சிறுகதை - கொலையாளி விட்டுச்சென்ற சட்டை

சிறுகதை
லக்ஷ்மி மணிவண்ணன்
கொலையாளி விட்டுச்சென்ற சட்டை
அன்று எதற்காக அந்தச் சட்டையை முடிவு செய்தேன் என்பது சரியாக விளங்கவில்லை.எனது உடல்வாகுக்கு அது ஏற்றதாகவும் இல்லை .சற்று பெரியது . பச்சை வண்ணத்தில் தங்க நிறக் கோடுகள் குறுக்கு நெடுக்காக பதிக்கப்பட்ட சட்டை அது . தோளின் இருபுறமும் பட்டைகள் தைக்கப்பட்டிருந்தன .அதுபோல முழுக்கையை மடக்கி பொத்தான்களில் இணைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு அமைப்பும் இருந்தது . பச்சை வண்ணத்தில் தங்கக் கோடுகளின் பளபளப்பு அந்த சட்டைக்கு ஒரு வசீகரத்தை வீசிற்று .எப்படிப் பார்த்தாலும் அது வழக்கமான சட்டையாக இல்லை .தையல்காரர் அச்சட்டையில் தனது செயலை ஏற்றியிருந்தார் .தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கம் ;அவர் இந்த சட்டையை உருவாக்கும்போது ;அவரது மனதில் ஓடிற்று என்பதை சட்டை வெளிப்படுத்திற்று .பேரலன்காரம் என்றெல்லாம் சொல்ல முடியாது .எனினும் சட்டைக்கு தனிச்சிறப்பு இருந்தது .ஆனால் நீங்கள் நினைத்துக்கொள்வதைப் போன்று சட்டை தோல் போன்று விறைப்புத் தன்மை கொண்டதில்லை .மாறாக மிருதுவானது .
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் இளம் கொலையாளியொருவன் என்னிடம் இந்த சட்டையை விட்டுச் சென்றான்.அவன் அந்த நள்ளிரவில் எழுப்பியபோது தூக்கக் கலக்கத்தில் சொருகிக்கொண்டிருந்தன எனது கண்கள் .மாறாக அவனது கண்கள் சுடர் விட்டுக் கொண்டிருந்ததை ;பின்னிரவுவரை நான் களித்திருந்த மது உண்டாக்கிய தலைக்குத்தும்,நோய்த்தன்மையும் காட்டித் தந்தன .அவன் வந்தது தொடங்கியே என்னுடன் விவாதித்துக் கொண்டேயிருந்தான்.எனக்கு அச்சமயத்தில் அது பெரும் சலிப்பாக இருந்தது .
அப்போதைய அவனது சில அற்பத் தேவைகளை என்னிடம் உளறிக்கொண்டிருந்தான் . அது ஒரு வறபுறுத்தலைப் போன்றும் .அல்லாமலும் வளவளப்பாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது .அவனது தேவைகளைக் கொடுத்து விரைவில் அவனை அகற்றிவிடவேண்டும் என்னும் எண்ணம்தான் எனக்கிருந்தது .அவனோ விவாதிப்பதைக் கைவிட தயாராக இல்லை . அவன் கேட்கும் பொருட்கள் ,' ஆசிர்வதிக்கப்பட்டு தரப்படவேண்டும்' என்பதை ஒரு நிபந்தனைபோல கூறினான் . இக்கூற்று என்னை அந்த தூக்கக் கலக்கத்திலும்கூட எச்சரிக்கையடையச் செய்தது . அவன் கேட்ட தொகையை அவனிடம் கொடுத்து இதில் ஆசிர்வதிக்க என்ன இருக்கிறது என்று கேட்டேன் ?அவன் இடம் பெயர்ந்து முதலில் தப்பிப்பதற்கான மிக சிறிய தொகை அது அவ்வளவுதான் .அச்சிறு தொகையைத்தான் அவனும் கேட்டான் .தர வைத்திருப்பதையே கைகளிலிருந்து பிடுங்கி ரெத்தம் கசியச் செய்பவர்களின் மனநிலையை ஓரளவுக்கு அப்போது அவன் வெளிப்படுத்தவும் செய்தான்.
