"விசாரணை" - வெற்றிமாறன்

"விசாரணை" தமிழில் நவீன சினிமாவின் தொடக்கம்.

எந்த காரியம் தமிழில் இல்லையென்று விமர்சனங்கள் வாயிலாகவும் ,ரசனை வாயிலாகவும் குறைபட்டுக் கொண்டிருக்கிறோமோ அந்த காரியம் நிகழும் போதும் அதனைக் கொண்டாடவேண்டியதும் முக்கியமானது.விசாரணை தமிழில் நவீன சினிமாவின் தொடக்கம்.இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.
இந்த சினிமா நாயகனின் இடத்தில் அமைப்பையும் , உள்ளடக்கத்தையும் பார்வையாளனின் முன் வைக்கிறது.இது யதார்த்தத்தைப் போல பாவனை செய்யும் ஒரு நவீன சினிமா.தனது புனைவு சாத்தியங்களில் இருந்து அமைப்புகளின் கட்புலனாகாத் தன்மைக்குள் நகர முயற்சி செய்யும் சினிமா.
யதார்த்தத்திலிருந்து அமைப்பின் உட்கண்ணிகளுக்குள் பயணம் செய்வதை யதார்த்தவகை இலக்காகக் கொண்டிருப்பதில்லை.யாதார்த்தத்தைச் சித்தரிப்பதில் நிறைவடைவது அது.விசாரணை யதார்த்தவகை சித்தரிப்பிலிருந்து அமைப்பின் கட்புலனாகாத் தன்மைக்குள் பயணிக்க முயல்கிறது. அதனாலேயே அது நவீன தமிழ் சினிமாவாக உருமாறுகிறது. உட்கண்ணிகளை நோக்கி பயணம் செய்ய முயலுதல் நவீனத்தின் குணம்.இது தமிழ் சினிமாவில் சாத்தியமாகியிருப்பது எதிர்பாரா விந்தை.இதற்காகவே கொண்டாடப் படவேண்டியவர் வெற்றிமாறன் . சுயமாக நிகழும் காரியங்களைக் கொண்டாடுதலே இது போன்ற காரியங்களை மேலும் மேலும் முன்னெடுக்கத் தூண்டுதலாக அமையும்.
நிரபராதிகளின் காலம் , ஜோஸ் வாண்டலூவின் அபாயம் , காப்காவின் விசாரணை போன்ற படைப்புகளின் தாக்கம் கூடிய சினிமா வெற்றிமாறனின் இந்த விசாரணை.படைப்புகளின் தன்மையின் தாக்கம் கெடாமலும் , சுயமாகவும் இந்த சினிமாவில் மெருகேறியிருப்பது வெற்றிமாறனை சிறந்த கலைஞனாக உணரவைக்கிறது .
வெற்றிமாறன் ஒரு யாதார்த்தமான கலைஞன் இல்லை என்பதை இந்த சினிமா வழியாகக் கண்டுணர இயல்பவர்களுக்கு மட்டுமே இந்த சினிமாவின் நவீனத்தன்மை என்ன என்பது விளங்கும்.இது சத்யஜித்ரெய் வகைப்பட்ட யதார்த்தம் அல்ல.பாலு மகேந்திரா வகைப்பட்டதும் இல்லை.பாலச்சந்தர் வகைப்பட்டதும் இல்லை இந்த இருவகைப்பட்ட யதார்த்ததிலிருந்தும் விலகிச் செல்பவராக வெற்றிமாறன் இருப்பதை அவரது சிறப்பம்சமாகக் கொள்ளலாம்.
யதார்த்தத் சித்தரிப்புகளிலிருந்து தனிமனித துயரங்களுக்குள் நகர்பவர் பாலுமகேந்திரா.பாலச்சந்தர் மிகை உணர்ச்சியில் நாட்டம் கொண்டவர் .அந்த தடைகள் எதுவும் வெற்றிமாறனிடம் இல்லை.
விசாரணையின் குணம் வேறு.யதார்த்தம் என்பது ஒருவகையான வெளிப்படுத்தும் பாவனைதானே அன்றி யதார்த்தம் இவ்வகை நவீன சினிமாக்களின் நோக்கமில்லை.யதார்த்தவகை என்பது சொல்லுதலின் மேம்பட்ட வடிவமும் அல்ல.அது இன்று பலவிதங்களிலும் தடையாக மாறிவிடும் தன்மை கொண்ட பலவீனமான வெளிப்பாட்டு வடிவம்.
விசாரணையை யதார்த்தம் எனக் கருதும் பார்வையாளன் , இதனை யதார்த்தம் என நம்பும் போது ,இது உண்மையல்ல என்னும் பகுதியை தவற விடுபவன் ஆகிவிடுகிறான்.அதன் மூலம் இந்த அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் புனிதத்தன்மை நோக்கி சரிகிறான்.இந்த அமைப்பின் மீதான பயம் மட்டுமே அவனைப் போய் சேர்க்கிறது.இந்த அமைப்பின் மீதான பரிசீலனையை ஏற்றெடுக்க தன்னிலையில் அடையவேண்டிய மாற்றங்களை அது கடந்து விடுகிறது.
