தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி

பாசிசத்தின்,தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி
ஓராண்டோ ஒன்றரை ஆண்டோ இருக்கும் இந்த கட்டுரையை எழுதி.தி இந்து நாளிதழில் வேறொரு தலைப்பில் இது வெளி வந்தது .நிறுவனங்களின் இறுக்கத்தின் காரணமாகவோ அல்லது அரசின் செவி கேளாத்தன்மை காரணமாகவோ மக்களிடம் பாசிசத்தின் மீதான கவர்ச்சி ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன் .அமர்த்தியா சென்னும் இது போன்ற தன்மை கொண்ட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.ஏகதேசம் அவரும் இந்த கட்டுரையிலிருப்பதைப் போன்ற கருத்தையே முன்வைக்கிறார். அரசின் செவிகேளா தன்மை காரணமாக தூய்மையை இலக்காகக் கொண்ட தனிமனித ஆளுமைகள் அவதார புருஷர்களைப் போன்று தோன்றி தங்களின் தரப்பில் நீதியை நிலை நிறுத்த வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.ஆனால் இத்தகைய நீதியை நிலை நாட்டவருகிற தனிமனித ஆளுமைகளும்,தூய்மைவாதிகளும் தான் சகலத்தையும் சுதந்திரத்தையும் முடக்கக் கூடிய பாசிசத்தை நோக்கி மக்களை நகர்த்தக் கூடிவர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை.அறிய வைக்கவேண்டிய அறிவுஜீவிகளும் இங்கே தொழில் படவில்லை என்பதே வேதனைக்குரியது.இன்றைய தினத்திலும் இதற்கு இருக்கும் பொருத்தப்பாடை முன்னிட்டு இந்த கட்டுரையைப் பதிகிறேன் .அரசின் செயல்படாதன்மை பாசிசத்திற்கு அழைத்து செல்லும்.ஆனால் அது இப்போதிருப்பதைக் காட்டிலும் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்
ஓரப்பார்வை
-------------------
எல்லாவற்றையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்கிற குரலை இப்பொழுதெல்லாம் தேனீர்க்கடை தொடங்கி பிரயாணங்களில் பொதுயிடங்களில் என்று சாதாரணமாகக் கேட்க முடிகிறது. இக்குரல் அறிந்து பேசுகிறதா இல்லை அறியாமல் பேசுகிறதா! அன்றாட வாழ்வில் தூய்மைப் படுத்தப்படாத அமைப்புகளின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்த வண்ணம்தான் முச்சந்ததிகளில் தூய்மைப்படுத்தும் கோரிக்கைகளை இக்குரல் முன்மொழிகின்றது. “வெளிநாடுகளில் இப்படியில்லை. இங்கே பாருங்கள் இந்தச் சாதாரண விஷயங்களுக்கெல்லாம்கூட காசு கேட்கிறார்கள்! காசு தராமல் ஒரு காரியமும் நடைபெறுவதில்லை இப்படி, இங்கு எதுவும் சுத்தமாக இல்லை” என அங்கலாய்கிறார்கள். தங்களுடைய அன்றாட உரிமைகள் காசு தராமல் சிபாரிசு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் பிழை என்று சொல்வதற்கில்லை. ஆனால் காசு கொடுக்கும் போதும் சரி கிடைக்கும் போதும் சரி இரண்டு நிலைகளிலும் இந்தப் பிரக்ஞை செயல்படுகிறதா என்று தெரியவில்லை. பிரக்ஞை அற்ற நிலையில் திரைப்படப்பாடல்களை முணுமுணுப்பதைப் போல ஒருவேளை எவரோ கூற, எவரோ கேட்டு, எவரோ பின்பற்றுவதை போன்ற வினோத பழக்கத்தின் மயக்கம் தானா இக்குரல்?
டாஸ்மாக் பார்களின் முன்னால் சசிபெருமாள் குடிகாரர்களின் கால்களில் விழுந்து கெஞ்சுவதைக் காட்சிகளில் பார்க்கும் போதெல்லாம் சங்கடமாய் இருக்கிறது. மகனின் கால்களில் அப்பா விழுவதைப் போன்ற சங்கடம். வீட்டு சாராயத்தையும் , கள் வகைகளையும், அரிசி பீர் பண்டங்களையும், மதுக்கஷாயத்தையும் துப்புரவு செய்துவிட்டு டாஸ்மாக் இன்று தமிழ்ச்சமூகத்தின் வயிறாக ஊதிப் பெருத்திருக்கிறது. டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்லும் அதே சமயத்தில் ஒழித்தகற்றப்பட்ட வீட்டுப் பண்டங்களை முதலில் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என கேட்க வேண்டாமா? பெப்சியை விரட்டவேண்டும் என்பது சரிதான் அதற்கு முன்னர் பூச்சு மருந்து கலக்காத இளநீரைத் திரும்பப் பெற வேண்டாமா?
