனக்கசப்பு வெளிப்படையாகப் பல இடங்களில் தெரிந்து கொண்டேயிருந்தது. பின்னாட்களில் குணசேகரன் இவரைக் கவனிக்காமல் விட்டுவிட்ட போதும், மிகுந்த அவமானங்களுக்கு ஆளாக்கிய போதும்தான்  தன் கனவுகளுக்குள் தனக்குத் தெரியாமல் ஒளிந்திருந்த பூதத்தை தாமதமாக அவர் கண்டு பிடித்தார் என்பது வேறு விஷயம். அப்போது காலத்தோடு சேர்ந்து இந்த ஏமாற்றமும் உடலைத் தீவிரமாகத் தின்னத் தொடங்கியிருந்தது. இப்போது ஜவஹர் பேரில் அவருக்கு ரகசியமான பரிவு உண்டாயிருக்கிறது என்றாலும் பழக்கம் காரணமாக அந்தப்பிரிவை ஜெவஹர் பேரில் வெளிப்படுத்திக் கொள்ளமுடியாமல் அவர் சிக்கித் தவிப்பதை நான் கவனித்திருக்கிறேன்.‍ெஜவஹருக்கும் அவரிடம் கிலாய்ப்பெல்லாம் தணிந்து போயிருந்தாலும்கூட பழைய காலங்களைக் கடந்து அவனால் முழுக்கப் புதுப்பிக்க முடியாமல் போனது. இப்படியெல்லாமான ஞாபகங்களும் ஒரு விதமான அலுப்பை உண்டு பண்ணுகின்றன. அந்த அலுப்பில் தன்னிலை சார்ந்த இரக்கமும். அலுப்பூட்டும் இன்பமும் இருக்கிறதை உணர்கிறேன். என்றாலும் இவைதான் என் களைப்புக்கான காரணம் என்றும் சொல்வதற்கில்லை. ஒருவித நிச்சயமற்ற தன்மை அலுப்பாகி களைப்பில் இழுத்துக் கொண்டு விடுவதற்கு இடைப்பட்ட மனநிலைதான் வலியை உண்டுபண்ணுகிறது. இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தை அந்த ரத்தில் நடந்து கடப்பது போன்ற துக்கம் அது. அதன் நகர்தலில் துவண்டு படுக்கையில் விழும்போது உறுப்புகளின் கனத்தைக் கடக்க முயன்று வெறுமனே கிடப்பேன். சில சமயங்களில் மின்விசிறி நோக்கிப் பார்வை செலுத்துவது கஷ்டமாக இருக்கும். அப்படியிருக்கும் சமயங்களில் சன்னலையோ வேறு ஏதேனுமொன்றையோகூடப் பார்க்கக்கூடாமல் போகும். மத்தியான வேளையில் தூங்குவேன். அதைத் தூக்கம் என்று சொல்வதற்கில்லை. தூக்கத்தின் பலவீனமான மந்தநிலை அது. சொப்பனங்களை உருவாக்கும் சக்தி இந்த மந்த நிலைக்கு அதிகம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனது சொப்பனங்கள் உண்டாக்குகிற வலிக்கும் நிஜத்தில் உண்டாகும் வலிக்கும் இடைப்பட்ட தூரம் மிகவும் சின்னதாக இருக்கிறது. சில சமயங்களில் சொப்பனங்கள் உண்டாக்கும் இன்பங்களும் துன்பங்களும் நிஜத்தைப் பொய்யாக்கி விடுகிறது. அது அலாதியான ஒரு ஜெயம் என்பதுபோல மனதில் கவிகிறது என்றாலும் இந்தக் கவிதல் எனக்கு விருப்பமான ஒன்றல்ல. அதிலிருந்து மீள வேண்டும். மனதின் அந்தரங்கமான ஓர் உறுப்பை இது பலவந்தமாக உடைத்தெறிவதில் ஏற்படுகிற துக்கத்தில் பீறி அழ வேண்டும்போல இருக்கிறது. 