அவன் எனது மேசையிலிருந்து பேனாவை எடுத்தான் .எனது பேனாவை எடுப்பவர்களை ஒருபோதும் நான் உவப்பானவர்களாகக் கருதுவதில்லை .சிறுவயதிலிருந்தே அது எனக்கு ஒத்துக்கொள்வதில்லை .எனக்கு வாகாக நான் தேர்வு செய்து வைத்திருப்பவையாக அவை இருக்கும் .அவற்றிற்காக நான் செலவு செய்யும் பொழுதுகள் அதிகம் .கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன் .அப்போதைய அவனது தேவைகள் மேலும் ஒரு ஜோடி ஆடைகளும் ,காலணிகளும் என்பது தெரிந்தது . புத்தம்புதிதாக எடுத்து அவற்றை அவனிடம் நீட்டினேன் .உடனடியாக அவற்றைப் புறக்கணித்த அவன், ஏற்கனவே நான் அணிந்திருந்த ஆடையை கேட்டான் .முன்வந்து கொடுப்பவற்றை அவன் சந்தேகிக்கத் தொடங்கிவிட்டது தெரிந்தது ..
"இவ்வளவு எளிதிலேயே நீ சந்தேகத்திற்கிலக்காவது நல்லதல்ல ...
நீ செல்ல வேண்டிய தொலைவு அதிகம்
ஆரம்பத்திலேயே நீ சந்தேகத்திற்கிலக்கானால் இரண்டொரு நாளிலேயே நொறுங்கி வற்றி விடுவாய்
வைராக்கியம்,வீண் சந்தேகம் கொள்ளக்கூடாது ..."
என்றேன் .
"இந்த வார்த்தைகளைப் பெறுவதற்காகத்தான் புதிய ஆடைகளை நிராகரித்ததாக " அவன் கூறியதில் இருந்த பாசாங்கு மறைவதற்குள் ,நான் அவனுக்குத் தர விரும்பாத எனது காலணிகளை காலால் இழுத்து எடுத்தான் .
"அந்தக் காலணிகளின் பாதை உனக்கு வசப்படாது ...
அதனை நீ அணிந்த மாத்திரத்திலேயே அது உன்னை வழிநடத்தத் தொடங்கி விடும்...
புதிர்வழிப் பாதைகளையும் ,சந்நியாசத்தையும் தனது காலில் கொண்டிருப்பது அது . எடுத்து அணியாதே ...
எனது பல சுக்குமங்களை கதையெனக் கொண்ட 'தற்போதைய ஓய்வு நிலை அந்தக் காலணிகள்.ஏகதேசம் முள்ளாணிச செருப்புக்கு நிகரானவை அது "
என்றேன் .
"அதுதான் தற்சமயம் தனக்குப் பொருந்தக்கூடியது "
என்றவன் அணிந்தவண்ணம் கிளம்பிவிட்டான் .அப்போது அவன் விட்டுச் சென்றதுதான் இந்த தங்கக்கோடு நிரம்பிய பச்சை வண்ணச் சட்டை
மறுநாள் அவன் விட்டுச் சென்ற அந்தச் சட்டையை எடுத்து எறிந்து விடலாமென நினைத்தேன் .முன்பக்கத்தில் வயிற்றுப் பாகத்தில் மட்டுமே ,சன்னமாகத் தெளிக்கப்பட்டிருந்த ரெத்தக்கறை அவனது சுபாவத்தைச் சொல்வது போல பட்டது .மை தெளித்து விளையாடும் குழந்தைகள் தெளித்து விளையாடியதைப் போன்ற தடயம்.!மிகுந்த லாவகத்துடன் ,நடுக்கமின்றி அவன் இந்த கொலையைச் செய்திருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன் .மேலும் கொலை செய்யப்பட்டவனின் கதையையும்அந்தச் சட்டை பேசுவதுபோல பட்டது .அந்தக்கதை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை . பின்னர் நானே அந்தச் சட்டையை அழகாக ,சலவை செய்து பத்திரப்படுத்திக் கொண்டேன் . ஆனால் சுமார் இந்த பத்து வருடங்களில் நானதை திரும்ப எடுத்துப் பார்த்ததே இல்லை.அவனை நினைவு கொண்டதும் இல்லை .ஆனால் அந்த சட்டையின் மாங்கல்யம் மட்டும் நினைவில் அழியாமல் புதிதாகவே இருந்தது .
