உடலிலிருந்து ஆயுதத்தைக் கழற்றுதல்

உடலிலிருந்து ஆயுதத்தைக் கழற்றுதல்
பத்தாண்டுகளுக்கு முன்புவரையில் கையில் எப்போதும் என்னிடம் கத்தி இருக்கும்.அது உடலின் எந்த பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் கையில் மினுங்கும் விதத்தில் வித்தை சிறுவயதில் களரியாகப் பாடம் பயின்றது.சிறுவயதில் படிக்கும் வித்தைகள் எல்லாம் பின்னர் கைவிட்டு விட்டாலும் கூட, சிறுவயதில் பயிற்சியாக ஒட்டிக் கொள்பவை உடலின் பழக்கமாக நீங்கள் எவ்வளவு உயரிய மயக்க மருந்துகள் உண்டாலும் பொறுக்காது எழும்பவே செய்யும் .எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் எதேச்சையாகக் கூட நாற்பதிற்கும் குறைவான வயது கொண்டவர்களிடம் மோதி பார்க்காத துணியலாம்.அறுபதுக்கும் மேற்பட்டவர்களிடம் துணியவே
கூடாது .அவர்களின் உடல் பழக்கத்தில் களரியும் வர்மமும் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.ஒருமுறை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தாக்க முயன்ற பொடியனை கூடுமானவரையில் வேண்டாம் என்று சொல்லி முடிவில் மென்னியைக் கழற்றிய பெரியவரின் வயது எழுபதுக்கும் மேலிருக்கும்.கண்ணால் கண்டவர்கள் விருதோட்டம் பிடித்தார்கள். பழைய
தலைமுறையினருக்கு இங்கே வித்தைகள்தான் பேஷன்.
கத்தியை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில் அது ஒரு திருக்கோட்டமாகவோ ,பிளேடாகவோ வைத்திருப்பேன்..திருக்கூட்டம் என்று ஸ்குருடிரைவரைத்தான் குறிப்பிடுகிறேன்.நண்பர்கள் சிலர் எனது பயணப்பைகளில் தற்செயலாகக் கண்டடைந்த ஆயுதங்கள் குறித்து கேள்விகள் கூட கேட்டிருக்கிறார்கள்.கிறுக்கு சிரசில் நின்றாட்டம் காட்டியபோது ,ஊருராய்ச் சுற்றியலைந்த காலங்களில் பிளேடுக்கு மாறினேன்.சில காலம் கத்தியின் பயன்பாட்டில் இருந்தது சிறிய ரைனால்ஸ் பேனா.ரைனால்ஸ் பேனாவை வைத்தே கூட கொலைமுயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.முடியும்.பல்குத்த உதவுவது போல.
ஆயுதங்களை நமது உடலின் பகுதிகளில் பதுக்குவது அல்லது தாக்கும் ஆயுதங்களை உடலின் ஒரு பகுதியாக்குவது ,தனது உடலை ஆயுதத்தின் முன்பாக நிறுத்துவதற்கு ஒப்பானதுதான்.உடலை மட்டுமல்ல நமது அகந்தையையும் கத்தி முனையில் நிப்பாட்டி வைத்திருப்பது.ஆயுதம் வைத்துக் கொள்வது பாதுகாப்பிற்கு என்று நாம் ஜோடித்துக் கொள்வது நமக்கு நாம் செய்தது கொள்ளும் மோசடி.ஒருபோதும் அது பாதுகாக்காது.சிக்கலாக்கிக் கொண்டேயிருக்கும்.புதிய புதிய சிக்கல்களைத் தோன்றத் செய்யும்.ஆயுதத்தை உடலாக்குவதன் மூலமாக முதலில் நாம் இழப்பது பாதுக்காப்பைத்தான்.ஏனெனில் ஆயுதங்களுக்கென்று சுயேட்சையான ஒரு வேலைத் திட்டம் இருக்கிறது.அதன் வேலைத் திட்டத்தில் சென்று மாட்டிக் கொள்ளக் கூடாது . ஆயுதங்களுக்கென்று விதியின் தனித்த ஒரு காமச் செய்லபாடொன்று இருக்கிறது.மேலாக ஒரு சிறப்பு மோப்ப சக்தியும் .ஆயுதங்களை எடுத்த பின்னர் அது எப்போதும் உங்கள் அகந்தையின் நுனியில் வந்து தெறிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கும்.