காவல்நிலையங்கள், வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், கிராமப் பஞ்சாயத்துக்களுக்குச் செல்ல சுற்றுப்புறங்களிலிருப்பவர்கள் துணைக்கு அழைப்பார்கள். அவர்களுக்கு அங்கே ஏதேனும் சின்ன விஷயங்கள்தான் ஆக வேண்டியிருக்கும். அதற்கென்று துணைக்கு ஒரு ஆள் அவசியமேயில்லை. பரிச்சயமற்ற இடங்களில் தேனீர் அருந்துவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கெல்லாம்கூட துணைக்கு ஆள் தேவைப்படுகிறார்கள். துணைக்கு ஆளில்லாமல் இருந்தால் பல சமயங்களில் காரியங்கள் செவ்வனே நடந்துவிடக்கூடியவையும்கூட. காரியங்களைக் காட்டிலும் பிற விஷயங்களில் நமக்கு ஆர்வம் அதிகம். நம்மைச் சமன் செய்து கொள்வதற்கும், தன்னம்பிக்கை இழக்காமலிருப்பதற்கும் காரியங்களுக்குத் தொடர்பற்ற எவ்வளவோ விஷயங்கள் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. நேரடியாக காரியத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக ஆள் தேடுவதில் சுவாரஸ்யம் அதன் வழியாகவே சிக்கிக் கொள்கிறார்கள். சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். எனினும் அவ்வழியைத்தான் வெகுமக்கள் தேர்வு செய்கிறார்கள். அதுதான் வசதி என்று நம்புகிறார்கள். வெகுமக்கள் தேர்வு செய்யும் விஷயங்கள் எளிமையானவை அல்ல. எளிதில் துலங்க மறுப்பவை அவை.
உறவு முறைகளற்ற ஓரிடத்தில் ஒரு போதும் சுலபமாக, தனித்திருக்க முடிவதில்லை. உறவு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் எதையும் எதிர் கொள்ள முடிவதில்லை. பகிர்தலற்ற இடங்களில் காசு கொடுத்து உறவைப் பெற விரும்புகிறோம். பகிர்தல் சாத்தியமற்ற இடத்தில் காசுதான் எந்திரத்தில் எண்ணெய் போல் செயல்படுகிறது. இது நமது அடிப்படைப்பண்பு. காலங்காலமாகக் கற்று வந்தது. கோயில் குளங்களுக்கு நாம் செல்லும் விதம், சுற்றுலாக்களுக்குச் செல்லும் விதம் போன்றவை இதைத்தான் உணர்த்துகிறது. பின்னர் விருப்பத்தின் குறைபாடுகளைத்தான் புலம்பவும் செய்கிறோம். அடிப்படைப் பண்புகளையெல்லாம் ஒழித்தகற்றி விடவேண்டும் என்கிற ஒரு அவசியமும் இல்லை. அவை நமது சாராம்சத்தின் ரகசியங்கள்.
உங்களுக்குத் தரகர்கள் தேவைப்படும் சமயங்களில் விலை மலிவான தரகர்களை ஒருபோதும் ஏற்பாடு செய்யாதீர்கள் என்றே நண்பர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். மலிவான தரகர்கள் உங்களைத் தலைசுற்றச் செய்துவிடுவார்கள். இரண்டு குழப்பம் ஒன்று சேர்ந்தால் மகா குழப்பம்தான். ஏதேனும் ஒன்று தெளிவாகயிருந்தாகவேண்டும். கடுந்தெளிவும் கடும் ஆபத்து. அமைப்பின் எந்தப் பகுதியில் சுண்டவேண்டும் என்பதை நன்கறிந்தவரே நல்ல தரகர். வீணான அலைச்சல்களுக்கு அவர் வாய்ப்பை ஏற்படுத்துவதில்லை. காவல் நிலையங்களுக்கு செல்லும்போது மலிவான தரகன் கண்கூடாகவே உபத்திரவமாக மாறுவதைக் காண்பீர்கள். அவன் வேண்டாத தகவல்களையெல்லாம் சொல்லி மழுங்கடித்து விடுவான். அப்போது சந்தர்ப்பம் உங்களுக்கு எதிராகக்கூட மாறிவிடும். காசு கொடுப்பது என்பது உத்தி. அது வசப்படவேண்டும். எப்படி கொடுப்பது, எதைக் கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்று தெரியவேண்டும். எதில் பசித்திருக்கிறார்களோ அதைக் கொடுப்பதே தானம். வீணே நீட்டினால் வில்லங்கமாகிவிடும். பூடம் மாறி சாமியாடுவதைப் போல. காசு வாங்கும் ஆண் அதிகாரிகளுக்கும் பெண் அதிகாரிகளுக்குமிடையில்கூட வேறுபாடுகள் இருக்கின்றன. பெண் அதிகாரிகள் தயங்குவதில்லை. ஆண் அதிகாரிகளின் அளவுக்கு கலங்குவதுமில்லை. கூச்சப்படுவதுமில்லை. பெறுவதும் பதவியின், அதிகாரத்தின் ஒரு பகுதிதான் என்பதில் அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள் கொடுக்கும்போது தவறுதலாக ஓரிரு இதழ்கள் குறைந்து போனாலும் கூட பெண் அதிகாரிகளிடம் செல்லுபடியாகாது. காரியம் நடைபெறவில்லையே என மறுமுறை நீங்கள் முதலிலிருந்தே தொடங்கும்போதுதான் ஓரிரு இதழ்கள் குறைந்துபோன விஷயம் உங்களுக்கு தெரியவரும் அரிதாகத்தான் சிலர் சரிபார்த்தவுடனேயே முகத்துக்கு நேராக தெரியப்படுத்துபவர்கள்.
