வீரலட்சுமி

வீரலட்சுமி
யோனி தைத்தடைத்த இடத்திலிருந்து
முளைத்துப் பரவியதொரு வீரலட்சுமி கோயிலில்
நகரத்து மக்கள் 
பொங்கலிட்டார்கள்
மந்திரம் ஜெபித்தார்கள்
சுற்றி வந்தார்கள்
சுற்றி வருபவர்களால்
குடை ராட்டினமாய் சுற்றிக் கொண்டிருந்தது
கோயில் .
யோனி தைக்கப்பட்ட இடங்களில் பெருகுகிற
பிற அம்மன்கள் ஜொலிக்க
சந்தனக் காப்பு ரூ 350/-
மக்கள் நெரித்த
பஜனைகள்
ஆராதனைகள்
அபிஷேகங்கள்
மணியொலிகள்
பெரிய பூட்டுடன் , விலகி நின்ற
இரும்புக் கதவின் எதிரில்
வாய் பூட்டப்பட்ட உண்டியல்குடம்
மனம் பிறழ்வான உடலாய்
சங்கிலியில் பிணைந்து கிடந்தது
சிறிய கம்பித்தூணில்.
அம்மனின் தட்டத்தில்
யாரேனும் கைவைத்து விடக் கூடும்.
நுழையக் கூடாதவர்களின் வரவைக்
கண்காணித்து நிற்கும் கண்கள்
துப்புரவுப் பணிகளை மேற்பார்வை செய்கின்றன
நகரம் இந்த முறை
நவீன பளிங்கறையின்
மணிச்சத்தத்திலிருந்து தொடங்குகிறது.
நீதிபதிகளும்
சிறைக் காவலர்களும்
பத்திரிக்கைக்காரர்களும்
மனநல மருத்துவர்களும்
பணிக்குக் கிளம்புகிறார்கள் .
கர்ப்பக் கிரகத்திலோ
யோனி தைக்கப்பட்ட அம்மன்
கால்விரித்து வேதனிக்கிறாள்
புட்டம் காட்டித் திரும்பி
உள் எழுந்து நின்று
தைக்கப்பட்ட யோனியை
வலி நிரம்பப் பிரிதெடுப்பாளாவென
ஒரு கவி அவளைச் சென்று
கண்டு வருகிறான்
[ "வீரலட்சுமி" கவிதைத்தொகுப்பிலிருந்து - 2003
குலசை முத்தாரம்மனுக்கு கருங்காளி வேடமணிந்து தசரா விரதமிருந்து வரும் பக்தர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"