தொல்.திருமாவளவன் + பொன்.ராதா கிருஷ்ணன்

தொல்.திருமாவளவன் + பொன்.ராதா கிருஷ்ணன்

தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில் எனக்கு ஆர்வம்முட்டுகிற விஷயமாகவும்   , புத்திசாலித்தனமாகவும் தெரிந்த ஒன்று என்று தொல்.திருமாவளவன் ,பொன்.ராதா கிருஷ்ணன் சந்திப்பைச் சொல்வேன்.அது வெறுமனே ஸம்ப்ரதாயமானதொரு  சந்திப்பாகக் கூட இருக்கலாம்.ஆனால் முக்கியத்துவம் கொண்டது. இன்று பா.ஜ.க.இடைநிலை சாதிகளின் அரசியல் அதிகாரத்தை கொண்ட ஒரு கட்சியென்பது உண்மைதான்.ஆனால் அது வருங்காலங்களில் தலித்துகளின் அரசியல்  அதிகாரம் நோக்கி சாயும் தன்மை கொண்டது என்பதில் சந்தேகமேயில்லை.இதனை ஒரு நல்ல நிலையென்றோ அல்லது கெட்ட நிலையென்றோ வகைப்படுத்துவது எனது எண்ணமில்லை.அப்படி வகைப்படுத்துவது அரசியல் ஸ்லீப்பர் செல்களின் வேலை.நிரந்தர ஒரு  கருத்தாளர்களின் நோய் அது.இந்தியாவைப் பொறுத்தவரையில் அடுத்த இருபது வருடங்களுக்குள் தலித்துகளின் அரசியல் அதிகாரம் வெகுசன அரசியல்  அதிகாரமாக மாறியாக வேண்டும்.அதற்கு காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் அனுசரணையானது பா.ஜ.க மட்டும்தான்.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் நிரந்தர கருத்தாக்கங்களையும்,நிரந்தர தரப்புகளையும் கொண்டவையே மிகவும் ஆபத்தானவை.பிற்போக்கானவை. அவை தங்களுக்குள் கருத்துக்களின் பின்னணியில் தங்கள் சுயரூபத்தை ஒளித்துக் கொள்ள, மறைத்து வேடமிட வல்லவை.பா.ஜ.க வைப் பொறுத்தவரையில் அது வெகுஜன மன ஓட்டத்திற்குத் தக்க அரசியல் அதிகாரத்தை மாற்றிக் கொள்ளும்தன்மை கொண்ட கட்சி.அதற்கு நிரந்தரமான சார்பு நிலைகள் கிடையாது.மேல்சாதிகளிடன் காலங்காலமாக பதுங்கியிருந்த அரசியல் அதிகாரத்தை அது கைவிட்டு விட்டு அது இன்று  இடைநிலை சாதிகளின் அரசியல் அதிகாரத்தை தன்வசப் படுத்தியிருக்கிறது.இதுவும் நிரந்தரமில்லை.அடுத்து அது தலித்துகளின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் இடத்திற்கு நகர்ந்தாக வேண்டும்.காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட்கள்  ஆகியோர் இன்னும்  மேல்சாதிகளின் அதிகாரத்தையே தங்களிடமிருந்து கழற்றிக் கொள்ள இயலாத வண்ணம் நிரந்தர கருத்தாக்கங்களில் திணறிக் கொண்டிருப்பவர்கள்.மக்கள் அதிகாரத்தின் மீது மட்டுமே  சாய்வு கொண்டு தனது அரசியல் உறுதியை ஈட்டவேண்டும் என்கிற ஓர்மை பா.ஜ.கவுக்கு உண்டு.இந்திய அரசியல் களம் யார் விரும்பினாலும் இல்லையென்றாலும்  தலித்துகளின் அரசியல் அதிகாரத்தை வெகுஜனப்படுத்துவதிலேயே இனியுள்ள  காலம் அடங்கியிருக்கிறது.பா.ஜ.கவில் இடைநிலை சாதிகளின் அதிகாரம் விரைவில் வற்றி ,அது தலித்துகளின் அரசியல் அதிகாரமாக மாறுகிற சாத்தியங்களைக் கொண்டது.தமிழ்நாட்டில் நிரந்தர சாதி தரப்பை உள்ளில் கொண்டு பல்வேறு கொள்கை வேடமிடும் பா.ம.க போன்ற எதிர்மறை அரசியல் சக்திகளை கையாள விடுதலைச் சிறுத்தைகளுக்கு உதவக்  கூடியதும் பா.ஜ.கவோடு அது கொள்ளும் உறவில் மட்டுமே  சாத்தியமாகும்.

