தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி

தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி
ஆடும் கைப்பிடிகளிரண்டினிடையே
உடலைக் கோர்த்துத் தொங்கவிட்டபடி
ஆடிக் கொண்டிருக்கிறாள் 
தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி
நள்ளிரவில் புறப்படும் புறநகர்
தொடர்வண்டியில் உடல் தொங்காத கைப்பிடிகள்
இளவரசிகளுக்காக ஆடியபடி காத்திருக்கின்றன .
புலப்படாத இளவரசிகள் ஒருவேளை
அந்தக் கைப்பிடிகளில் உடலைக் கோர்த்திருக்கக் கூடும்
கடவுள் பயணிக்கும் நள்ளிரவில்
ஆளற்ற இருக்கைகளிலிருந்து பயணிக்கிறார்கள்
அவர்களின் காதலர்கள்.
இளவரசிகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய
காதலர்களின் கண்கள்
உள் திருங்கியிருக்கின்றன
கடக் கடக் ஓசையுடன்
தொங்கியபடி பயணிக்கும் இளவரசியின்
நதியில் தேய்ந்த வரி படர்ந்த வெள்ளையுடலில்
கருங்கல் சிற்பமாய்
கரிய யோனி
விலா எலும்புகள்
துருத்திய மார்பில்
சதையற்றுச் சப்பிய முலைகள்
உலர்ந்த திராட்சை
முலைக் காம்புகள்
சிற்ப யோனியை
சதைக்குறிகளால்
முட்டி நெரிக்கும் நிகழ்காலம்
தூங்கும் வேளையில்
இளவரசி பயணித்துக் கொண்டிருக்கிறாள்
தொடர்வண்டியில் பொருட்களின் அறையில்
திரிசடையோடும் ,கருத்த பாசி படர்ந்த உடலோடும்
சிற்பக்குறி வெளித்தெரிய
அவளது காதலன்
தூங்காமலிருக்கிறான்
ஆளற்ற இளவரசர்களோடு
தனிமையில் பயணிக்கும் இளவரசியின் கண்கள்
முதிய நிழலுருவங்கள் ஊடாடித் திரியும்
நீளமான பழுதடைந்த கொட்டாலைகளைக்
கனவு காண்கின்றன
கொட்டாலை முற்றத்தில்
அழகிய கோலம் ஈரமுலராமலிருக்கிறது.
[ வீரலெட்சுமி கவிதைத் தொகுப்பிலிருந்து - 2003 ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"