சிசேரியன்

சிசேரியன்
---------------
பத்திரகாளி அம்மன் வேடமிட்டார்
ராஜாமணி நாடார் .
ராஜாமணி நாடார் வேடமிட்டாள்
பத்திரகாளி ,கைகள் பல கொண்ட கருங்காளி .
இரண்டு வேடங்கள்
உடல் ஒன்றே
ராஜாமணி நாடாரும் ஒரு வேடம்தானே அன்றோ ?
இவர் அங்கு செல்ல
அவளிங்கு புறப்பாடு
முதலில் ராஜாமணி நாடார்தான்
பத்திரகாளியம்மனை தன் வேடத்திற்குள் அழைத்தார்
விரதம் தொடங்க வேடத்தினுள் நுழையத் தொடங்கினாள்
அம்மன்.
கஷ்டப்பாடுதான்
அவளுக்கு இடங்கொடுத்துக் கொடுத்து
வீங்கத் தொடங்கிற்று ராஜாமணி நாடாரின் உடல்
அவள் ஒரேநாள் விரதத்தில் மேல்வந்து சாடிவிடமாட்டாள்
என்பதை நன்கறிவர் அவர்
ராஜாமணி நாடார்.
ஒவ்வொருபடியாக மெல்ல மேலேறி உடல் கட்டுமானத்தில் அவள்
ஏறி உட்கார
பரவெளியில் கைவிரித்தெழுந்தன அம்மனின்
விஸ்வரூப கைகள்
விரிந்த கோலம் .
அம்மன் புத்தாடையாக
தனது உடலை எடுத்துக் கொண்டதை அறியாத
ராஜாமணி நாடார்
அவசரமாக வேடம் கலைத்து விரதம் முறித்த அன்று
கடலுள் இறங்கிச் சென்றது வேடம்
மிஞ்சிய உடலெங்கும் பரவெளியில் அலையும்
காளியின் கைகளின் நமநமச்சல்
வேடம் விட்டகன்ற இடமெங்கும் முளைத்த உடல்
கருங்காளியின் ஒரு பெரிய வடு
"ஒரு கள்ளக் கோழியடித்து உண்டு
நல்லச் சாராயம் பருகி
சொருகியினி மீளுங்கள் நாடாரே ...
அம்மன் விடைபெற்று விலகிச் செல்ல ...
உங்கள் உடலை மீண்டும் ஒருமுறை அவள் ஈனித் தர .."
வேறு வழியேதும் உண்டோ?
உங்கள் வேடத்தை அவள் மீண்டும் உங்களுக்கு
விட்டுத் தர வேண்டாமா?
நீங்கள் ராஜாமணி நாடாராக இருப்பது தானே
அவளுக்கும் நல்லது
உங்களுக்கும் பேறு

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"