மோதல் கொலை போல இது ஒரு தற்கொலைக் கொலை ! ?

மோதல் கொலை போல இது ஒரு தற்கொலைக் கொலை !
ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியை தருகிறது.அரசியல் அதிகார அணுகுமுறைகள் கேவலமான நிலையை தமிழ்நாட்டில் அடைந்திருப்பதற்கு ராம்குமார் தற்கொலை ஒரு பெரிய சாட்சி.தமிழ்நாட்டில் ஆளத் தகுதி கொண்ட தலைவர்களே இல்லை என்பது காலம் செல்லச் செல்ல நிரூபணம் ஆகிக் கொண்டே வருகிறது.அதிகார அமைப்புகளை அரசாங்கத்தினர் அகந்தையின் கொடூர கரங்களால் வதம் செய்து வைத்திருக்கிறார்கள்.இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கம் என்கிற பாகுபாடுகள் எல்லாம் இல்லை .அமைப்புகளின் மீதான ; அரசியல் சார்பு நிலைகளைத் தாண்டிய பரிசீலனையே தற்போதைய அவசியம். அரசு அமைப்புகளின் மலிவான ,மோசமான நடத்தைகளில் நாம் எல்லோருமே திறன்பட பழகிவிட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிற காரியம் இது.போலி வழக்குகள்,போலி மோதல் படுகொலைகள் இவற்றையெல்லாம் தாண்டி சிறையில் தற்கொலைக் கொலை என்னும் புதிய தொழில்நுட்பத்திற்கு நகர்ந்திருக்கிறோம்.
உண்மையாகவே அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த தமிழ் சமூகத்தின் பெரியவர்கள் ,
சமூக நலம் விரும்பிகள் அரசியல் சார்பின்றி இத்தகைய அவலங்களை ; எதிர்காலத்திலும் அமைப்புகள் நிகழ்த்த இயலாத வண்ணம் ; தடுத்து நிறுத்த ஏதேனும் ஏற்பாடுகளை செய்வதற்கும் தேவைப்பட்டால் சில தியாகங்களையும் துணிவதற்கும் முன்வராவிட்டால் தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரமும் அமைப்பும் மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரமும் , அமைப்பும் ஏதோ விபரீதமான கேவலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் , துணிகிறார்கள் என்பது அச்சத்தை உருவாக்குகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கு இழுக்கு. அமைப்பின் வன்மம் இந்த தற்கொலைக் கொலை.வழக்குகளின் உண்மைத் தன்மையை எதிர்கொள்ள இயலாத இதுபோன்ற பயங்கரமான வழிமுறைகள் ஜனநாயகத்திற்கு பேராபத்து.
அந்த பையன் திருச்சியைத் தாண்டி செல்லும்போதே போலீசார் கொன்றுவிடுவார்களோ என்று பயந்ததின் உள்ளுணர்வு உண்மையென்றாகி விட்டது.இது தமிழ்நாட்டின் பரிதாபகரமானதொரு நிலை.நீதியை இடைநிறுத்ததில் தற்கொலைக் கொலை செய்வது என்பது கொடூரத்தின் உச்சம் . தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எனது கடுமையான கண்டனங்கள்.சிறைச் சாலைகள் அரசு பயங்கரவாதத்திற்கான கூடாரங்கள் இல்லை.
ராம்குமாரின் தந்தைக்கும் தாய்க்கும் சகோதரிக்கும் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி
ராம்குமாரின் ஆன்மாவிற்கு என்னுடைய கவிதாஞ்சலி
#
"ரஸ்கோல்நிக்கொவ் மீண்டும் மீண்டும்
பராமரிப்பிற்கு வந்து செல்கிறார்
எவனோ ஒருவன் சுற்றி வளைத்து
கைது செய்யப்படும் போது
எவனோ ஒருவன் தூக்கிலிடப்படும் போது
எவனோ ஒருவன் தப்பி ஊர் தாண்டி ஊர்
துரத்தப்படும் போது
எவனோ ஒருவன் பரிபூரணக் கண்காணிப்பின் முன்பாக
நிற்க வைக்கப்படும் போது
வலிப்பு நோயின் கூர்மையான கொப்புளங்கள்
கொதிக்கத் தொடங்குகின்றன
மருந்து மாத்திரைகள் எடுத்து
எனதுடலில் பதுங்கி
மீண்டும் தஸ்தேயேவெஸ்கி
துயில் கொள்ளும் வரையில்"
[ராம்குமாரின் ஆன்மாவிற்கு சமர்ப்பணம் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"