அப்பாவாக மாறுதல்

அப்பாவாக மாறுதல்

வயதாக வயதாக என்னவாக மாறுகிறோம் என்பதை பொறுத்தே நாம் யார் என்பதும் விளங்குகிறது.உண்மையின் படிமமாக.  சிறுவயதில் பேசிய பல புரட்சிகள் அப்பாவில்  வந்து முற்றுரு பெறுகிறது.அப்பா என்பவர் நடைமுறை என்பதைக் கற்றுணர்த்துகிறது காலம் .அப்பாவைத் தாண்டும் சாத்தியம் உண்டா?

சிறுவயதில் தனது அப்பாவைக் கடுமையாக வெறுத்த ஒரு நண்பரிடம் அப்பா தோன்றுவதைக் கண்டபோது ஆச்சரியப்பட்டேன்.கஷ்டமாகவும் இருந்தது. அவ்வளவிற்கு அழகிய குணங்கள் நிரம்பியவாராக இருந்து  பின்னர் அப்பாவாகக் காணுதல் என்பது கடினம் .அப்பாவிடம் புகாராக அவர் எழுப்பிய அத்தனை குணங்களும் ஒவ்வொன்றாக அவர் மீது வந்து வேகமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.இப்படியே போனால் அவர் விரைவிலேயே தாத்தாவாகிப் பின் பூட்டாவாகி விடுவாரோ என்று தோன்றுமளவிற்கு வேகம். 

அப்பாவை எதிர்ப்பதற்காகத் தான் புரட்சிப்படைகளில்  இருந்தார். சமூகப் போராட்டங்களில் பங்கெடுத்தார்.மார்க்சியம் படித்தார்.பக்தீன் வரையில் அறிவார். எல்லாம் ஆனார்.இப்போது அப்பாவின் உரு வெளிப்பட அப்பா வெளிச்சத்தில் இருக்கிறார்.அவரைக் காணவில்லை.எல்லாம் உரிந்து உரிந்து அப்பாவாக கடைசியில் மாறிவிட்டார்.கார்ல்மார்க்சும் ஒரு அப்பாதான் என்பதனை அவர் அறிவதற்கு பெண்குழந்தைகளைக் கல்யாணம் செய்து கொடுக்கும் அளவிற்கு வயதும் ,காலமும் அவசியப்பட்டிருக்கிறது.அப்பா என்பது ஒரு நபர் இல்லை போலும்.அப்பாவும் கூட அப்பாவை  வெறுத்தவராக இருந்திருக்கலாமோ? .அப்பாவை நேசித்துக் கொண்டே அப்பாவாக உறுமாறாமல் இருக்கமுடியும் என்பது வெற்றுக் கனவா?.அப்பாவை முழுமையான தீமை என்பதற்கில்லை.அவர் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கும் விதத்தின் பெயரே நமக்கு அப்பவாகத்  தோற்றம் காட்டுகிறது.அவர் குறையொன்றுமில்லை என்றாலும் அவரிலிருந்து விலகவேண்டும்.இல்லையெனில் கற்ற பாடங்கள் நம்மிடம் வெறுமனே தோற்றப்பிழையாகி விடும்  

அப்பாவாக மாறுவதென்றால் சிலர் வயோதிகம் நெருங்க நெருங்க அப்பாவின் உருவத்தை அப்படியே உரித்து வைத்தது போல அடைவார்கள்.அப்பாவின் உருவ அழகு என்னவாக இருந்தது என்பதைக் காண அவர்களுடைய சிறுவயது புகைப்படங்களை பார்த்தாலே போதுமானது.அதுவல்ல.அப்பாவாக மாறுதல் என்பது வேறு தளம்.அப்பாவின் குணாதிசயங்களை சென்று சேர்தல்.நமது கற்பனைகள் அகன்று   வாழ்வின் நடைமுறையில் கால்கள்   பாவும் போது அப்பா வந்து உதிக்கிறார்.

எனக்கும் அப்பாவிற்குமான பிரச்சனைகள் வேறு திறத்திலானவை.அப்பாவிற்கு குழந்தைகளில் என்மீதே விருப்பம் அதிகம் . அதன்  காரணமாகவே என்னைப்பற்றிய பாதுகாப்பின்மையும் அதிகம்.விருப்பத்தால் விலகியிருத்தல்தான் இருவருக்கும் வாய்த்தது. அப்பாவை கொலை செய்ய நினைத்திருக்கிறேன்.ஆனால் அவர் பேரில் அன்பு அதிகம்.அவரை வாழ்க்கை மீண்டும் மீண்டும் எதிர்க்க வைக்கிறதே என்பதே எனது பிரச்சனை.அவர் அவமானத்தால் நின்று தலைகுனியும் இடங்களில் என்னால் ஏதும் செய்யா இயலாமற் போகும் கொடுமையை வாழ்க்கை கொண்டிருக்கிறது.நாம் தடுக்க முற்பட்டால் நியாயம் தவறிப்  போகும் இடத்தில் அவர் காலத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்.அப்படி நேர்வது என்பது மகா அவஸ்தை.   மிகுந்த அன்பிற்குரிய ஒருவரை தொடர்ந்து எதிர்த்தே ஆகவேண்டிய வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருந்தால் நான் என்ன சொல்கிறேன் என்பது புரிய உங்களுக்குச் சுலபம்.அப்பா சில நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்.அதன்படி வாழவில்லையெனில் வாழ முடியாது என்பதே அவரது பாடம்.அவர் வாழ்ந்த விதத்திலிருந்து அவர் கற்றுக் கொடுக்கும் பாடமாக அது இருந்த போதிலும் கூட அதில் பொருத்திக் கொள்ளல் ஆகாது.ஆனால் அந்த கல்வி நல்லதுதான்.படித்துப் பின் தூரத்தே ஏறிய வேண்டிய  பாடத்தின் நற்பெயரே அப்பா என்பது. 

எப்படியிருப்பினும் முழுவதுமாக அப்பாவாக மாறுதல் என்பதுதான் உங்கள்  வயோதிகம்.நடைமுறைகள் தருகிற அழுத்தங்களிலிருந்து முன்னதுக்குள் தாவுதல் அது.அப்பாவைத் துண்டித்துக் கொண்டு வாழ்வை புதிய பாதையில் எதிர் கொள்வதே வாழ்க்கை.அவரது எச்சத்தை ஏற்றுக் கொள்கிற நிலை என்பது வெறும் பழக்கம்.அதற்கு வாழ வேண்டிய அவசியமில்லை.அதில் புதிய படைப்பூக்கம்   ஏதுமில்லை.குருவின் தலை கழன்று விழுகிற இடத்திலிருந்தே செயல் தொடங்குகிறது.அதற்கு கடுமையான வலிமை அவசியம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"