காசைப் பெற்றுக் கொள்வதில் பல தினுசுகள் உள்ளன. “நானாகக் கேட்பதில்லை, தருவதை வாங்கிக் கொள்வேன்” என ஒருவர் கூறிவிட்டாரெனில் அவரைத்தான் பொருத்தமானவராகத் தேர்வு செய்வேன். அவர் கூறுவது பொய் என்பது தெரியும் அவ்விடத்தின் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அறிந்தவர் அவர் தான். நிர்ணயிக்கப்பட்ட தொகையைத்தான் அங்கே ஒருவர் கொடுக்கவோ பெறவோ முடியும். முதலிலேயே இவரைச் சென்றடைவது நமது அதிர்ஷடத்தைப் பொறுத்தது இவர்தான் நமக்கு சூட்சுமத்தின் வாசற்கதவைத் திறக்கிறார். சிலர் இப்படி வெளிப்படுத்தாமல் போக்கு காட்டிக் கொண்டே போவார்கள். ஒரு சிக்கலை அவிழ்த்தால் வேறு ஒரு முடிச்சு விழும். அவர்களைக் கையாளும் வழிமுறை வேறு. இவர்கள் இப்படியிருந்து கோட்டைக் கொத்தளங்களெல்லாம் ஒன்றும் வாங்கி விடுவதில்லை. வசிப்பதற்கு வசதியான ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதே பெரும்பாடு. சமூக மதிப்பும் கிடையாது. ஐநூறு ரூபாயைக் கொடுத்தவன் பத்துபேரிடம் சொல்வானெனில் நூறு ரூபாய் கொடுத்தவன் நூறு பேரிடம் சொல்வான். இவர்களைக் காட்டித்தர ஆர்வக் கோளாறில் சில இளைஞர்கள் தொழில் நுட்பத் திறமை கொண்டு முன்வந்து விடுகிறார்கள். காட்டிக் கொடுப்பதால் அவர்கள் குடும்பத்தோடு நிர்மூலமாகிவிடுகிறார்கள். துக்கம் தாழாமல் குடும்பத்தோடுத் தூக்கிட்டு செத்தவர்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள். இவர்களொன்றும் நாட்டையே கூறு போட்டு விற்கும் கொள்ளைக்காரர்கள் கிடையாது. நமது சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சினன் போல நமது ஆட்கள் தான். நம்மை அன்றாட வாழ்வின் அபத்தமான தருணங்களில் இருந்து காப்பாற்றும் ஈரப்பசை இவர்கள். வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே அரசாங்கம் “இவர்களுக்குக் கிடைக்கும்” என்ற நம்பிக்கையோடு பல பதவிகளுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வருகிறது. பொறுப்பும் பதவியும் பெரிதாக இருக்கும் நிலைமை மோசமாக இருக்கும். கிராம நிர்வாக அதிகாரிகளில் பலர் ஓய்வு காலத்தில் பென்ஷன் கூட வாங்க முடியாத அளவுக்கு அரசாங்கம் காத்திருந்து தண்டித்து விடுகிறது கடைநிலை செய்தியாளனின் நிலையும் இதுதான் வழியில்லாமல் அவன் வட்டார அதிகாரத் தரகனாகி விடுகிறான். இவனில்லாமல் ஒரு நாளிதழ் இல்லை. பெருஞ்செய்திகளுக்காக நாளிதழைப் பிரயோகிப்பவர்கள் குறைவு. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு வட்டாரச் செய்தியாளளின் நிலை இன்று எப்படியிருக்கிறது? இப்படித்தான் பல தொழில்கள் பதவிகள். எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தும்போது அல்லது சீரமைக்கும்போது சில பறவையினங்கள் விலங்கினங்கள் அழிந்துவிடக்கூடும் அவை ஏதேனும் ஒருவிதத்தில் உங்களைத் தற்காத்துக் கொண்டிருந்தவையாகக்கூட இருக்கலாம்.
