குறுங்கதை - கியூபின் சேம்

குறுங்கதை
கியூபின் சேம்
லக்ஷ்மி மணிவண்ணன்
கியூபின் சேம் ரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் .அவன் ஹெப்ரான் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறான் . முதலில் அவனை அழைத்துக்கொண்டு அவனது பெற்றோர் கிழப்பாதிரி ஒருவரை சென்று பார்த்தனர் . கிழப் பாதிரிக்குள் கிறிஸ்து பலமாக அலைக்கழிந்த வண்ணமிருந்தார் .அவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் .கிழப்பாதிரி தன்னுடனேயே கிறிஸ்த்துவை எப்போதும் பராமரிக்க வேண்டுமென விரும்புபவரும்கூட.கிழப்பாதிரி மதுக்குவளையைத் தொடும்போது கிறிஸ்து தள்ளாடுவார்.பொதுவாகவே தற்காலத்தில் தள்ளாடுகிற கிறிஸ்துவையே பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் .தள்ளாடும் கிறிஸ்துவிடம் கருணை சற்று அதிகம் என்பதும் உண்மை .கிழப்பாதிரி அவ்வாறாக கருணை மிகுந்திருந்த ஒரு சமயத்திலேயே கியூபின் சேம் கிறிஸ்துவின் முன்பாக நிறுத்தப்பட்டான்.கிறிஸ்து அப்போது தள்ளாடிய வண்ணம்
"உன் பெயரென்ன குழந்தை ?"
என்று கியூபின் சேமிடம் கேட்டார் .அதற்கு கியூபின் சேம் எந்த பதிலையும் தரவில்லை .அப்போது அவனது பெற்றோர் கிறிஸ்துவின் முன்பாகப் பதற்றமுற்றனர் .சில விஷயங்களைச் சொல்லத்தலைப் பட்டனர் .ஆனால் கிழப்பாதிரி அவர்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் கியூபின் சேமிடம்
"உன் பெயரென்ன குழந்தை ?"
என்று கேட்டார்
"கியூபின் சேம்"
என்று பதில் சொன்னான் அவன் .
"நல்லது .
நீ என்ன படிக்கிறாய் ?"
என்று அடுத்த கேள்விக்குள் புகுந்த கிழப்பாதிரியிடம் கவனமற்ற நிலையில்
"இரண்டாம் வகுப்பு
ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி "
என்று சுரத்தின்றி பதில் கூறினான் சேம் .தள்ளாடிய வண்ணம் கிறிஸ்து பெற்றோர்களை நோக்கி
"இப்போது பறவையைப் போன்றிருக்கிறான் குழந்தை !"
என்று கூறியபோது பெற்றோர் மேலும் பதற்றத்துக்கு உள்ளாயினர் .
"பாதர்! எங்கள் குழந்தைக்கு என்னவோ ஆகிவிட்டது .கர்த்தர்தான் அவனைக் காப்பாற்றவேண்டும் .நீங்கள் அவனுக்காக கர்த்தரிடம் பிரார்த்திக்க வேண்டும் .அவனுடைய வகுப்பு ஆசிரியர்கள் அவனைப் பற்றி குறை கூறுகிறார்கள் .தங்கள் மகன் பிற குழந்தைகளைப்போல இல்லை .அவனுக்கு பாடம் சாதிப்பதில் ஆசிரியர்கள் தோல்வியடைந்து வருகிறார்கள் .அது பற்றி அவர்கள் கவலையும் தெரிவிக்கிறார்கள் .குழந்தையின் எதிர்காலம் குறித்து அச்சப்படுகிறோம்"
என்று தள்ளாடிய வண்ணமிருந்த கிழப்பாதிரியிடம் கவலை தெரிவித்தனர் .
"நீங்கள் அதிகப்படியாக கவலைப்படுகிறீர்கள் .பிற குழந்தைகளைப்போலவே அவனும் காணப்படுகிறான்"
என்ற கிழப்பாதிரியை அப்போது குறுக்கிட்ட கிறிஸ்து...
" தள்ளாடியநிலையில் எதையும் அவசரப்படாதே ! ஒருவேளை சேமின் பெற்றோர் கவலை கொள்வது போன்றே சாத்தான் குடி புகுந்திருக்கக் கூடும்.!"
என எச்சரித்தார் .திடுகிடலுக்கு ஆளான கிழப்பாதிரி ...
"சரி இருக்கட்டும் ,கியூபின் சேம் குறித்த உங்கள் கவலை என்ன ?"
என்று பெற்றோரைக் கேட்டார் .
"பாதர் ! அவனுக்கு ஒன்றாம் எண் [ 1 ] நினைவில் பதிய மறுக்கிறது .அதனால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன .குறிப்பாக ஒன்றாம் வாய்ப்பாடுகூட தெரியாது .பிற எண்களை எல்லாம் சொல்லிவிடுகிறான் .[ 1 ] ஒன்றாம் எண்தான் பிரச்சனைக்குரிய எண்ணாக இருக்கிறது .இது எவ்வளவு விபரீத விளைவுகளை அவனுடைய எதிர்கால வாழ்வில் ஏற்படுத்திவிடும் ?
எண்ணிப்பாருங்கள் பாதர் !