உங்களையும் எதிரிகளையும் தொடந்து கண்காணிக்கும்.எதிரியைக் காட்டிலும் தன்னைத் தானே அதிகம் கண்காணிக்கும்.சந்தேகத்தையும் ,பயத்தையும் தொடர்ந்து உருவாக்கி அது தன்னைப் போர்த்திக் கொள்ளும் .கத்தியில் போர்த்தப்படும் பண்புகள் அகத்தின் உள்ளிறைச்சியாக மாறிவிடும்.நான் கொண்டிருந்த கத்தியில் இந்த பண்புகள் படுத்துத் துயில்வதை விழித்துக் கண்டு பத்து வருடங்கள் ஆகின்றன.அதனை எப்போது எனது உடலுக்கப்பால் எடுத்து எறிந்தேனோ அதன் பிறகே காந்தியின் அருமை என்ன என்பது புரியத் தொடங்கியது.உடலிலிருந்து ஆயுதம் எப்போது கழன்று கீழே விழுகிறதோ அப்போதிலிருந்துதான் உடல் துலங்கும்.உடலென்பது இசைக்கோலம்,உடலென்பது அவதானிப்பின் பள்ளியறை என்பது தெளிவுபடும்.உடலென்பது பிரபஞ்சத்தை பார்க்கும் ,உணரும் வாய்ப்பை உங்களுக்குத் தருகிற ஏற்பாட்டைச் செய்கிற ஓரிடம்.ஆயுதத்தை விடுவது என்பது உடலிலிருந்தும் உணர்வில் இருந்தும் ஆயுதத்தைக் கைவிடுதலாக இருக்கவேண்டும்.அச்சத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தொடர்புகள் அப்போது விளங்கிவிடும் .
கத்தியென்றால் எல்லா கத்தியையும் அது குறிக்காது.ஒரு பனையேறி வைத்திருக்கும் பாளையரிவாள் எடுத்து ஒருவரின் தலையை சீவவேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை.கழுத்தின் அருகில் கொண்டு சென்றாலே போதும் தலை கழன்று தரையில் விழும் .ஆனால் ஒரு பனையேறிக்கு ஒருபோதும் இந்த எதிர்சிந்தை கிடையாது.மரம்வெட்டி சதா கொண்டலையும் அரிவாளுக்கும் இந்த எதிர் சிந்தை இல்லை.
எனக்கு ஒரு நண்பர் உண்டு .உரையாடல்களில் ஒரு வார்த்தையைத் துவங்கவும் அந்த வார்த்தையை மடக்கி அந்த வார்த்தையிலிருந்தே எதிர்வினையைத் தொடக்கி விடுவார்.அது சுழன்று சுழன்று தானே படியும் புழுதி போலிருக்கும்.வாக்கியம் செல்லத் தொடங்கும் திசைக்கும் அவர் எதிர்வினைக்கும் ஒரு பொருத்தப்பாடுமே இராது.அவரது எதிர்வினைகள் தனக்குத் தானே எப்போதும் துள்ளிக் கொண்டிருப்பவை.நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள்,சொல்ல வரும் செய்தி என்ன ? எதுவும் அவருக்குத் தேவையில்லை.அவரிடம் ஆயுதமிருந்தால் அதனை அவர் எவ்வாறு கையாள்வார் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.உங்கள் முனைப்பிலிருந்தே அவரது எதிர்வினைகள் வலை பின்னத் தொடங்கிவிடும்.அவர் எதிர்வினை புரியாமலிருக்க வேண்டுமெனில் உங்களிடம் முனைப்பேதும் தென்படாத தவநிலை வேண்டும்.சவங்களிடம் மட்டுமே அவரிடம் எதிர் வினையில்லை.
