தீச்சட்டி

தீச்சட்டி
அவர்கள் இப்போது தனியே இருக்கிறார்கள்.
அவள் ஸ்கூட்டிப் பெப்பில் மார்க்கெட்டுக்கு வருகிறாள்
அவனது நள்ளிரவு போஜனம் புரோட்டா கடையில் 
தாறுமாறாக நடைபெறுகிறது.
அவன் உண்பது போலில்லை
பலவந்தம்
அவர்கள் பிரிந்து விட்டார்கள்
எனினும் அவள் ஸ்கூட்டிப் பெப்பில் அவனும் உடன் வருவது போலவே
இருக்கிறது
அது அவன் மனநிழல் .
அவனுக்குப் பிடித்தமான மீன்களை அவள் வாங்கிச் செல்கிறாள்
அவனுக்கு பிடித்தமான ஆடைகளையே உடுத்துகிறாள்.
அவன் சொற்படிதான் நடந்து கொள்கிறாள்
அவனுக்கோ அவள் சிந்தை மீற இயலாதது
இருவரும் அபூர்வமாக சந்தித்துக் கொள்கையில்
சம்பிரதாயமாகச் சிரித்துக் கொள்கிறார்கள்
வஞ்சினம் உள்ளில் சுழன்றெரிய...
யார் கொண்டு வந்து சாய்த்தது?
இந்த வஞ்சினத்தில் அவனுக்கோ அவளுக்கோ
தொடர்பேதும் இல்லை
ஒருவரையொருவர் தெரிவிக்கும்
புகார்கள் அவர்களில் நிற்க மறுத்து உதிர்ந்து விழுந்த
உதிரியரளியின்
வண்ணம்
காவு கொண்ட ஊழின் வாசல்
வஞ்சினம் தனியே அவர்கள் தனியே என்றுதான்
இருவரும் இருக்கிறார்கள் விளங்காத தனிமையில் ...
வஞ்சினமாலையை அவர்கள் கழுத்தில் எடுத்து அணிவித்தவர்கள்
கண்ணகியா,இசக்கியா,
பாஞ்சாலியா ?
ஒரு காப்பியமும் ,தீச்சட்டியும்
அவர்களுக்கிடையில் இருப்பதையறியாத நீதியின் ஒப்புதலை
நீதிமன்ற வாசலில் நின்றவண்ணம் ஓங்கி சிரித்துக் கொண்டிருக்கிறான்
துச்சாதனன்
வந்து வழிமறிப்பவன் கோவலன்
பாஞ்சாலியின் சேலையின் காலநீளம் கண்டு
மணிமேகலை தனக்கிதில் ஏதும் பொறுப்பில்லை என்று கூறி
எப்போதோ ஒதுங்கி கொண்டாள்.
நீள்கிறது சேலை
எடுத்து உடுத்திக் கொள்பவர்களுக்கு
பரிசாக வந்து பற்றுகிறது
மாய அந்தி.
மதுரை என்னும் தீச்சட்டி
எப்போதும் கையிலேந்தி யார் கையிலேனும் 
எரிந்து கொண்டே இருப்பதுதானோ ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"