இதை எழுதத் தொடங்கிய நாளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு என் நெருங்கின உறவினர் ஒருவரது வீட்டை அந்த வீட்டில் யாருமில்லாத சமயத்தில் பக்கத்து ஊர்காரர்கள் கலவரத்தோடு அடித்து நொறுக்கினார்கள். வெயிலின் ராட்சசத்தனம் அன்று சுரம் இறங்கி தென்னைகள் லெகுவாகி இருந்தன. தென்னந்தோப்புகளின் அடர்த்தி குன்றிய பகுதிகள் மஞ்சளாகத் தெரிந்தன. காற்றின் சத்தம் இடையிடையே மழைவரும் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நான் அவர்கள் இடித்து நொறுக்குவதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்தக் காட்சியில் மிதமான போதையை மனம் உணர்ந்தது. மனச்சங்கடமும் ‍போதையுமாய் மனம் அலைக்கழியத் தொடங்கியது. மங்கலான ஒளியும் தென்னைகளும் அன்று போதைக்கும் சங்கடத்துக்கும் உறுதுணையாய் இருந்தன. அவர்கள் இடிப்பதை நின்ற இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஓட்டு வீடு. ஓடுகள் சரிந்து விழும்போது உண்டான ஒலி பயங்கர அலறலாய் இருந்தது. சுவர்கள் மறிக்கப்பட்டன. முயல்குட்டிகளாக விழுந்து மறிந்தன மண் சுவர்கள். ஓடுகளை இழந்த கூரைப்பகுதி நார் நாராய் தெரிந்தது. பின்பு ஓலத்தோடு எழுந்த ஆவேச வெறியில் கூரையின் நார்பாகங்கள் ஒடிந்து எறியப்பட்டன. அப்போது எழுந்த ஓலமும் இடித்தவர்களின் ஊளைகளும் கோஷங்களும் அதிலிருந்த உத்வேகமும் திருவிழாக்கடைகளில் தெரிகிற உற்சாகம்போல இருந்தது. ஒருமணி ரேத்திற்குள் என்று நினைக்கிறேன். அவர்கள் வெறுமையை அடைந்தபோது தாறுமாறாய் கிழிக்கப்பட்ட சேலையாகியிருந்தது வீடு. அதன்பிறகும் என்னுடைய போதை தணியாமல் நான் நின்று கொண்டிருந்தேன். அந்தக் காட்சியின் போதை சிலமணி நேரங்களாய் மனதில் அப்படியே இருந்தது. அதில் எனக்கிருந்த போதை எனக்கு மிகுந்த வெறுப்பைத் தந்தது. திரும்பி இரண்டு சிகரெட்களோடு சில விளைகள் தாண்டிப் போனபோது விளைகள் காடாய்க் கிடந்தன. சிலமணி நேரங்கள் ஆகியும் போதை தணியாமலிருப்பதை ஏதேச்சையாய்க் கவனித்தேன். சில மணிநேரங்களாய் அங்கேயே இருந்திருக்கிறேன் என்பது பிரக்‍ஞையில் புதிதான ஒன்றை ஏற்படுத்தியது. சுற்றிச்சுற்றி மரங்களின் தோற்றமும், மந்தமான வெளிச்சமும் போதையை உணர்வுப்படுத்திக் கொண்டேயிருந்தன. சில இடைவெளி கலந்த தென்னைகளின் மஞ்சளான தோற்றம் ஒருவிதமான காமத்தை அன்று ஏற்படுத்திய அளவில் அதற்கு முன்பு ஏற்படுத்தியதில்லை. என் தனிமையை உணர முடியாதபடியான கோலத்தை அவை அடைந்திருந்தன. நான்கு பக்கமுமாக பிரக்ஞை பூர்வமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் போதையை அவ‍ை உண்டுகளித்து ஜீரணித்துக் கொண்டிருந்தன. மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான தென்னைகளின் ஊடே ஒன்றிரண்டு மாமரங்களின் அடர்ந்த சருகுகள் நிழலற்ற பூமியில் அன்று நிரம்பியிருந்தன. என் போதையும் சங்கடமும் சமநிலைக்கு வந்தபோதுதான் நான் அவ்விடத்திலிருந்து எழுந்திருந்தேன் என்று நினைக்கிறேன். காட்டைவிட்டு எழுந்து வரும்போது மீண்டும் போதை அப்படியே நின்றிருப்பதுபோல இருந்தது. களைப்பாகவும் இருந்தது.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"