நடனத்திற்குப் பிறகு
டால்ஸ்டாய் ஒரு திருட்டில் சம்பந்தப்பட்டு என்னிடம் வந்து சேர்ந்தவர்தாம் ...
இதுபற்றி ஒருமுறை பத்தி எழுத்தொன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.அவர் புகழும் பெருமையும் தெரியாத காலம் . எட்டாவதோ அல்லது ஒன்பதோ படிக்கும் போது.கனமான புத்தகங்களை திருடவேண்டும் என்கிற கொள்கைப்பற்றில் இருந்த காலம்.
பள்ளிக்கு வந்து சேரும் புத்தகச்சந்தையிலிருந்து டால்ஸ்டாய் அகப்பட்டுக் கொண்டார்.அவர் அவர்தான் என்பது கூட அப்போது தெரியாது.
லேவ்ஸ் தல்ஸ் தோயின் " சிறுகதைகளும் குறுநாவல்களும் " மாஸ்கோ பதிப்பு.மாஸ்கோ பதிப்பில் உச்சரிப்பு அப்படித்தான் இருக்கும்.இதனால்தானோ என்னவோ சு,ரா மாஸ்கோ புத்தகங்களைப் பார்க்கும் போது கால்பந்து விளையாட தோன்றுகிறது என கூறியிருப்பதாக நினைவு.மாஸ்கோ புத்தகங்களின் வாசனையே சரியில்லை என்பது போல ஏதோ சொல்லியிருப்பார்.
ஒரு நூல் வாசகனைச் சென்றடைவதும் ,வாசகன் ஒரு நூலைச் சென்றடைவதும் விசித்திரமான கதவுகளின் மூலமாகத்தான் . அது பாடசாலைகளிலோ,பயிற்சிகளிலோ அகப்படுவதில்லை .உங்கள் அந்தராத்மா முக்கியம் கருதும் நூல்களைப் பற்றி மட்டும்தான் சொல்கிறேன்.
திருட்டில் வந்து என்னிடம் மாட்டிக் கொண்டதாலோ என்னவோ பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அமைதி காக்கவேண்டியிருந்தது.இரண்டு ஆயுள் தண்டனைக் காலம்.அவரை அவர் இருக்கும் வரையில் எனக்கு அடையாளம் தெரியவில்லை.புத்தம் புதிதாக எனது அலமாரியிலேயே இருந்தார்.நல்ல பண்பாளர்.சிறு சிணுங்கல் கூட செய்ததில்லை.
அந்த நூல் எவ்வளவு மகத்தானது என்பதை உணரும் காலத்தில் அவர் விடை பெற்றுச் சென்றுவிட்டார்.அலமாரியில் காணவில்லை.எனக்கு இன்றுவரையில் அந்த நூலை என்னிடமிருந்து கடத்திச் சென்றவர்கள் யாராயிருக்கும் என்கிற சந்தேகம் அப்போது என்னிடம் நட்பாயிருந்தவர்கள் அனைவர் பெயரிலும் உண்டு. அந்த சந்தேகம் தீரவில்லை இருக்கிறது.திரும்பி வந்து விடமாட்டாராவென ? அவருடைய "
ஐயோ !
நடனத்திற்குப் பிறகு "கதை எவ்வளவு பெரிய மகோன்னதம் ஐயோ !
Comments
Post a Comment