இன்று அந்தச் சட்டையை எடுத்து அணிந்தவண்ணம் வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடையை சென்றடைந்ததும் ,ஏற்கனவே வார்த்தையை வாயில் தயாராக வைத்திருந்தவனைப்போல .
"வேறு யாரோ வருகிறார்கள் என நினைத்தேன் "
என்றான் டீ மாஸ்டர் .மாலையில் பெய்யவேண்டிய மழைக்கு வெயில் கடுப்பாய் விழுந்து கொண்டிருந்தது .உடுப்பின் அளவு பெரியதாய் இருந்ததால் அவனுக்கு அவ்வாறு தோன்றி இருக்கக்கூடும் என நினைத்துக் கொண்டேன் .
"நானும் அவ்வாறுதான் நினைத்தேன் "
என்று டீ மாஸ்டருக்கு ஒத்தூதியவன் ,காலையில் ஒருமுறை மனைவியைப் புணர்ந்து பின் வெளிவந்தவனின் முகக்குறியோடிருந்தான்.அவசியமற்ற குற்றவுணர்ச்சியை பிரதிபலித்தது அவனது முகம் .பின்பு அந்த சட்டையை அணிந்தவண்ணம் அன்றைய தினம் எங்கெல்லாம் அலைந்தேன் என்பதை இப்போது விவரிப்பது எனது நோக்கமில்லை .சட்டை என்னை ஒரு கருவியாய் பாவிக்கத் தொடங்கி இருந்த சற்று நேரத்திற்குள்ளாகவே நான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் என்பது மட்டும் எனது நினைவில் இருக்கிறது .
மறுநாள் காலை விடியலில் ,காவல் நிலையத்தின் ஒதுக்குப்புற தூண் கம்பத்தில் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடந்த என்னையும்,எனது நண்பனையும் ; சூடான தேநீர் எழுப்பியது .தேநீரின் பார்வை ,கடும் சீற்றத்துடன் இருந்ததை ஏனென்று விளங்காமல் பார்த்தேன் .
"இவன்கூட எல்லாம் சேருவியா நாயே ?"
என நண்பனை ஒரு போலீஸ்காரன் அன்பு கலந்து எச்சரித்து விட்டுப் போனான் .தங்க வண்ணம் கொண்ட பச்சை நிறச் சட்டை கந்தலாக குதறப்பட்டு என் முன்னே கிடந்தது . இரண்டு போலீஸ்காரர்கள் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள் .
"மென்டலாக இருப்பானோ ?"
என்று என்னைத் திட்டியவாறே கடந்து சென்றான் மற்றொருவன் .
"கோர்ட்டுல அடிச்சதெல்லாம் சொல்லி எதாச்சும் மறிக்கலாம்னு நெனச்சே! சுட்டெ கொன்னுருவேன் நாயே !"