பல சமயங்களில் எந்தத் துறையானலும் சரி காசு வாங்குகிற ஆண் சிப்பந்திகள் ஓரளவுக்கு லகுவாக இருக்கிறார்கள். காசு சென்று சேர்ந்தவுடன் அதிகாரத்தின் சிரசிலிருந்து உடனடியாக இறங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் வளைவு நெளிவுகள் தெரிகின்றன. அழும் குரலுக்கு செவி சாய்க்கத் தெரிகிறது. கறாறாயிருப்பவர்களுக்கு அதிகாரம் தரும் போதை மட்டுமே இலக்கு. இதனை வெகுமக்கள் நன்கறிந்து வைத்திருக்கிறார்கள். அதிகாரப் பசியைத் தவிர்த்து பிற எல்லாவித பசியையும் குணப்படுத்த மக்கள் தயார்தான். சிறிய தொகையைக்கூட பெற்றுக்கொள்ளாமல் ஒருவர் கற்பைக் காப்பாற்றுகிறார் எனில் ஒன்றில் அவர் பின்னாட்களில் “வாங்கவிருக்கிற பெருந்தொகைக்குப்” பயிற்சி எடுப்பவராக இருக்க வேண்டும். அல்லது அளவுக்கதிகமான அதிகாரப் பசியில் துன்புறுபவர்களாக இருக்க வேண்டும். பொதுவாகவே நாம் அதிகார பசி நிறைந்தவர்கள். நான்கு பேருக்கு நாம் தொண்டூழியம் செய்வதைப் போல நாற்பது பேர் நமக்கு அடிமையாயிருக்க எண்ணுபவர்கள். பதவியின் அதிகாரத்தைக் காட்டிலும் அதிக பசி. அதனால்தான் பதவியின் அதிகாரத்தில் பொலிவு கூடி நடப்பவர்கள் இறங்கியதும் வெற்றுத் தோடாகிவிடுகிறார்கள். சிலருக்கு ஒபாமா அளவுக்கு அதிகாரத்தைக் கொடுத்தாலும் கூட பற்றாது அவ்வளவு வெற்றிடம் இருக்கும். அவர்களின் கைகளில் சிக்காமலிருக்கவேண்டும். சுண்டக் காய்ச்சி விடுபவர்கள் அவர்கள். மாறாக “பெறும் ஆண்களோடு” இணைந்து குடிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்பாடுமாயின் அவர்கள் படும் துன்பங்களைக் கூறி கதறி அழுவதைப் பார்க்க முடியும். முற்றிலுமாக கற்பைக் காப்பாற்றி வருபவர்களிடம் இரண்டு வித அதிகாரங்கள் சேர்ந்துவிடுகின்றன. பதவி ஒரு அதிகாரமெனில் ஒழுகும் கற்பு மற்றொரு அதிகாரம். அவர்களிடம் எப்போதும் நமது அன்றாட உரிமைகளும் கோரிக்கைகளும் குற்றவாளிகளின் தன்மையை அடைந்துவிடுகின்றன. மாறாக “பெறுகிறவர்” எளிதாக குறறவுணர்வை அடைந்து விடுகின்றார். காரியங்களைச் செய்து முடிப்பது வரையில் அவரால் விடுபடமுடிவதில்லை. வெகுமக்கள் காசு பெறாத கற்பு நிறைந்த அதிகாரத்தைப் போற்றுகிறார்கள் என்பது உண்மைதான். பேருண்மை என்னவெனில் அவர்கள் அதனை விரும்புவதில்லை. ஏனெனில் தூய்மை என்பது அறிவிலும், தூய்மையின்மை என்பது இருதயத்திலும் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கின்றன. போற்றுதலுக்குரியவற்றிலிருந்து உடனடியாக விலகி விடுவதே நமது உளவியல். போற்றுதலுக்குரியவற்றுக்கு உடனடியாக மதிப்பு தந்து சடங்காக்கி விட்டு விலகிச் சென்று விடுபவர்கள் மக்கள். போற்றுதலென்பது நமக்குக்கொரு சடங்கு. போற்றுதலுக்குரியவற்றுக்கு நுக்கு மக்களின் அன்றாட வாழ்வோடு இசைவு கிடையாது. யோசித்துப் பாருங்கள் கண்ணகிதான் நமது மதிப்பிற்குரியவள். அதனாலேயே வணங்குதலுக்குரியவளும்கூட சந்தேகமேயில்லை. ஆனால் மாதவிதான் எப்போதும் நேசித்தலுக்குரியவளாக இருக்கிறாள். ஏராளமான குழந்தைகளுக்கு மாதவி எனப் பெயர் சூட்டுகிறோம். கண்ணகி என்று ஓரிருவர் தான் உண்டு

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"