மலிவான சர்க்கஸின் கதை

மலிவான சர்க்கஸின் கதை

அங்கு நடக்கிற சர்க்கஸ் பார்க்க சகிக்கவில்லை என்று நண்பன் கூறினான் . அப்போதுதான் கண்டிப்பாக அந்த சர்க்கஸை சென்று பார்த்துவிடவேண்டும் என அவன் உறுதிஎடுத்தான்.அரவிந்தனின் " தம்பு"திரைப்படத்தைப் பார்த்திருப்பார்கள் பலர் என்று இக்கதை உத்தேசிப்பது மிகச் சிலரைத்தான்,தம்பு திரைப்படத்தில் வருகிற சர்க்கஸ் குழுவைக் காட்டிலும் சற்று மேம்பட்ட ஒரு குழுவினரே இந்த மலிவான சர்க்கஸை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் .தம்பு சர்க்கஸ் முதலீட்டலானைக் காட்டிலும் இந்த சர்க்கஸ் முதலீட்டாளன் சற்று மேம்பட்டவன் .எனினும் மடத்தனத்தில் இருவருமே சமதையானவர்கள் .போட்டி போடுபவர்களும்கூட .அழிவின் விளிம்பில் நின்ற வண்ணம் காலந்தவறிய இந்த இடத்தில கொட்டகையை அமைத்திருந்தார்கள் .
அவன் அந்த சர்க்கஸை ராவணனின் பத்து தலையோடு சென்று பார்க்கவே விரும்பினான் .காலை முதலே அதற்கான ஆயத்தத் தயாரிப்புகள் தொடங்கப்பட்டன . மீசை வைத்துக் கொள்வதில் தலைகளுக்கு உள்ள ஆர்வம் காரணமாக தகுதி வாய்ந்த ஒரு சவரக்கடையினுள் நுழைந்தான் .பத்து தலைகளின் பதிமுன்று ஆடி பிம்பங்களை ஒரே சமயத்தில் இளைஞன் சரி செய்தான்.அப்போது அங்கே உத்தேசக் கணக்குப்படி { ( 13*10=130) + (1*13=13) =147 } .நூற்று நாற்பத்தி முன்று பிம்பங்கள் அசைந்துகொண்டிருந்தன.இளைஞன் பத்து தலைகளுக்கும் சேர்த்து ஒரேயொரு மீசையை மட்டும்தான் உத்திரவாதப்படுத்தமுடியும் என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
மாலைவேளைக் காட்சிக்கு அவன் வீட்டிலிருந்து கிளம்பியபோது சமயம் ( 6.15) ஆறு பதினைந்து எனச் சொல்லியது .வேறொரு காலத்தில் நிகழ்கிற சர்க்கஸ் காட்சியைப் பார்ப்பதற்குக்கூட தற்காலத்தில் சரியான சமயத்தில் செல்லவேண்டும் என்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது .மேலும் காட்சியை காணச் செல்வதற்காக, முன்பதிவு செய்யப்பட்ட அனுமதி சீட்டும் அவனுக்கு மறுக்கப்பட்டு விட்டது .ஒரே உடல் மூலம் பத்து முகங்கள் காட்சிக்குச் செல்வதை அனுமதிக்க இயலாது என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலையும் உணர்த்தினார்கள் .
அங்கே நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டிய இடத்தில் ,ஒரு தட்டியில் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதிச்சீட்டு எடுக்கவேண்டும் என்கிற வாசகம் தென்பட்டது .சரியானதொரு வாசகம்தான் என்று நினைத்துக் கொண்டான் .குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ,எவரும் ஒருப்போல சர்க்கசிலிருந்து காட்சிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதால் கட்டணம் செலுத்தவேண்டியது நியாயம்தான் .
சர்க்கஸ் கூடாரத்தின் மீது மினுங்கும் சிறிய ,பலவண்ண மின்குமிழ் விளக்குகளில் ; இரண்டு விதமான குரல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன .
காட்சிகள் தொடர்பான செய்திகளைக் கூடாரத்துக்கு வெளியே சொல்லிக்கொண்டிருந்தது ஒரு குரல் .மற்றொரு குரல் காட்சிகளுக்குத் தாளமாக இசையுடன் கூடிய குரல் .குரல் வங்காள மொழி உச்சரிப்போடு தமிழைக் கையாண்டது . ஆக இசை,குரல் இரண்டுமே விசித்திரப் பொழுதையே சூழ்நிலையின் மீது ஏற்படுத்தின .