என்று கூறியவாறே,ஆய்வாளர் ஒரு புதுச் சட்டையை எனக்கு அணிவித்ததை , கந்தலான தங்கக்கோடு நிரம்பிய பச்சை வண்ணச் சட்டை பார்த்துக் கொண்டிருந்தது . எனக்கு மொத்த உடலும் புண்ணாய் வலித்தது .தங்க வண்ணக் கோடுகள் உடலோடு உள்நுழைந்து ,தோல் முழுவதும் பச்சை வண்ணமாகி விட்டதுபோல தோன்றியது .இடது தோள்ப்பட்டை மூட்டு கழன்று கை நீண்டு தொங்கிக் கொண்டிருந்ததையும் அப்போதுதான் கவனித்தேன்.
"அப்படிப்பட்டவன் இல்லையே?"
என்று தொடங்கிய எனது உறவினரின் சீபாரிசுக்கு வெடித்தான் ஒரு போலீஸ்காரன் .
"இன்னைக்கி ஒண்ணும் தெரியாத பச்சப்புள்ள போல இருக்கான் சார் !நேற்று நீங்க போன பிறகும் எவனையுமே இவன் தூங்க விடல சார் !
மருத்துவமனையில் இருக்கிறவன் பொண்டாட்டிக்கு எவன் சார் பதில் சொல்றது ?இவனை விடக்கூடாது சார் !"
என்று ஆய்வாளரிடம் முறையிட்டான் மற்றொருவன் .
அங்கேயே இருந்தால் ஒருவேளை இறந்துவிடுவேனோ என்றஞ்சி ஒரு எளிய வழக்கு பதிந்து நீதி மன்றத்தில் விட்டுவிடுவதில் குறியாய் இருந்தார் ஆய்வாளர் .தங்க வண்ணக் கோடுகள் உடலுக்குள் இறங்கிக் கிடந்த விதத்தை வைத்து அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் .எனக்கு உடலை மூடியிருந்த பச்சை வண்ணம் கொலை செய்யப்பட்டவனையும்,தோலினுள் இறங்கிய தங்க வண்ணம் கோடுகள் சூழ்ந்த மிருகங்களையும் நினைவுபடுத்தி அருவருப்பு உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது .
"எனக்கு எதுவுமே தெரியாது ,எல்லாவற்றுக்கும் தங்கக்கோடு நிரம்பிய பச்சைச் சட்டைதான் காரணம் "
என்று நீதிமன்றத்தில் நான் சொன்னதை உங்களைப்போலவே எவரும் நம்பத் தயாராக இல்லை .
கதையின் முடிவு பற்றின குறிப்புகள் :
1
என்னைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் இறங்கிச் சென்ற கொலையாளி ,மறுநாளே பிடிபட்டு விட்டான் .அந்தக் கொலைபற்றி ஒரு வாரத்திற்கு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
அல்லது
அவன் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து சாமியாராகிவிட்டான்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் அவனை அவ்வப்போது பார்த்து வருகிறீர்கள் .
அல்லது
கொலையாளியின் சகோதரனால் நீதி மன்ற வளாகத்துக்குள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான் .
அல்லது
வெளிஊர்களிலேயே தலை
மறைவாக அலைந்து கொண்டிருக்கிறான் .
இல்லை
கேரளாவில் ஒரு உள் கிராமத்தில் உதிரித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறான்
இல்லை
உங்கள் பகுதியின் தாதாக்களின் தலைவனே இப்போது அவன்தான் .
இதில் உங்களுக்கு அவனுக்குரிய முடிவாக எது சரியெனப்படுகிறதோ அதனைப் பொருத்திக் கொள்ளுங்கள் .முடிவு அவசியமில்லை என்பவர்கள் விட்டுவிடுங்கள்
2
நீதி மன்றத்தில் எனக்கு அபராதம் மட்டும் விதித்து விட்டுவிட்டார்கள் !அல்லது மனநல சிகிழ்ச்சைக்கு சிபாரிசு செய்தார்கள் !இதில் எது உங்களது முடிவோ அதுவே எனது முடிவும் .நன்றி

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"