நீங்கள்தான் கருணை செய்யவேண்டும் .கர்த்தரைத் தவிர மாற்றுப் பாதைகள் எதையுமே நங்கள் அறிய மாட்டோம் "
எனக் கிழப் பாதிரியிடம் பெற்றோர் முறையிட்டபோது கிறிஸ்து தனக்குள்ளாகவே ஒருமுறை சிரித்து மகிழ்ந்தார் .அப்போது நிதானித்த கிழப் பாதிரி சற்று சிந்தனையை செலுத்தியவாறு ...
"குழந்தை எண்களைக் கற்பனை முலமாக எதிர்கொள்ள முயற்சிக்கிறான் .இது சாத்தானுடைய பிரதானமான பண்பு நலன்களில் ஒன்று.
பிரச்சனையை எதிர் கொள்வதற்கு இரண்டு வழிமுறைகளை ஒரே சமயத்தில் நீங்கள் பின்பற்ற முன்வரவேண்டும் .
முதலாவதாக ,சாத்தானுக்கான வேத வாக்கியங்களை நீங்கள் தினம்தோறும் குழந்தைக்குப் போதித்து வரவேண்டும் .
இரண்டாவதாக ,ஒரு குழந்தை மனநல மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும் ."
என்று பெற்றோரிடம் கிழப்பாதிரி கூறினார் .அப்போது அவரிடம் நிலவிய தள்ளாட்டம் குறைந்திருந்தது .
"சாத்தானுக்குரிய வேத வாக்கியங்கள் எங்களுக்குத் தெரியாது பாதர் !"
என்ற பெற்றோரைத் தீர்க்கமாக கிழப்பாதிரி பார்த்துவிட்டு ...
"தினம்தோறும் வேத வாக்கியங்களைப் பழகுங்கள் .அதிலிருந்து சாத்தான் தனக்குரிய வாக்கியங்களைத் தேர்வு செய்து கொள்வார் .அவருடைய தேர்வை நிச்சயிக்க முடியாது என்பதை மட்டும் தற்போது நீங்கள் அறிந்து வைத்திருந்தால் போதுமானது ."
என்றார் .
பின்பு  கியூபின் சேமைப் பார்த்து கிழப்பாதிரி ...
"அன்பு நிறைந்த உனது பெற்றோர் கூறுவதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் குழந்தை ?"
என்று கேட்டதற்கு சேம் பதில் ஏதும் சொல்லவில்லை .தள்ளாட்டம் குறைந்து எரிச்சலுற்ற கிழப்பாதிரி சேமை உலுக்கியபோது ...
"பாதர் ! உங்கள் அறைக்குள் உள்ள நீலம் குறைந்த வானத்தில் வெண்ணிறக் கொக்குகள் பறந்து செல்கின்றன பாருங்கள் "
என்றான்.
மறுநாள் காலை வழக்கம்போல விடியவில்லை .கியூபின் சேம் அறிய இயலாத [ 1 ]ஒன்றாம் எண்ணைச் சுமந்தபடி பெற்றோர் காலைவேளை தொலைகாட்சிகளில் துருதுருத்தனர் .அப்பா தேநீர் அருந்தும் போது ...
" இதனைத் தாமதப்படுத்தகூடாது '
நாம் இன்றைய பணிகளைக் கைவிட்டுவிட்டு குழந்தை மன நனநலக் காப்பகத்திற்கு அழைத்துச் சென்று விடுவோம் .
என்று அவசரமானார் .அம்மா ஒத்துக்கொண்டாள்.
ஒருவார காலத்தில் சிகிழ்ச்சை விளைவுகள் பெற்றோர் நினைத்ததற்கு எதிர்மறையானவை .
[ 1 ]ஒன்று என்ற எண் அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது .
துரதிர்த்டவசமாக பிற எண்கள் [ 2,3,4,5,6,7,8,9,0 ] இருந்த இடங்களை எல்லாம் கதைகள் நிரப்பிவிட்டன .
அலறி அடித்துக் கொண்டு மீண்டும் கிழப்பாதிரியிடம் கியூபின் சேமை அழைத்துச்சென்று முறை இட்டனர் .
தள்ளாட்டமின்றி கருணைக் குறையுடன் காணப்பட்ட கிழப்பாதிரி ...
"வேத பாடத்தையும்,மருத்துவத்தையும் ஒரே திசையில் சீராக மேற்கொள்ளுமாறுதானே நான் உங்களை உபதேசித்தேன் .முட்டாள்களே ?"
என்று திட்டினார் .
பின்பு கியூபின் சேமைத் திரும்பி ...
"எப்படி இருக்கிறாய் குழந்தை ?"
எனக் கேட்டார் .
"நன்றாக இருக்கிறேன் "
என்றான் .
"வேத பாடங்களைப் பயிலும் ஆர்வம் உனக்குள்ளிருக்கிறதா குழந்தை ?"
எனக் கேட்ட கிழப்பாதிரியைத் திரும்பி கேள்வியைக் கவனமற்று ...
"கடவுள் இப்போது என்னோடு நேரடியாகப் பேசிக் கொண்டிருக்கிறார் .தயவு செய்து குறுக்கிடாதீர்கள் ..."
என்றான் கியூபின் சேம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"