அவன் குரல்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு காட்சிகளைப் பார்பதற்காக கூடாரத்தின் மேல்பகுதி நோக்கி முன்னேறினான் .அது சினை ஆடுகளையும்,குட்டிகளையும் பாதுகாப்பதற்கான சிறு கூடாரம் போன்று அளவில் விகாசமாக இருந்தது.
அவன் கூடாரத்தின் உச்சியில் முனைப்பகுதியை அடைந்து ,பத்து தலைகளையும் காட்சிகளைப் பார்க்கும் வண்ணம் சீரமைத்தபோது ,இருபது கண்களும் முதலில் பார்த்த காட்சியில் ,கலையரசி தலைகீழாக நின்று கொண்டிருந்தாள்.அவளைச் சுற்றி சைக்கிள் டயர்களையொத்த ஆறு வளையங்கள் பல நிலைகளில் அவளுடைய உடலைத் தொடாமல் சுழன்று கொண்டிருந்தன .அவற்றைக் களித்த முகங்கள் தற்காலத்தைச் சேர்ந்தவை.அவை ஒரு கண்ணால் மலிவான சர்க்கஸ் காட்சிகளைப் பார்த்த வண்ணம் , மறு கண்ணால் தொலைக்காட்சிகளை சொப்பனித்தன .ரிங் மாஸ்டர்கள் தோல்விவுற்ற தருணங்களை, ஊளையிட்டுக் கேலி செய்து நிதியாதாரத்தைச் சீர்குலைத்தவை இந்தச் சொப்பனங்காணும் கண்கள்தான்.ஆனால் ரிங் மாஸ்டர் தோல்வி தழுவிய பின்னணியில் கடுமையான பயிற்சிகளின் கம்பீரம் இருந்ததால் அவர்கள் உடனுக்குடன் நிலை கொண்டார்கள் .
குழந்தைகளுக்கான மிருகங்களை நீல சிலுவைக்காரர்கள் பெருமளவுக்கு சர்க்கஸ் கூடாரங்களில் இருந்து அபகரித்துக் காடுகளுக்குள் அனுப்பிருந்தார்கள் .எனவே அற்ப மிருகங்களே நுழைந்து திரும்பின.குரங்குகளால்கூட கூடாரத்துக்குள் நுழையும் வாய்ப்பில்லை .
அற்ப மிருகங்களில் பிரதானமாய் இருந்தது யானை .யானை தங்களைத் தெய்வங்களைச் சுமப்பதற்காக ஒப்படைத்திருப்பதால் ,பாகன்கள் பிச்சையெடுப்பதிலிருந்தும்,தங்களைத் தவிர்க்க இயலாமல் இருப்பதுவும்தான் : குழந்தைகளிடம் யானையை கொண்டு சேர்க்கிறது .மற்றபடி பொமரேனியன் நாய்க்குட்டிகளும் .ஒட்டகங்களும் பரிதாபமானவை .குதிரைகள் பரவாயில்லை .
பார் விளையாட்டுத் தொடங்கியதும் பத்து தலைகளும் உஷாராயின.காட்சிகளைக் கூடாரத்தின் மேலிருந்து பார்ப்பது பெரும் சுவாரஸ்யத்தைத் தந்தது .ஒருவேளை கீழிருந்து பார்ப்பதற்கான அனுமதி சீட்டு நடைமுறைப்பட்டிருக்குமாயின் எல்லாம் தலை கீழாய் போயிருக்கும் .பார் விளையாட்டின் சாகசங்கள் அனைத்தையும் தலைகீழாய் பார்க்க முடிந்ததில் தலைகள் பெருமைப்பட்டுக் கொண்டன .குறிப்பாக பார் விளையாட்டில் கீழிருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் உயரத்தில் அமர்ந்திருந்த சாகச மேதைகள் ,பத்து தலைகளுக்கும் அண்மையில் தலைகீழாக இருந்தார்கள் .
கோமாளி பார் விளையாட்டுக் கம்பிகளையும் .ஊஞ்சல்களையும் பற்றி .மக்களை வேடிக்கை செய்துவிட்டு வலையில் மேல்நோக்கி விழுந்து சமதளத்தில் தலைகீழாகப் பூமியில் தொங்கியபடி நகர்ந்தபோது ,கோமாளித்தனம் அகன்று மேதமையோடும் , நிபுணத்துவத்தோடும் நகர்ந்ததை தலைகள் பார்த்தன .நிபுணனின் சிறப்பு அம்சங்களோடு அறிவிக்கப் பட்டுத் தோல்வியடைந்தவனை முதல் வரிசைக்காரர்கள் கேலி செய்ததும் மீண்டும் ,கயிற்று ஏணியைப் பற்றி மேலேறிச் சென்று ,விழுந்த அதே வேகத்தில் இருபது கண்களின் மீதும் பிடிவாதத்துடன் ,கீழே ,தலைகீழாக முன்னேறிக் கொண்டிருந்தான் .
பத்து தலைகளும் வியப்பு சூழ வீட்டிற்கு அழைத்து வந்தது ."நிபுணன் விழுந்து தலைகீழாகத் தங்கள் கண்களை நோக்கி
முன்னேறிய கடைசிக் காட்சியை மட்டும்தான்" .
க -2007

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"