பிளேடு கையில் பதுங்கும் காலங்கள் தீவிரமானவை .விளிம்பு நிலையின் பள்ளத்தாக்கில் சரிந்து விழ வாழ்க்கைக் காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் அது கையை வந்தடைவது துரதிர்டமானது.தனதுடலை தானே கீறிக் கொண்டலைவதற்கும்,அது கைவசத்தில் இருப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. முதலில் நீங்கள் எடுக்க தொடங்கிய மவுசான ,அழகிய பெண்தன்மை கொண்ட கத்தியிடமிருந்து சரிந்து சரிந்தும் கடைசியில் இந்த பிளேடுக்கு வந்து சேரலாம்.பிளேட்டில் தொடங்கி அழகிய பெண்தன்மைக்கு வந்து சேரும் பளிங்குப் பாதைகளும் உள்ளன. உடலாயுதத்தை விதி முடிவு செய்வதை பொறுத்தது அது.
இந்த பாதுகாப்பின்மை உள்ளில் ஊற்றூரும் கருமுளை எங்கிருக்கிறது ? பிறரது ஆசையும் காமமும் அக்கறையும் அற்று வளரும் குழந்தைகளே பெரும்பாலும் பாதுகாப்பின்மையின் பெரும்பள்ளத்தில் விழுகிறார்கள்.சிறுவயதில் எப்போதுமே எனக்கு என்னை எல்லோரும் அபாயத்தில் நிற்க வைத்து விட்டுச் சென்று விடுவார்கள் என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.நம்மைக் கைவிட்டு விடுவார்கள் என்று தோன்றும் .அம்மா சிறுவயதில் விடைபெற்றுக் கொண்டது மட்டுமே இதற்கு காரணமில்லை.பின்னர் என்னைப் பராமரித்தவர்கள் அத்தனை பேரிடமும் எனது சிறு பிராயம் கண்டுணர்ந்த அக்கறையின்மையும் ,ஆசையின்மையும் தோல்போல மேனியில் தடித்தது.ஆசையின்றி அக்கறையை செயற்கையாக்குபவர்களை அகமனம் உதைத்து வெளியேற்றியது.தன்னை எப்போதும் தான்தான் காப்பாற்றியாக வேண்டும் என்கிற சுய முனைப்பு .தற்காப்பின் கையில் வந்தடையும் தெய்வங்கள் நியமிக்கும் கத்தி.கத்தியை கையில் கொண்டு தருவது தெய்வங்கள்தான்.தெய்வங்கள் பாதுகாப்பின்மையை கொண்டு சேர்க்கும் குழந்தைகளே தலைமைப் பண்பிற்கும்,கண்டுபிடித்தலுக்கும் தகுதியாகிறார்கள்.ஆனால் கத்தியை கலையாகவோ,வேறு பெறுமதியாகவோ,இசைக் கோலமாகவோ உருமாற்றுவதில்தான் கீர்த்தியும் அடங்கியிருக்கிறது.புறக்கணிப்பில் மிளிரும் காந்தம் அதுவாக வேண்டும்.உடலாயுதம் இறக்கி வைக்கப்பட வேண்டும்.உடலிலிருந்து ஆயுதத்தை இறக்கி வைத்ததும் எதிரி பலகீனமடைந்து ஒரு கணத்தில் வயோதிகம் அடைவது கண்ணால் காணுமளவிற்குத் தெரியும் தெய்வங்களை விஞ்சும் சவால் கொண்ட வேலை இது.தெய்வத்தால் ஆகாதெனினும் என்பது போல , எனினும் கூட .

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"