விசாரணை படம் சொல்லுவதைப் போல இந்த அமைப்பு இவ்வாறுதான் இருக்கிறதா எனக் கேட்டால் நிச்சயமாக இவ்வாறானதாக மட்டும் இல்லை என்று சொல்லிவிட முடியும்.இல்லையெனின் இந்த அமைப்பின் சூக்குமமான இன்னொரு பகுதி இந்த சினிமாவில் மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லிவிட முடியும்.
பெண் போலிஸ்சாக வரும் பெண்ணின் கருணை மட்டுமே இங்கே காட்டப்பட்டுள்ளது.பிற அனைத்தும் மறைந்து கிடக்கின்றன . மறைந்தவற்றையும் நேராக்கி அவற்றின் இருப்பையும் ஸ்திரப்படுத்த முயலும் போது அங்கே மாயத்தன்மை ஏற்பட்டு விடும்.இந்த அமைப்பு நமது சித்தப்பா,மாமன் மச்சான் மற்றும் நம்மால் நிறைந்துள்ள ஒரு வஸ்து தானே அல்லாமல் ,நமக்கு அன்னியமாக எங்கோ யவராலொ இயங்கும் பிரத்யேகமான ஒன்று அல்ல.அமைப்பு சில குணங்களை நமக்குத் தருவதைப் போல நாமும் பல குணங்களை அதற்கு தந்து கொண்டிருக்கிறோம்.ஊட்டிவிடுகிறோம்
இந்த அமைப்புகள் நமது பொது மனப்பரப்பின் பகுதிகள்தானே அன்றி வேறெதுவும் இல்லை.இதன் கொடுரமுகமும் கருணையும் இயலாமையும் தனித்தனியாக பயணப்படுவதில்லை.அப்பாவிகளை மட்டுமல்ல அதிகாரத்திற்கு வெளியிலுள்ள எல்லோரையும் காவு வாங்க காத்திருப்பதுதான். தெளிவாக காவு வாங்க இயலாமையின் போதாமைகளும் நிறைந்தது இது.இந்த பண்பு இந்த சினிமாவில் புறக்கணிக்கப்பட்டிருப்பதன் மூலமாக அமைப்பின் முகம் தீமையாக மட்டுமே உருக்கொள்ளும் தன்மையை இந்த சினிமா பெறுகிறது.தீமையில் நமக்கிருக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.அபத்தத்தின் அதிக பொருளை கண்டடைய இயலாமல் இந்த சினிமா படைப்பு ரீதியில் சரியும் இடமும் இதுதான்.
விசாரணை தமிழ் சினிமா முன்வைக்கும் அமைப்பின் கருவிகளாக இயங்கும் உடல்களின் சித்தரிப்பு மிகவும் கூர்மையும் , நுட்பமும் கொண்டிருக்கிறது.சந்திரன் போன்ற , இந்த அமைப்பின் முழு பிரக்ஞையையும் உள்வாங்கிக் கொண்ட உடல் சித்தரிப்பில் அது முழுமை பெற்றிருக்கிறது.வசனங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன .ஆடிட்டர் ,கடை முதலாளியுடன் உடன் வரும் வக்கீல் ஆகியோர் இந்த அமைப்பின் தர்க்கங்களை ஏற்றெடுக்கும் விதம் பிரமாதம்.வெற்றிமாறன் தேர்ந்த கலைஞன் என்பதற்கான உதாரணமாகத் திகழும் இடங்கள் இவை.
அதே சமயம் ஆந்திரா போலிஸ் இன்ஸ்பெக்டர் பழைய சிவாஜிகணேசன் காலத்து வில்லன்களின் தன்மையில் வந்து செல்கிறார்.சென்னைக்கு காட்சி நகரும்போது சாதாரணமாக வழக்கத்திற்கு மாறுபட்ட வெறும் சாலையை வெற்றிமாறன் காட்டுவது புதியதும்,புத்திசாலித்தனமும் கொண்டது.
விசாரணை சினிமா தமிழ் சினிமாவின் பொது இலக்கணத்திற்கு மாறானது இல்லை.புழங்கி வரும் இலக்கணத்தில் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளது.
எப்படி இருப்பினும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய அடுத்த கட்டத்திற்கான பெருந்திறப்பு வெற்றிமாறனின் இந்த விசாரணை.

ஆஸ்கார் பரிந்துரைக்கு செல்லும் தமிழ் சினிமா "விசாரணை " 
வெற்றிமாறனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"