இப்போது ஒரு கேள்வியெழலாம்.பா.ம.க போலவே பா.ஜ.கவும் தற்போது  இடைநிலை அரசியல் அதிகாரம் கொண்ட கட்சிதானே என்று ?.பா.ஜ.கவின் சார்புநிலை ஒருபோதும் நிரந்தரமான மக்கள் அதிகாரத்தின் சார்பு நிலை கொண்டதல்ல என்பதை விளங்கி கொள்ள இயன்றோருக்கு இந்த கேள்வியின் பதிலை உணர முடியும்.   பா.ம.க எப்போதுமே இடைநிலை சாதிகளின் அதிகாரத்தை   மட்டுமே இலக்காகக்  கொண்டது ;அது வாய்ப்பேச்சில் எவ்வளவு ஸ்லீப்பர் செல்ஸ் கொள்கைகளைக் கூவினாலும் கூட.பா.ஜ.கவுக்கு அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு தலித்துகளின் அரசியல் அதிகாரத்தை ஏற்றெடுக்காமல் பிற வழிகள் எதுமே இந்தியாவில் கிடையாது.தமிழ்நாட்டில் அது மேல்சாதிகளிடம் இருந்து இடம்பெயர்ந்து இடைநிலை சாதிகள் வசம் வந்திருப்பதை போன்றே அடுத்து அடுத்து அது தலித்துகளின் வசம் வரும்.வந்தாக வேண்டும். தலித்துகளின் அரசியல் அதிகாரம் வெகுஜனமாவதை ஏற்காதவர்கள் மட்டுமே ஒதுங்கியிருந்து வெற்றுக் கருத்தாக்கங்களை பேசிக் கொண்டிருக்க முடியும்.இந்தியாவின் பிரதம மந்திரியாக ஒரு தலித் தலைமை அரசியல் அதிகாரத்தை வெல்வது பா.ஜ.க மூலமாக நிகழ்வதே சிறப்பானது.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு ஒரேயொரு எதிரி உண்டெனில் அது ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான்.அ.தி.மு.கவும் கூட பா.ஜ.கவிற்கு எதிரியில்லை.தனியொருவராக ஜெயலலிதா என்கிற ஒரு தலைவரின்   இருப்பு மட்டுமே அவர்களுக்கு இடையூறு.பிறர் எவருமே பா.ஜ.கவுக்கு எதிரிகள் அல்லர். எதிரிகள் போன்று பாவனை செய்பவர்கள். பா  .ஜ.கவோடு கழிந்த பத்தாண்டுகளில் தெருவில் தொடங்கி அமைப்பின் அனைத்து தளங்களிலும்  உள்ளூர மோதிக் கொண்டிருப்பவரும் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே.பிறர் அனைவருமே வெற்று வாய்ச் சவடால்கள்தாம் .

அண்மையில் பால பிரஜாபதி அடிகளாரை சாமித்தோப்பில் சந்தித்துப் பேசிக்கொண்ட போது ; திருமாவளவன் ஒருவர் மட்டுமே வெகுஜன அரசியலில் புதிய தலைமைகளில் நம்பிக்கையூட்டுபவராக இருக்கிறார்.ஆனால் பொதுத் தலைவராக மாறுவதில் அவருக்கு  சில இடர்பாடுகள் உள்ளன என்றார்.பா.ம.க போன்ற கட்சிகளுடனும் அவருக்கு உறவு அவசியம் என்றார்.

"இல்லை பா.ம.க வுடன் நெருங்குவதைக்   காட்டிலும் அவர் நேரடியாக பா.ஜ.காவுடன் உறவு அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னேன் "பா.ஜ.க மூலமாக அவர் இடைநிலை சாதிகளுடன்   அதன் அரசியல் தலைமைகளுடன் தொடர்பு கொள்வதுதான் நல்லது என்றும் சொன்னேன்.நேரடியாக இடைநிலை சாதிகளின் அரசியல் தலைமைகளுடன் அவர்   தொடர்பு கொள்வது நல்லதல்ல என்றேன். நாங்கள் இருவரும் இதனை பேசிக் கொண்ட போது பொன். ராதாகிருஷ்ணனும் திருமாவளவனும் சந்தித்திருக்கவில்லை என்பதே எனது இந்த அரசியல் புரிதலுக்கு  அதிக வலுவூட்டுகிறது .

ஆனால் இந்த இணைவை அதாவது தலித் அரசியல் பா.ஜ.கவுடன் இணைந்து  வென்றாக வேண்டிய  அரசியல் அதிகாரத்தை  இந்தியாவிலுள்ள பிராமணர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பதுதான் இதனுள் அமைந்திருக்கும் சூப்பர்
மேஜிக் . பிராமணர்கள் என்று நான் குறிப்பிடுவது சகல அரசியல் தலைமைகளிலும் ஊடாடியிருக்கும் பிராமண கருத்தாளர்களையே அன்றி வெறும் பிராமணர்களை அல்ல. பிராமணர்களின்  மேஜிக்கும் இணைந்ததுதான் இந்தியாவின் ஒட்டுமொத்தமான அரசியல்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்